Last Updated : 25 Aug, 2018 12:28 PM

 

Published : 25 Aug 2018 12:28 PM
Last Updated : 25 Aug 2018 12:28 PM

ஆபத்துக் காலத்தில் தப்பிப்பது எப்படி?

பன்னடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளும் பிரம்மாண்டமான வணிக வளாகங்களும் மிகவும் சர்வ சாதாரணமாகக் கட்டப்படுகின்றன. பன்னடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவோருக்கு எப்போதும் ஓர் அச்சம் இருக்கும். ஆபத்துக் காலத்தில் வீட்டிலிருந்து விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற முடியுமா என்ற சந்தேகம் இருக்கும். வெளி நாடுகளில் இதற்கு அழகான தீர்வு வைத்திருக்கிறார்கள்.

ஆபத்துக் காலத்தில் விரைவாக வெளியேற வசதியாகச் சறுக்கு அமைப்புகளை மேலை நாடுகளில் அமைக்கிறார்கள். இதை‘எஸ்கேப் சூட்’ என்று அழைக்கிறார்கள். பன்னடுக்கு அடுக்குமாடியைச் சுற்றிச் சுவர்களில் ஏற்படுத்தப்பட்ட துவாரத்தின் வழியாகக் குழாய் அல்லது வலுவான துணியைக் கொண்டு அமைத்து அதில் சறுக்கிக்கொண்டு வந்து வெளியேறும் அமைப்பு.

இதில் அடுக்குமாடியின் மேல் சுவர்களில் அமைந்த துவாரம் தரைத்தளத்தில் வந்து சேரும் வழி இருக்கும். இந்த வழி வலுவான துணியால் பிணைக்கப்பட்டிருக்கும். ஆபத்துக் காலத்தில் துவாரம் வழியாக உள்ளே சென்று துணியைப் பிடித்துக்கொண்டு சறுக்கிக் கொண்டு கீழே வந்துவிடலாம். சிறு சிராய்ப்புக்கூட இல்லாமல் வெளியே வந்துவிடலாம் என்பது இதன் சிறப்பு. அவசர காலத்தில் மிக விரைவாக ஒருவர் பின் ஒருவராக எத்தனை பேரை வேண்டுமானாலும் கீழே இறக்கிவிடலாம்.

பல ஆண்டுகளாக இந்த முறை புழக்கத்தில் இருந்தாலும், தற்போது நவீனத் தொழில் நுட்பம் மூலம் நெருப்பால் பாதிக்கப்படாத  ‘மாடர்ன் பேப்ரிக்’ வகைத் துணி இதில் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் தற்போது பல வகை ‘எஸ்கோப் சூட்டுகள்’ வந்துவிட்டன.  துவாரம் மூலம் துணி வழியாகச் செங்குத்தான வழியில் கீழே வருவது ஒரு முறை. ‘எஸ்கேப் சூட்’டின் கீழ்ப்பகுதி மட்டும் குறிப்பிடத்தக்க அளவில் வளைவாக இருப்பது இன்னொரு வகை. சுழற்மாடி போல  சுழன்றவாறே கீழே செல்லும்படி இருப்பது மூன்றாவது வகை. 

வெளி நாடுகளில் பன்னடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிரம்மாண்ட வணிக வளாகங்களில் இந்தப் பாதுகாப்பு முறை பயன்பாட்டில் உள்ளன. வெளி நாடுகளில் கட்டிடங்களைக் கட்டும்போதே இந்தப் பாதுகாப்பு அம்சங்களைக் கட்டுவதற்கான திட்டத்தையும் வரைப்படத்தில் காட்ட வேண்டும். கட்டிடம் கட்டி முடித்த பிறகு அதிகாரிகளும் அந்தப் பாதுகாப்பு ‘எஸ்கேப் சூட்’டுகளை ஆய்வு செய்து அனுமதி கொடுப்பார்கள். பன்னடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆபத்து ஏற்பட்டால், அவசர காலத்தில் பாதுகாப்பாக வெளியேற இது ஒரு சிறந்து அமைப்பு.

இந்தியாவிலும் தற்போது பெரு நகரங்களில் பிரம்மாண்டமான பன்னடுக்கு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இங்கே இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்படுகின்றனவா என்ற உறுதியான தகவல்கள் எவையுமில்லை. ஆனால், இங்கேயும் இது தேவையான அவசியமான பாதுகாப்பு அம்சம் என்பதால், வருங்காலத்தில் இது நடைமுறைப்படுத்தப்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x