Last Updated : 24 Jun, 2023 12:55 PM

 

Published : 24 Jun 2023 12:55 PM
Last Updated : 24 Jun 2023 12:55 PM

செய்யூரில் போக்குவரத்து பணிமனை அமையுமா? - இரவு பேருந்து சேவைக்கு ஏங்கும் மக்கள்

மதுராந்தகம்: செய்யூர் வட்டத்தில் ஏராளமான கிராமப்பகுதிகள் அமைந்துள்ளன. சுற்றுப்புறங்களில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகவும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்விக்காகவும் மதுராந்தகம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், செய்யூரிலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று திரும்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் அரசு போக்குரவத்து கழக பணிமனை இல்லாததால் பேருந்துகளை இரவு நேரங்களில் பாதுகாப்பாக நிறுத்த இடமில்லாமல் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், செய்யூர் சுற்றுப்புற கிராமப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு அதிகாலையில் பேருந்து வசதி இல்லாத நிலை உள்ளது. அதேபோல், இரவு நேர பேருந்து சேவையும் கிடைப்பதில்லை. இரவு 8 மணிக்குள் மதுராந்தகம் பணிமனைக்கு திரும்பிவிடுவதே காரணம். எனவே இங்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க வேண்டியது அவசியமாகும்.

இதுகுறித்து, அகில இந்திய விவசாயதொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் கூறியது: செய்யூர் 20 ஆண்டுகளாக தாலுகாவின் தலைமையிடமாக விளங்கும் நிலையில், இங்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்காமல் இருப்பது வேதனை. பணிமனை இல்லாததை காரணம் காட்டி, செய்யூருக்கு அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த 81இ, 81கே, 81வி ஆகிய கிராம வழித்தட பேருந்துகள் காரணமின்றி நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், சூணாம்பேடு பகுதியை மையமாகக்கொண்டு புதுச்சேரி, கடலூர் மாவட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் செய்யூர்-மாமல்லபுரம் இடையே இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், லத்தூர், சித்தாமூர், தொழுப்பேடு, தேன்பாக்கம், அறப்பேடு கிராம மக்கள் பேருந்து வசதியின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், அச்சிறுப்பாக்கம், கடப்பாக்கம், மரக்காணம் பகுதிகளை இணைக்கும் வகையில் கிராம பேருந்துகள் இயக்க வேண்டும். இதன்மூலம், சுற்றுப்புற கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இரவு நேரங்களில் இங்கு நிறுத்தி இயக்க முடியும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளுக்கு போக்குவரத்து சேவை கிடைக்கும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, செய்யூர் தொகுதி எம்எல்ஏ பாபு கூறியதாவது: செய்யூர் தொகுதியில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் கடந்த ஆட்சி காலத்தில் 60 சதவீத பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் இயக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். போக்குவரத்து துறையில் நிலவும் காலி பணியிடங்களால் கூடுதல் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் உள்ளது. எனினும், நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளில் 25 சதவீத பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. கிராமப்புற பேருந்து சேவைகளுக்காக, செய்யூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைய வேண்டியது அவசியமான ஒன்று. இதுதொடர்பாக, ஏற்கெனவே சம்மந்தப்பட்ட துறைஅமைச்சரிடம் முறையிட்டுள்ளேன். விரைவில் தீர்வு கிடைக்கும் என்றார்.

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: செய்யூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், கிராமப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு கிராமப்புற பகுதிகளுக்கு தேவையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x