Published : 12 Oct 2017 10:08 AM
Last Updated : 12 Oct 2017 10:08 AM

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை நீடிக்கிறது; லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு- வழக்கு விசாரணை 1-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அதனால் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை நீடிக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம், விதிமுறைகளை மீறி பங்குகளை விற்க அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது 5 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

2 முறை சம்மன் அனுப்பியும் இந்த வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட் நோட்டீஸ்’ சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின், இடைக்கால தடையை ரத்து செய்திருந்தது.

நேற்று உச்ச நீதிமன்ற விசாரணையில் மகளின் படிப்பு சம்பந்தமாக லண்டன் செல்ல அனுமதி கொடுக்கும்படி கார்த்தி சிதம்பரம் கோரினார். அதை நிராகரித்த நீதிபதி, லுக் அவுட் நோட்டீஸை நவம்பர் 1-ம் தேதி வரை நீட்டித்து, விசாரணையையும் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x