Last Updated : 24 Jul, 2023 01:38 PM

 

Published : 24 Jul 2023 01:38 PM
Last Updated : 24 Jul 2023 01:38 PM

திறப்பு விழாக்கள் கண்டும் திறக்கப்படாத நூலகம் @ கோவை

கோவை: வாசிப்பு என்பது பொழுதுபோக்கல்ல, அது ஓர்அனுபவம். அந்த அனுபவத்தை நமக்கு அளிப்பவை நூலகங்கள். ஆனால், பொழுதுபோக்குக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை, நூலகத்துக்கு அளிக்கிறோமோ என்றால், அதற்கான பதில் ‘இல்லை’. இதற்கு உதாரணமாக, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், ஆண்டுக்கணக்கில் பூட்டியே கிடக்கும் கோவை மலுமிச்சம்பட்டி முருகன் நகர் நூலகத்தை குறிப்பிடலாம்.

முருகன் நகரில் உள்ள ரிசர்வ் சைட்டில் இருந்த பொது நூலக கட்டிடத்தின் மேல் செடிகள் முளைத்து, விரிசல் அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்க மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த நல் ஒளி பொதுநல சங்கத்தினர் முன்வந்தனர்.

பின்னர், மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த 2017-ம் ஆண்டு பல்வேறு நிபந்தனை களுடன் அனுமதி வழங்கினார். அதில், “நூலக விரிவாக்கப் பணிக்கு நிதி வழங்கப் படமாட்டாது. கட்டிடத்தை நூலகத்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கட்டிடம் கட்டியபின் ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்பன உள்ளிட்டநிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன.

அதன்பிறகு, தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன், ரூ.24 லட்சம் செலவில் நூலகம் கட்டப்பட்டது. நூலகத்துக்கு முன்பு குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காவும் அமைக்கப்பட்டது. ஆனால், இருமுறை திறப்பு விழாக்கள் கண்டும், இன்னும் அந்த நூலகம் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தபாடில்லை.

இது தொடர்பாக, நல்ஒளி பொதுநலச் சங்கத்தினர் கூறும்போது, “பணிகள் நிறைவடைந்து நூலக கட்டிடத்தை திறக்கும் தருவாயில், நாடாளுமன்ற தேர்தல் வந்ததால், அதைக் காரணம்காட்டி அப்போது கிராம நிர்வாக அலுவலர் நூலகத்தை திறக்கவிடாமல் பூட்டிவிட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தை நாடினோம்.

பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவுகணினி நூலகம் மற்றும் பொது விளையாட்டு பூங்கா கடந்த 2019 ஜூன் 7-ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், திறக்கப்பட்ட நாளன்று மட்டுமே செயல்பட்டது. பின்னர், மூடப்பட்டது. பூட்டிக்கிடந்த நூலகத்தை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு பூஜையெல்லாம் போட்டு மீண்டும் ஒருமுறை திறந்தனர்.

இருப்பினும், இதுநாள் வரை நூலகம் செயல்படவில்லை. நூலக கட்டிடமும், நூல்களும் வீணாகி வருகின்றன. அந்த நூலகத்தை டிஜிட்டல் நூலகமாக தரம் உயர்த்த 3 கணினிகள், எல்.இ.டி திரை, டேபிள், சேர் வழங்கி, வயரிங் வேலைகளை செய்திருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x