Published : 13 Oct 2017 09:01 AM
Last Updated : 13 Oct 2017 09:01 AM

டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள வாகன உதிரி பாகங்கள் புதுப்பேட்டையில் அகற்றம்: மாநகராட்சி பணியாளர்கள் நடவடிக்கை

புதுப்பேட்டை பழைய வாகன சந்தைப் பகுதியில் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ள, தெருக்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பழைய வாகன உதிரி பாகங்களை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அகற்றினர்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று டெங்கு கொசு ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமையான நேற்று, அரசு பொது சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், புதுப்பேட்டை பழைய வாகன சந்தைப் பகுதியில் டெங்கு கொசுப் புழு உற்பத்தியாக வாய்ப்புள்ள, தெருக்களில் போடப்பட்டிருந்த வாகன உதிரிப் பாகங்களை அகற்றும் பணி நடைபெற்றது. அப்பணிகளை, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அகற்றும் பணியின்போது, கொசுப் புழுக்கள் இருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம், அதே இடத்தில் விதிக்கப்பட்டது. பின்னர் கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

2,035 சிறு வட்டங்கள்

பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:

இப்பகுதியில், வாகன உதிரிப் பாகங்களை, வெளியில் போட்டு வைக்கக் கூடாது என்று 2 முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பொருட்படுத்தாமலும், மழைநீர் தேங்கும் வகையிலும், கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு பொருட்களை அப்புறப்படுத்தி வருகிறோம்.

தவறு செய்த வணிக நிறுவனங்கள், கட்டிடங்களுக்கு முதல் முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும், 3-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். இதுவரை ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x