Last Updated : 31 Dec, 2016 11:31 AM

 

Published : 31 Dec 2016 11:31 AM
Last Updated : 31 Dec 2016 11:31 AM

சந்தேகம் சரியா 16: ஆஸ்துமாவுக்கு இன்ஹேலரைத் தொடரலாமா?

எனக்கு ஆஸ்துமா உள்ளது. பனிக் காலத்தில் இது அதிகத் தொல்லை தருகிறது. இதற்கு மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இன்ஹேலரைப் பயன்படுத்தும்படி என் குடும்ப மருத்துவர் கூறுகிறார். இன்ஹேலரைப் பயன்படுத்தத் தொடங்கினால் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டுமா? இன்ஹேலரைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் அல்லது ஆபத்துகள் ஏற்படும் என்பது உண்மையா?

பனிக்காலம் தொடங்கிவிட்டால் ஆஸ்துமா உள்ளவர்களுக்குச் சோதனைக் காலம்தான். அதீதக் குளிர்ச்சி நம் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளின் நரம்பு முனைகளைத் தூண்டுகிறது. இதன் விளைவால் மூச்சுக்குழல் தசைகள் சுருங்கிவிடுகின்றன. அப்போது மூச்சு சிறுகுழல்கள் (Bronchioles) மிக அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதேவேளையில் மூச்சுக்குழலின் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் மூச்சுக்குழல்களில் வீங்கிய சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கெனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. முக்கியமாக, மூச்சை வெளிவிடுவதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக்குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்கிறது.

என்ன சிகிச்சை?

இன்றைய மருத்துவ முன்னேற் றத்தில் ஆஸ்துமாவுக்கு நிறைய மருந்துகள் உள்ளன. மூச்சுக்குழாயை விரிவுபடுத்துவது, அதன் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஒவ்வாமையைத் தடுப்பது, ஆஸ்துமா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது என்று பலதரப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றைப் பின்பற்றினால் ஆஸ்துமா அவதி குறையும். இவற்றில் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ‘இன்ஹேலர்’ ஒரு வரப்பிரசாதம்.

எப்படி?

இவர்களுக்கு மூச்சுக்குழல்களை விரிவுபடுத்த மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலை அடைந்து பலன் கிடைப்பதற்கு நேரம் ஆகும். இந்த மருந்தின் அளவுகளும் அதிகம். சில பக்கவிளைவுகளும் இவற்றுக்கு உண்டு. குறிப்பாகச் சொல்வ தென்றால் ‘சால்பூட்டமால்’ எனும் ஆஸ்துமா மருந்தின் அளவு அதிகமாகிவிட்டால், கை விரல்கள் நடுங்குவதை உதாரணமாகச் சொல்லலாம்.

இன்ஹேலரே சிறந்தது!

ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக்குழல் தசைகளை உடனடியாகத் தளர்த்திவிடும். இதனால் மூச்சுத்திணறல் உடனடியாகக் கட்டுப்படும். இதில் பயன்படுத்தப்படும் மருந்தின் அளவு மிகவும் குறைவு. மைக்ரோ கிராம்களில்தான் இந்த மருந்து செலுத்தப்படுகிறது. உடலின் வேறு உறுப்புகளுக்கு இந்த மருந்து செல்வதில்லை. எனவே, இதற்கு அதிகப் பக்கவிளைவுகள் இல்லை. இதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தினால்கூட ஆபத்து இல்லை. இன்ஹேலருக்குப் பதிலாக மாத்திரை, மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போதுதான் பல பக்கவிளைவுகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் இருக்கிறது.

இன்ஹேலரைப் பயன்படுத்துவது எப்படி?

# இன்ஹேலரைப் பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாகக் குலுக்க வேண்டும். அப்போதுதான் மருந்து சரியான விகிதத்தில் கலந்து நுரையீரலுக்குச் சென்றடையும்.

# இன்ஹேலரை இழுக்கும் முன்பு, மூச்சை நன்றாக வெளியே விட்டுவிட வேண்டும். பிறகு மருந்தை உள்ளிழுத்து, பத்து விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு மெதுவாக மூச்சை வெளிவிடவும். இப்படிச் செய்தால், நுரையீரலில் மருந்து அதிக நேரம் தங்கி முழுவதுமாகப் பலன் கொடுக்கும்.

# மூச்சை உள்ளிழுப்பதும் இன்ஹேலர் மருந்தை உள்ளிழுப்பதும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். இல்லையென்றால் மருந்து வாய்க்குள்ளேயே தங்கிவிடும்.

# இன்ஹேலரைப் பயன்படுத்திய பிறகு வாயைக் கொப்பளிக்க வேண்டியது முக்கியம்.

# குழந்தைகளுக்கு இன்ஹேலரைப் பயன்படுத்தத் தெரியாது. ஆகையால், இன்ஹேலருடன் ‘ஸ்பேசர்’ கருவியை இணைத்துப் பயன்படுத்தலாம்.

# உட்கார்ந்தபடி இன்ஹேலரைப் பயன்படுத்துவதுதான் சரியான முறை. படுத்தபடி, சாய்ந்தபடி பயன்படுத்தினால் மருந்தின் அளவு சரியான அளவில் சென்றடையாது.

# இன்ஹேலரைப் பயன்படுத்திய பிறகு அதை மூடிவைக்க மறந்துவிடக் கூடாது.

# இன்ஹேலரின் விலை அதிகம் என்று எண்ணுபவர்கள் ‘ரோட்டாஹேலர்’ எனும் கருவியில் மருந்தடைத்த கேப்சூலை வைத்து, உடைத்து, உள்ளிழுத்துப் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்தும்போது வாய்ப்புண் வரலாம். 'ரோட்டா கேப்’பில் இருக்கும் மருந்து வாயில் தங்கிவிடுவதுதான் இதற்குக் காரணம். மருந்தை உறிஞ்சியதும், வாயை நன்றாகக் கொப்பளித்த பிறகு, தண்ணீர் குடிக்க வேண்டும். பின்னர் சாப்பிட வேண்டும். இப்படிச் செய்தால் வாய்ப்புண் வராது. அப்படியும் வருகிறது என்றால், ‘மீட்டர் டோஸ் இன்ஹேலரை’ அதற்கென உள்ள கண்ணாடிக் குடுவைக்குள் (Spacer device) வைத்துப் பயன்படுத்த வேண்டும். இதனால், மருந்து வாயில் தங்குவது குறையும். வாய்ப்புண் ஆபத்து தவிர்க்கப்படும்.

# மருத்துவரின் யோசனை இல்லாமல் சுயமாக இன்ஹேலரை மாற்றக் கூடாது.

# இன்ஹேலர்களில் ஒரு மருந்து உள்ளவை, பல மருந்துகள் கலந்தவை எனப் பல விதம் உண்டு. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படிதான் பயன்படுத்த வேண்டும்.

(அடுத்த வாரம்: குளிர்காலத்தில் தயிர்சாதம் சாப்பிடலாமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x