Last Updated : 11 Jul, 2023 06:34 PM

 

Published : 11 Jul 2023 06:34 PM
Last Updated : 11 Jul 2023 06:34 PM

அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு: சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை.

மதுரை: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவோருக்கு மருந்துச் சீட்டு வழங்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சிந்துஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'எனது பிறந்து 45 நாளான குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக காரைக்குடி நகராட்சி அங்கன்வாடி மையத்துக்கு சென்றேன். அங்கு குழந்தைக்கு செவிலியர் தடுப்பூசி போட்டு, டானிக் ஒன்றை கொடுத்து அதை 6 மணி நேரத்துக்கு ஒருமுறை 3 எம்எல் அளவு வீதம் குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்றார். அதன்படி குழந்தைக்கு டானிக் கொடுத்தபோது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட செவிலியரிடம் கேட்டபோது அலட்சியமாக பதிலளித்தார்.

இதனால் தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றேன். அப்போது குழந்தைக்கு பாரசிட்டமால் டானிக்கை அளவுக்கு அதிகமாக வழங்கியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவர் தெரிவித்தார். அரசு மருத்துவர், செவிலியரின் அலட்சியம் காரணமாக என் குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், தமிழக முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரை குறித்த மருத்துவ சீட்டு தனியே வழங்கப்படுவதில்லை. இதனால் எப்படி மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும் எனத் தெரியாமல் பலரின் உடல் நிலை பாதிப்படைகிறது. எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வருவோருக்கு மருந்து, மாத்திரை குறித்து சீட்டு வழங்கவும் உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடைபெறுகிறது'' என்றார். பின்னர் மனு தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x