Published : 14 Jun 2023 08:27 PM
Last Updated : 14 Jun 2023 08:27 PM

பாஜகவின் மதவெறி அரசியலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: செந்தில்பாலாஜி கைதுக்கு டி.ராஜா கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

புதுடெல்லி: "தமிழகம் பெரியாருடைய மண் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாஜகவின் மதவெறி அரசியலை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்கமாட்டார்கள்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமலாக்கத் துறையின் செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எந்தவிதமான மானுட நெறிகளுக்கும் ஒவ்வாத செயல்களை அமலாக்கத் துறை தமிழகத்தில் இன்று நடத்தியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வலுவான கருத்துகளை முன்வைத்திருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரது கருத்துகளை வரவேற்கிறது. அவருக்கு துணையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நிற்கிறது.

இந்தப் பிரச்சினையில், மத்திய அரசுக்கு எதிராக வலுவான இயக்கத்தை நடத்த வேண்டும் என்றும் விரும்புகிறது. இன்றைக்கு பாஜக, தான் ஆட்சி செய்யாத மாநிலங்களில், பாஜக அல்லாத மாற்று அரசியல் கட்சிகள் ஆட்சி செய்கிற மாநிலங்களில் அந்த அரசுகளை கவிழ்ப்பதற்கும், அந்த அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதற்கும் பெரு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிற ஆட்சிக்கு நெருக்கடியைத் தர வேண்டும் என்றுதான் பாஜக இதனை செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், இதை வைத்துக்கொண்டு தமிழகத்தில் அரசியல் லாப தேடலாம் என்று பாஜக கருதுகிறது. தமிழகம் அப்படிப்பட்ட ஒரு மாநிலம் அல்ல. அது பெரியாருடைய மண் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாஜகவின் மதவெறி அரசியலை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்கமாட்டார்கள்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x