Published : 26 Jun 2023 08:48 PM
Last Updated : 26 Jun 2023 08:48 PM

முதன்முறையாக பூஜ்ஜியம்: தமிழகத்தில் இன்று யாருக்கும் கரோனா பாதிப்பில்லை!

சென்னை: தமிழகத்தில் இன்று யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பின் பூஜ்ஜியம் என்ற நிலை சாத்தியமாகியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45-வயதான ஒருவருக்கு தமிழகத்தில் முதன்முதலாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் ஓமன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பியிருந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இன்று கரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக மருத்துவத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் தற்போது 16 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், இன்று யாருக்கும் கரோனா பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை தமிழகத்தில் 35 லட்சத்து 72,497 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், இன்று ஒருவர் வீடு திரும்பியுள்ளார். நேற்று தமிழகத்தில் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x