Published : 25 Jul 2023 10:24 AM
Last Updated : 25 Jul 2023 10:24 AM

கோவை | விதிமீறும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம்

கோவை-அவிநாசி சாலையில் லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகே ‘யு டர்ன்’ செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளபோதே விதிமீறி இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள். படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவை - அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக, அம்மன் குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி பதிவில் கூறியிருப்பதாவது: அவிநாசி சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீஸ் சார்பில் சிக்னல்களில் அதிக நேரம் நிற்காமல் செல்லக் கூடிய வகையில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே புலியகுளம் பகுதியில் இருந்து அண்ணா சிலை மற்றும் காந்திபுரம் செல்லும் வாகனங்கள் ரேஸ்கோர்ஸ் சந்திப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள ‘யு டர்ன்’ வசதியை பயன்படுத்த வேண்டும்.

ஆனால் அதற்கு முன்னதாகவே ‘யு டர்ன்’ செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்ட இடத்தில் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் விதிமீறி திரும்புகின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளபோதே விதிமீறலில் பல வாகன ஓட்டிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சிலரின் இதுபோன்ற செயல்களால் விதிமுறைகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளும் குழப்பமடைந்து விதிமீறி செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x