Published : 14 Jun 2023 08:45 AM
Last Updated : 14 Jun 2023 08:45 AM

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை நேற்று நள்ளிரவு கைது செய்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 6வது தளத்தில் அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

இருப்பினும் அவர் அனுமதிக்கப்பட்டபோது உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் அது தற்போது சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட இசிஜி-யில் மாறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் கூறுகின்றது.தேவைப்பட்டால் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் செந்தில்பாலாஜியின் உடல்நிலை ரயில்வே மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையை சுற்றி சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை தேவைப்படுவதை முன்னிறுத்தி ஜாமீன் கோர அவரது தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இன்று அதிகாலை (புதன்கிழமை) 2 மணி வரை சுமார் 18 மணி நேரம் அமைச்சர் செந்தில்பாலாஜி வசித்து வரும் அரசு வீடு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினரின் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும்போதே அவர் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x