Published : 07 Jul 2023 05:13 PM
Last Updated : 07 Jul 2023 05:13 PM

கப்பல்கள் தரை தட்டி நிற்பதை தவிர்க்க பாம்பன் கால்வாய் தூர்வாரப்படுமா?

ராமேசுவரம்: நாட்டின் மிகப் பழமையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த ஊர்களில் பாம்பன் துறைமுகமும் ஒன்று. 15-ம் நூற்றாண்டில் ராமேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும், பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரையில் பயணம் செய்யும் அளவில்தான் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது.

கி.பி.1480 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய புயலின் காரணமாக, இயற்கையாகவே மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை இடையே பாம்பன் கால்வாய் பெரிதாக உருவாகியது. மேலும், பாம்பனும், மண்டபமும் பாம்பன் கால்வாய் மூலம் துண்டிக்கப்பட்டு, தனித் தீவாக ராமேசுவரம் உருவானது.

பாம்பனுக்கு அருகில் உள்ள குருசடை தீவு மற்றும் கோரி தீவு ஆகிய தீவுகளுக்கு இடையில் உள்ள நீர்ப்பரப்பிலிருந்து தொடங்கி, பாம்பன் சாலை பாலம் மற்றும் ரயில் பாலத்தை கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் வரை பாம்பன் கால்வாயின் வழித்தடம் உள்ளது. 1854ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் முதன்முறையாக 4,400 அடி நீளத்துக்கு பாம்பன் கால்வாய் தூர்வாரப்பட்டது.

அதன் பின்னர், 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடி புயல் உள்ளிட்ட பல்வேறு புயல்களின்போது, மணலால் மூடப்பட்டு பாம்பன் கால்வாய் வழித்தடத்தின் ஆழம் தற்போது 2 மீட்டர் அளவுக்கும் குறைந்துவிட்டது. பாம்பன் கால்வாய் மண் நிறைந்து காணப்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் கப்பல்கள் கால்வாயை கடப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

பாம்பன் கடல் பகுதியில் தரை தட்டி நிற்கும் சரக்கு கப்பல்.

மேலும், பல நேரங்களில் கப்பல்களும், படகுகளும் தரை தட்டி நிற்பதும், மணல் மற்றும் பாறைகளில் சிக்கி விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் பாம்பன் கால்வாயை தூர்வார வேண்டும் என்பது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கையாக உள்ளது.

பாம்பன் கால்வாயை தூர்வாரும் பணிகள் குறித்து, தமிழக சிறு துறைமுகங்கள் துறை அதிகாரிகள் கூறியதாவது: மன்னார் வளைகுடாவுக்கும், பாக் நீரிணைக்கும் இடையே இயற்கையாகவே அமைந்த பாம்பன் கால்வாய் வண்டல் படிவு அதிகமாகக் கொண்ட பகுதியாகும். இதனாலேயே இந்த பகுதி விரைவில் தூர்ந்துவிடுகிறது. இந்த இடத்தில் கால்வாயின் அகலம் 125 மீட்டராகவும், ஆழம் அதிகபட்சமாக 2.11 மீட்டராகவும் உள்ளது.

பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு மேல் தூர்வாரி ஆழப்படுத்தினால்தான் 30 ஆயிரம் டன் வரை எடையுள்ள வணிகக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி செல்லாமல், பாம்பன் வழியே செல்ல முடியும். இதனால் பயணத் தொலைவு மிகவும் குறையும். சாகர் மாலா திட்டத்தின் கீழ், பாம்பன் கால்வாயை தூர்வாருவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தி திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைத்த பின்னர் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x