Published : 11 Jul 2023 10:35 PM
Last Updated : 11 Jul 2023 10:35 PM

கோவில்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் திடீர் மறியல்: போலீஸார் தடியடி

மறியல் போராட்டம் காரணமாக நான்குவழிச்சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

கோவில்பட்டி: சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள முத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரியாதை செலுத்த ஏராளமானோர் இருச்சக்கர வாகனங்கள், கார்களில் வந்தனர். இதையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் இதற்காக மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் விலக்கில் உள்ள அழகுமுத்துக்கோன் நினைவு வளைவு பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்பிக் கொண்டிருந்தனர். இங்குள்ள அழகுமுத்துககோன் நினைவு வளைவு புதுப்பிக்கும் பணி நடப்பதால், அதனை சுற்றி மரச்சாரம் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த சில இளைஞர்கள் அந்த மரச்சாரம் வழியாக நினைவு வளைவில் ஏறி, தங்களது அமைப்பு கொடியை அங்கு வைத்தனர்.

இதனை பார்த்த போலீஸார் அவர்களை உடனடியாக கீழே இறங்கி வரும்படி கூறினார். அவர்கள் இறங்கி வந்தவுடன் அந்த இளைஞர்களை போலீஸார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நான்கு வழிச் சாலையில் இருந்து கட்டாலங்குளம் விலக்கு பகுதியில் திரும்பிய வாகனங்கள் ஆங்காங்கே நின்றன. மேலும், நான்குவழிச் சாலையில் எதிர் திசையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி கலைய செய்தனர். இதை பார்த்த மற்றவர்கள் போலீஸாரை கண்டித்து மதுரை - திருநெல்வேலி நான்குவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் போலீஸார் மீது கல்வீசியும் தாக்கினர். போலீஸார் எச்சரிக்கையை மீறி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவே, மீண்டும் தடியடி நடத்தப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது. இந்த தடியடியில் ஒரு சிலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இந்த போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, மதுரை மார்க்கமாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் அஜாக்கிரதை: தேசிய நான்குவழிச் சாலையில் இருந்து கட்டாலங்குளம் திரும்பும் விலக்கு பகுதியில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு வளைவு புதுப்பிக்கும் பணிக்காக மரச்சாரம் கட்டப்பட்டுள்ளது. இதனை சுற்றித்தான் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இளைஞர்கள் இந்த மரச்சாரம் வழியாக மேலே செல்லும் வரையில் போலீஸார் அஜாக்கிரதையாக இருந்ததால் தான் போராட்டம், தடியடி போன்ற அசம்பாவிதங்கள் நடந்தன என பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இந்த விழா நடைபெறுவதால், அந்த மரச்சாரத்தை தற்காலிகமாகக்கூட அகற்றியிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்ட முடிவுகள் பின்பற்றபடவில்லை: வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா தொடர்பாக கோட்டாட்சியர், டி.எஸ்.பி. ஆகியோர் தலைமையில் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி கிடையாது. வாகனங்களின் கூரை மீது அமர்ந்து வரக்கூடாது என அறிவுறுத்ப்பட்டிருந்தது. ஆனால், நேற்றைய விழாவுக்கு வந்த பெரும்பாலானோர் வாகனங்களின் கூரைகளிலும், இருசக்கர வாகனங்களில் அதுவும் 3 பேராக வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x