Last Updated : 02 Mar, 2015 12:25 PM

 

Published : 02 Mar 2015 12:25 PM
Last Updated : 02 Mar 2015 12:25 PM

திருமணப் போர்வையில் கடத்தப்படும் பெண்கள்

மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டம் ராம்நகர் கிராமத்தின் 18 வயது ருக்சானாவுக்கு அதற்குள் முதுமை தொற்றிக் கொண்டது. அவளது வண்ணமயமான கனவுகள் சிதைக்கப்பட்டு ஒரு பொம்மையைப் போல பயன்படுத்தப்பட்ட அந்த நாட்கள் அவளை இன்னும் அச்சப்படுத்திக் கொண்டிருந்தன.

டெல்லியின் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் மீட்கப்பட்ட மூன்று இளம் பெண்களில் ருக்சானாவும் ஒருவர். ஏழைக் குடும்பங்களை குறிவைத்து திருமணம் என்ற பெயரில் விபச்சாரச்சந்தையில் தள்ளப்படும் ஆயிரக்கணக்கான அப்பாவி பெண்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு எதிர்பாராதவிதமாக மீட்கப்பட்டவர் அவர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு தரகர் மூலமாக வரன் பார்க்கப்பட்டு ருக்சானாவுக்கு திருமணம் முடிந்தது. ஓராயிரம் கனவுகளுடன் அந்த இளம் பெண் பிறந்த வீட்டிலிருந்து தன்னைக் கைப்பிடித்த கணவனோடு ரயிலேறி ஹரியானா புறப்பட்டுச் சென்றாள். அந்தப் பயணம் தனது வாழ்வையே புரட்டிப் போடும் ஒரு பயங்கர பயணம் என்பதை பாவம் அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

மனைவி என்ற முத்திரையுடன், நாட்டின் கிழக்குப் பகுதிகளான மேற்கு வங்கம், பிஹார், ஜார்கண்ட் மற்றும் அஸ்ஸாம் ஆகிய பகுதிகளிலிருந்து பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் போன்ற நாட்டின் வடக்குப் பகுதிகளுக்குக் கடத்தப்படும் சதைப் பிண்டங்கள் இவர்கள். பெண் சிசுக் கொலைகளால் பெண்களின் எண்ணிக்கை சிறுத்துப்போன மாநிலங்களின் கோர முகங்களின் விளைவுகள் இவை.

இப்பகுதியில் வாழும் மக்களிடையே ஏழ்மையும், கல்வியின்மையும், பின்தங்கிய வாழ்க்கை அமைப்பும் பரம்பரை சொத்துக்கள். இவற்றையே மூலதனமாகக் கொள்ளும் ‘கடத்தல் முகவர்கள்’ எளிதாக இவர்களைத் தங்கள் திட்டங்களுக்குப் பலிகடாக்களாக்கி விடுகிறார்கள்.

இதன் விளைவாக திரும்பவே முடியாத நரக வாழ்க்கைக்கு, புரியாத உறவுகளுக்கு மாற்றப்படுகிறார்கள். அங்கே, உடல்ரீதியாக, மனரீதியாக முடிவுறாத உடல்பசி இரைக்கான முகாம்களின் கைதிகளாக இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.

விற்பனைப் பண்டங்கள்

திருமணம் என்ற பெயரில் இவர்களின் ஆரம்பப் பயணம் அனுமதி இலவசம், விற்பனைக்கு என்று பொருள்படும் ‘பாரோ, மொல்கி’ அடைமொழி பெயர்களில் தொடங்குகிறது. அதன்பின் குடும்பத்தின் அத்தனை ஆண்களின் இரவு நேரத்து உடல்பசி தேவைகளை தீர்க்க வேண்டும். அத்துடன் பகலில் கழனிகளில் கூலிகளாகவும் பணியாற்ற வேண்டும் என்று எழுதப்படாத சட்டங்களாய் கொடுமைகள் நீள்கின்றன.

டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் ஆள் கடத்தலுக்கு எதிரான அரசு சாரா தன்னார்வ அமைப்பான ‘எம்பவர் பீப்புள்’ அமைப்பின் ஷப்பீர் ரஹ்மான் கான் செய்த ஆய்வின்படி நாட்டின் கிழக்கு மாவட்டங்களிலிருந்து கடத்தப்படும் இளம் பெண்களில் 80 சதவீதம் பேர் முஸ்லிம் பெண்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பெண்கள் திருமணம் என்ற போர்வையில் பத்தாயிரம் ரூபாய்க்கு விலை பேசப்பட்டு கடத்தப்படும் அதிர்ச்சிகரமான தகவலையும் இவர் தெரிவிக்கிறார். அதாவது ஒரு எருமை அல்லது பசு மாட்டின் விலைதான் இந்த அபலைப் பெண்களின் விலையும்.

இந்த சமூகக் கொடுமைகள் அரங்கேறுவதற்கு பிரதான காரணமாக இருப்பது இந்திய நாட்டில் அதிகமாக நிலவும் வரதட்சணை முறைமைகளே. தங்கள் மகளுக்குத் திருமணம் முடிந்தால் போதும் என்று நினைக்கும் ஏழைக் குடும்பத்தினர், திருமணத்துக்குப் பிறகு காணாமல் போகும் தங்கள் மகளைத் தேடவும் வழிவகையில்லாமல் தவிக்கின்றனர்.

அப்படியே சிலர் காவல்துறையாலும் தன்னார்வ அமைப்புகளாலும் அந்தப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டாலும், அந்தப் பெண்களை குடும்பத்தார் ஏற்றுக் கொள்வதில்லை. பெண்ணாகப் பிறப்பதே துயரங்களுடன் போராடி மடியத்தான் என்னும் நிலை என்றுதான் மாறுமோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x