Published : 20 Jun 2016 11:59 AM
Last Updated : 20 Jun 2016 11:59 AM

தேநீர்: சில சுவாரசிய விவரங்கள்!

மனிதனின் அடிப்படைத் தேவையான தண்ணீரை அடுத்து சர்வதேச அளவில் அனைவரும் பருகும் பானம் தேநீர். காலை எழுந்தவுடனே தேநீர் அருந்தவில்லையென்றால் அன்றைய நாளில் எதையோ இழந்துவிட்டது போல் தோன்றும் அளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒன்றாகக் கலந்து விட்டது. பிரிட்டிஷார் நம் நாட்டில் திணித்தவற்றுள் மிக முக்கியமானது தேயிலை.

அவர்கள் தேவைக்காக நம்மை பயிரிடச் சொல்லி பின்பு நம்மையே நுகர வைத்து அதன் தேவையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டினார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு சர்வதேச அளவில் தேயிலையின் தேவை அதிகரித்தையொட்டி இந்திய அரசு தேயிலை பயிரிடுவதை ஊக்கப்படுத்தியது. மலைவாழ் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பையும் அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேயிலை அளித்து வருகிறது.

இந்த தேயிலை துறையை பற்றியும் தேநீரை பற்றியும் சில தகவல்கள் உங்களுக்காக….

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தென்மேற்கு சீனாவில் ஷாங் பேரரசர்கள் தேநீரை மருந்தாக பயன்படுத்தியதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

கி.மு.800 களில் தேநீர் அருந்தும் பழக்கம் ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு தேயிலை பரவியது.

17ஆம் நூற்றாண்டில் தான் பிரிட்டனில் தேநீர் மிக பிரபலமடைந்தது. இதன் பிறகே இந்தியாவில் தேயிலை உற்பத்தியை பிரிட்டிஷார் தொடங்கினர்.

முதன் முதலில் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டவர் மணிராம் தேவான்

தேயிலையை பற்றி படிக்கக்கூடிய கலைக்கு டேசியோகிராபி (Tasseography) என்று பெயர்.

சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் தேநீர் விழா நடத்தப்படுகிறது.

மத விழாக்கள், திருமணம் போன்றவற்றின் போது தேநீர் விருந்து நடத்தப்படுகிறது.

சீனர்கள் இதை `ஆர்ட் ஆஃப் டீ’ என்று அழைக்கிறார்கள்.

இந்தியாவில் இரண்டாவது அதிகம் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய துறை தேயிலை துறை.

ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் தேநீர் அருந்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரிட்டிஷார் விளம்பரப்படுத்தினர். 1920-ம் ஆண்டுக்கு பிறகுதான் இந்தியாவில் தேநீர் அருந்துவது மிகவும் பரவலானது.

உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில்

சீனாவின் பங்கு 36%

இந்தியாவின் பங்கு 22.6%

உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் நுகர்வு 25%

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் அஸ்ஸாம். அஸ்ஸாமில் 3,04,000 ஹெக்டேரில் தேயிலை பயிரிடப்படுகிறது. அஸ்ஸாம் டீ என்பது உலகளவில் மிகவும் பிரபலம்.

2014-ம் ஆண்டு தகவலின் படி இந்தியாவில் தேயிலை சந்தையின் மதிப்பு 20,000 கோடி ரூபாய். இதில் கிரீன் டீ சந்தையின் மதிப்பு 250 கோடி ரூபாய்

எகிப்தியர்கள் ஹைபிஸ்கஸ் என்று அழைக்கக்கூடிய செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் டீயையே அருந்துகின்றனர். இதன் பெயர் கார்ஹடே.

ஐரோப்பியர்கள் மாலை 3 மணியிலிருந்து 6 மணிக்குள் டீ அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்

உடல் எடையை குறைப்பதற்கு வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் கிரீன் டீயை விரும்புகிறார்கள். 1800களுக்குப் பிறகு கிரீன் டீ உலகளவில் பிரபலமடைந்தது. அதிலும் அமெரிக்கர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

கமீலியா சைனசிஸ் என்ற தேயிலையிலிருந்துதான் இந்த டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் ஜப்பான்.

கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x