Published : 15 Jun 2023 05:35 AM
Last Updated : 15 Jun 2023 05:35 AM

2 மாத மீன்பிடி தடைக்காலம் முடிந்தது - இன்று கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள்

பாம்பனில் இன்று கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளுக்கு நாட்டு படகு மூலம் ஐஸ் கட்டிகள் நேற்று மாலை ஏற்றப்படுகிறது.

ராமேசுவரம்: தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் அமலில் இருந்த 2 மாத மீன்பிடித் தடைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று முதல், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் கோடை காலத்தில் 2 மாதங்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்கும். இந்த ஆண்டு ஏப்.15-ல் தொடங்கி ஜுன் 14 வரை 61 நாட்கள் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களாக மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை இரு மடங்கு உயர்ந்தது.

தடைக்காலம் நேற்று நிறைவடைந்ததால் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று (ஜுன் 15) கடலுக்குச் செல்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் சுமார் நூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று அதிகாலை மன்னார் வளைகுடா கடலுக்குச் சென்று வெள்ளிக்கிழமை கரை திரும்புவார்கள். ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நாளை (ஜுன் 16) பாக் நீரிணை கடலுக்குச் செல்லும் மீனவர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து கரை திரும்புவார்கள்.

இந்திய எல்லையைத் தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் மேற்கொள்ளக் கூடாது. அரசால் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களைப் பிடித்தல் கூடாது. மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் மேலும், தொழிலுக்குச் செல்லும்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடலுக்குச் சென்று மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரியவிலையை கொள்முதல் நிறுவனங்களுக்கு நிர்ணயிக்க அரசு உத்தரவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x