Published : 15 Jul 2023 05:29 AM
Last Updated : 15 Jul 2023 05:29 AM

அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை

ஆளூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் லதா சந்திரன் வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே, அதிமுக முன்னாள் பேரூராட்சித் தலைவி லதா சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

நாகர்கோவில் அருகேயுள்ள சுங்கான்கடையைச் சேர்ந்தவர்லதா சந்திரன். அதிமுகவைச் சேர்ந்த இவர், கடந்த ஆட்சியில் ஆளூர் பேரூராட்சித் தலைவராகவும், ஆளுர் பேரூர் அதிமுக செயலராகவும் இருந்தார். தற்போது வீராணி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

பேரூராட்சித் தலைவராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், லதா சந்திரன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீஸார் நேற்று காலை 6 மணியளவில், சுங்கான்கடையில் உள்ள லதா சந்திரன் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீட்டில் லதா சந்திரன், அவரது கணவர் மற்றும் மகன்கள் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும், பேரூராட்சித் தலைவராக இருந்த காலத்தில் லதா சந்திரன் வாங்கிய சொத்துகளின் விவரம் மற்றும் அதற்கான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x