Published : 05 Jul 2023 01:18 AM
Last Updated : 05 Jul 2023 01:18 AM

மதுரை - செங்கோட்டை இடையே மின்சார இன்ஜின் ரயில்கள் இயக்கம் எப்போது?

ராஜபாளையம்: விருதுநகர் - செங்கோட்டை அகல ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவடைந்து கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனை ஓட்டம் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் ஒப்பந்த நிறுவனம் பணிகளை முடித்து ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்காததால் மின்சார இன்ஜினுடன் ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர் - தென்காசி, திருநெல்வேலி - தென்காசி, தென்காசி - செங்கோட்டை இடையிலான அகல ரயில் பாதை மின்மயமாக்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் செங்கோட்டை - சென்னை மார்க்கத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வழியாக பொதிகை விரைவு ரயில், சென்னை - கொல்லம் விரைவு ரயில் தினசரி சேவையிலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் 3 நாட்களும், தாம்புரம் - நெல்லை - தாம்புரம் ரயில் வாரம் ஒரு முறையும் இயக்கப்படுகிறது.

இந்த விரைவு ரயில்கள் செங்கோட்டையில் இருந்து டீசல் இன்ஜினுடன் புறப்பட்டு, மதுரை அல்லது திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்து மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்டு சென்னை செல்கிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மின்சார இன்ஜினுடன் புறப்பட்டு மதுரையில் டீசல் இன்ஜினுக்கு மாற்றப்பட்டு செங்கோட்டை செல்கிறது. இதனால் இந்த விரைவு ரயில்கள் புறப்படுப்பவதில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் காலதாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் அகல ரயில்பாதையில் மின்மயமாக்கல் பணி முடிந்து திருநெல்வேலி - தென்காசி இடையே கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதியும், செங்கோட்டை - விருதுநகர் இடையே மார்ச் 29-ம் தேதியும் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் முடிந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும், மின்மயமாக்கல் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனம் பணிகளை முடிக்காததால் மின்சார ரயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

கடந்த மாதம் 17-ம் தேதி முதல் திருநெல்வேலி - செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் மின்சார ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் - நெல்லை ரயில் மின்சார இன்ஜின் பொறுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுமார்க்கத்தில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் செங்கோட்டை - விருதுநகர் இடையே மின்மயாக்கல் பணி பராமரி்பபு பணி நடப்பதால் இந்த ரயில் தென்காசியில் இருந்து டீசல் இன்ஜினில் இயக்கப்படுகிறது. விருதுநகர் - செங்கோட்டை இடையே மின்சார ரயில் இஞ்சின் இயக்கப்படாததால் தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘விருதுநகர் - செங்கோட்டை இடையே மின்மயமாக்கல் பணி முடிந்துவிட்டது. அதில் தற்போது மின்சாரம் செலுத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவாக சோதனை நடந்து வருகிறது. தற்போது சங்கரன்கோவில் - ராஜபாளையம் இடையே மின்சாரம் இயக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து மின்சார இன்ஜினுடன் ரயில்கள் இயக்கப்படும்" என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x