Published : 25 Jul 2023 12:10 PM
Last Updated : 25 Jul 2023 12:10 PM

மணிப்பூர் கொடூரம் | அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம்?

எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி: மணிப்பூர் கொடூரம் தொடர்பாக மத்திய அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இண்டியா கூட்டணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக புதன்கிழமை மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்செல்லும் வீடியோ ஒன்று வெளியாக நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாடாளுன்ற முடக்கம்: இதனைத் தொடர்ந்து.‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்: இந்த நிலையில், நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் தங்களது கோரிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கப் போவது இல்லை என்பதால், அமளிகளுக்கு இடையில் அலுவல்களை நடத்த அரசு முடிவெடுத்திருந்தது. இதனிடையே இண்டியா கூட்டணி மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இரு அவைகளும் ஒத்திவைப்பு: இதனிடையே, மக்களவை இன்று 4வது நாளாக கூடியதும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. சபாநாயகர் ஓம் பிர்லா அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதிகாத்து இருக்கையில் அமருமாறும் கூறினார். அவையில் தொடர்ந்து கூச்சலிடுவதால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்றும், முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பவே, சபாநாயகர் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதேபோல் மாநிலங்களவையிலும் அமளி நீடித்ததால் அவையை 12 மணி வரை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x