Published : 24 Oct 2017 08:18 AM
Last Updated : 24 Oct 2017 08:18 AM

குஜராத் தேர்தல் தேதி சர்ச்சை: தேர்தல் ஆணையத்திடம் மக்கள் கேள்வி கேட்க முடியாதா? - பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில்

தேர்தல் ஆணையத்திடம் மக்கள் கேள்வி கேட்க முடியாவிட்டால் யார் கேள்வி கேட்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுள்ளார்.

இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து நவம்பர் 9-ம் தேதி இமாச்சலில் தேர்தல் நடக்கும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், குஜராத் மாநில தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறும்போது, ‘டிசம்பர் 18-ம் தேதிக்குள் குஜராத்தில் தேர்தல் நடத்தப்படும்’ என்று தெரிவித்தது.

இதற்கு காங்கிரஸ் உட்பட முக்கிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘குஜராத் தில் கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி மேற்கொள்ளும்போது, அந்த மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கும் அதிகாரத்தை மோடிக்கு தேர்தல் ஆணையம் வழங்கிவிட்டது. மேலும், குஜராத் மாநிலத்துக்கு சலுகைகள், இலவச திட்டங்கள் அறிவித்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும். அதன்பின்னர், தற்போது விடுமுறை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையம், மீண்டும் பணிக்கு அழைத்துக் கொள்ளப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக குஜராத்தில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி, ‘தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கும் தார்மீக உரிமை காங்கிரசுக்கு இல்லை’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், ப.சிதம்பரம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்தல் ஆணையத்திடம் மக்கள் கேள்வி கேட்க முடியாவிட்டால் யார் கேள்வி கேட்க முடியும்? மக்கள் என்ன செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் கெஞ்ச வேண்டுமா?’ என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x