Published : 05 Jul 2023 06:43 AM
Last Updated : 05 Jul 2023 06:43 AM

அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு - முழு விவரம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கில் 3-வது நீதிபதியை ஒரு வாரத்தில் நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இந்நிலையில், தனது கணவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கைது செய்துள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியும் செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜெ.நிஷாபானு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நேரடியாகவும், நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து காணொலி வாயிலாகவும் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்தனர்.

முதலில் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் என்பதால், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்கிறேன். எனவே, செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றார்.

ஆனால் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி தனது தீர்ப்பில், "அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் கிடையாது. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்கிறேன்.

அதேநேரம், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடரலாம். அதன்பிறகு அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தை, நீதிமன்றக் காவலாக கருதக்கூடாது என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்கிறேன்.

அவர் உடல் நலம் தேறிய பிறகு, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அதை அமர்வு நீதிமன்றம் பரிசீலித்து, தக்க உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால், மூன்றாவது நீதிபதியை நியமிக்க, இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் அழிந்து கொண்டிருக்கிறது: செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால், உச்ச நீதிமன்றமே சரியான முடிவை எடுக்க வேண்டும். ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்க நபர் என்பதால்,
காலதாமதம் வழக்கை நீர்த்துப்போகச் செய்துவிடும். காலம் தாழ்த்த, தாழ்த்த, ஆதார அழிப்பும் நடந்து வருகிறது. எனவே, விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, கபில்சிபில் ஆகியோர், "இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால், மூன்றாவது நீதிபதியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதில் எதற்காக அமலாக்கத் துறை இவ்வளவு அவசரம் காட்ட வேண்டும்? உயர் நீதிமன்ற நடவடிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, உச்ச நீதிமன்றம் எப்படி முடிவு எடுக்க முடியும்?" என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் 3-வது நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும். மேலும், மெரிட் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுகள் எதுவும், சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் தற்போது நீதிமன்றக் காவலில்தான் உள்ளார்" என்று கூறி, விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

மேலும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க, தனியாக மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x