Published : 20 Jul 2023 07:19 PM
Last Updated : 20 Jul 2023 07:19 PM

கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் 24 மணி நேர குடிநீர் விநியோகத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் திட்டத்துக்கு சென்னை குடிநீர் வாரியம் மற்றும் ஒடிசா மாநில நீர்க் கழகம் (WATCO) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-10 (கோடம்பாக்கம்) மற்றும் மண்டலம்-13 (அடையாறு) மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் திட்டத்துக்கு சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மற்றும் ஒடிசா மாநில நீர்க் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (20.07.2023) தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கையெழுத்தானது.

ரூ.1958.25 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து குடிநீர் பகிர்மான வலையமைப்பை வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதுக்கு திட்ட மேலாண்மை ஆலோசகராக ஒடிசா மாநில நீர்க் கழகத்துக்கு, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் கடந்த மாதம் பணி ஆணை வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் பழுதடைந்துள்ள பழைய குடிநீர்க் குழாய்களை மாற்றியமைத்து, விடுபட்ட தெருக்களில் புதிதாக குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் கொள்ளளவு அதிகரிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு எண்.127 முதல் 142-க்குட்பட்ட கோடம்பாக்கம், வடபழனி, மேற்கு மாம்பலம், தியாகராயர் நகர், சி.ஐ.டி நகர், சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, அசோக் நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், நெசப்பாக்கம்(பகுதி), சாலிகிராமம், விருகம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களும், அடையாறு மண்டலம், வார்டு எண்.168 முதல் 180-க்குட்பட்ட ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், இந்திரா நகர், கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர், வேளச்சேரி, தரமணி மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களும் பயன் பெறுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x