Published : 25 Jul 2023 08:45 AM
Last Updated : 25 Jul 2023 08:45 AM

பயன்பாடின்றி முடங்கிய காஞ்சி அண்ணா டிஜிட்டல் நூலகம்

டிஜிட்டல் நூலகப் பிரிவு.

காஞ்சிபுரம்: மதுரையில் கலைஞர் பெயரில் பிரம்மாண்ட நூலகம் திறந்த தமிழக அரசுக்கு காஞ்சிபுரத்தில் அண்ணா பெயரில் உள்ள டிஜிட்டல் கிளை நூலகம் செயல்பாடு இல்லாமல் முடங்கிக் கிடப்பது தெரியுமா என கேள்வி எழுப்புகின்றனர் வாசிப்பாளர்கள். இந்த நூலகம் செயல்படாததால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பலர் சிரமத்தை சந்திக்கின்றனர்.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில் அண்ணா கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கிளை நூலகமானது மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நூலகத்தில் ஒன்றாகும். இந்த நூலகத்தில் போட்டித் தேர்வுகள், பொது அறிவுக்கு தேவையான புத்தகங்கள் உட்பட அனைத்து விதமான புத்தகங்களும் இருப்பதால் தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்த நூலகத்தை வாசகர்கள் அதிகம் பயன்படுத்துவதால் இந்த நூலகத்தின் ஒரு பகுதியில் டிஜிட்டல் நூலகம் தொடங்க நூலகத் துறை முடிவு செய்தது. அதன்படி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் நூலகம் தொடங்கப்பட்டது. இந்த டிஜிட்டல் நூலகத்தில் 25 கம்ப்யூட்டர்கள் மற்றும் இணையதள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பார்வையற்றோர் படிக்க பிரெய்லி புத்தகங்கள் சிறுவர் பகுதி என பல்வேறு வசதிகளும் இந்த நூலகத்தில் உள்ளன.

காட்சிப் பொருளான கம்ப்யூட்டர்கள்...

ஆனாலும் இந்த டிஜிட்டல் நூலகத்தை பராமரிப்பதற்கான நூலகர் பணியிடம் இல்லாததால் கணிப்பொறிகளை வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவருக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட இந்த நூலகம் தற்போது செயல்பாடு இன்றி முடங்கக் கிடக்கிறது. இதனால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தினந்தோறும் இந்த நூலகத்துக்கு வந்து செயல்பாடு இல்லாததால் வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர்.

சில காலம் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு இயக்கப்பட்ட இந்த நூலகம் தற்போது அவர்களும் பணியில் இல்லாததால் முற்றிலும் முடங்கி கிடக்கிறது. இணையதள வசதிகள் மற்றும் கம்ப்யூட்டர்கள் இருந்தும் பணியாளர் இல்லாததால் டிஜிட்டல் நூலகம் பயன்பாடு இல்லாமல் போனது வேதனை என புத்தகப் பிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நூலகத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கே.கிருஷ்ணமூர்த்தி

இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, டிஜிட்டல் நூலகத்தை காஞ்சிபுரத்தில் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது. ஆனால் அவை செயல்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. உடனடியாக இதற்கு தேவையான பணியாளர்களை நியமித்து இந்த டிஜிட்டல் நூலகத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

ஜி.வெங்கடேசன்

இதேபோல் சமூக ஆர்வலர் ஜி.வெங்கடேசன் கூறும்போது, பணியாளர்கள் நியமித்து உடனடியாக அந்த டிஜிட்டல் நூலகத்தை யன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் அதை போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் பயன்படுத்தும் வகையில் உரிய வேகத்துடன் கூடிய இணையதள வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட நூலகர் இரா.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, அதுதொடர்பான விவரங்களை அந்தக் கிளை நூலகரை கேளுங்கள். இதுபற்றிஆட்சியருக்கு பதில் அளித்து எழுதிவிட்டேன். எத்தனை பேருக்குதான் பதில் சொல்வது. எனக்கு பல வேலைகள் இருப்பதாக தெரிவித்தார்.

வாசகர்கள் பலர் கூறும்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரு மாவட்ட நூலகர் மட்டுமே உள்ளார். இதனால் காஞ்சிபுரம் மாவட்ட நூலகங்கள் முறையாக கண்காணிக்கப்படுவதில்லையோ என்ற சந்தேகம் உள்ளது. உடனடியாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கென தனியாக ஒரு மாவட்ட நூலகரை நியமிக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x