Last Updated : 28 Oct, 2015 12:00 PM

 

Published : 28 Oct 2015 12:00 PM
Last Updated : 28 Oct 2015 12:00 PM

அண்ணாந்து பார்க்க வைக்கும் பூங்கா

புதுச்சேரிக்குப் போனால் அழகான கடற்கரையைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடுவீர்களா? பொழுதுபோக்கக் கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள தாவரவியல் பூங்காவுக்குப் போய் ஒரு முறை பாருங்களேன். குழந்தைகள் பொழுதுபோக்க அங்கு நிறைய அம்சங்கள் உள்ளன. கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரே தாவரவியல் பூங்கா இதுதான்!

இது பிரெஞ்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட பாரம்பரிய பூங்கா. இந்தப் பூங்கா அமைக்கப்பட்டு 189 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.1826-ம் ஆண்டு இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. 1838-ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் பெரோட் இப்பூங்காவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது முயற்சியால் தனித்தன்மை வாய்ந்த தாவரங்கள் இங்கே சேகரிக்கப்பட ஆரம்பித்தன.

புதுச்சேரியில் உள்ள பசுமை மாறாத உலர் வெப்ப மண்டல காடுகளின் தாவரங்கள் இங்கே நிறைய உள்ளன. சுற்று வட்டாரத்தில் எங்குமே பார்க்க முடியாத பல அரிய வகை மரங்களும் உள்ளன. மொத்தம் 2,700 மரங்களுக்கு மேல் உள்ளன. கல்மரங்கள் எனப்படும் புதைபடிவ தாவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

உலகில் அழிந்துவரும் நிலையிலுள்ள ‘நண்டுக் கொடுக்கு’ உள்ளிட்ட அபூர்வமான மரங்களும் இத்தாவரவியல் பூங்காவில் உள்ளது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘சிவந்தேனியா’ மரமும் இங்கே இருக்கிறது.

மிக உயரமாகவும் பெரிய அளவிலும் வளர்ந்துள்ள கொடி வேங்கை, செஞ்சந்தனம் எனப்படும் செம்மரம் இப்பூங்காவுக்கு பெருமை சேர்க்கின்றன. இங்கே மிக உயரமாகவும், கம்பீரமாகவும் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களைப் பார்த்தால் வாயைப் பிளந்துவிடுவீர்கள். குழந்தைகள் இயற்கையைப் பற்றி அறிந்துகொள்வதுடன் விளையாட்டுக்கான தளமாகவும் இப்பூங்கா பூங்கா மாறியுள்ளது.

தற்போது இயற்கை மையம், திறந்தவெளி அரங்கம், பாலத்துடன் கூடிய அல்லிக்குளம், பாறைப்பூங்கா, உணவகம், நடைபாதைகள், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, உல்லாச குழந்தைகள் ரயில் என பூங்கா இன்னும் பெருகேறியிருக்கிறது.

விரைவில் புதிய அம்சங்கள் சேர உள்ளன. இனி புதுவைக்குப் போனால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்!









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x