

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் பிராமி எழுத்துகளைத் தன் சாதனையால் மீண்டும் உலகறிய வைத்திருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த அஸ்வின் கிருஷ்ணா. வெறும் 12 நிமிடங்கள் 8 விநாடிகளில் 247 எழுத்துகளையும் எழுதி, ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’இல் இவர் தடம் பதித்திருக்கிறார்.
படித்துக்கொண்டே...
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த அஸ்வின் கிருஷ்ணா, ஒரு ‘2கே கிட்’. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் பட்டம் பெற்று, தற்போது ஐ.ஐ.எம். மும்பையில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார். சமூக ஆர்வலர், சாதனையாளர், பயண விரும்பி எனச் சுழன்று வருகிறார்.
ஏற்கெனவே 2022இல் கண்களைக் கட்டிக்கொண்டு 53.94 நொடிகளில் ரூபிக்ஸ் கியூப் புதிரை விடுவித்து ‘வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம்பிடித்தவர். அந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. தற்போது தமிழ் பிராமி எழுத்துகளை எழுதி மற்றுமொரு சாதனையைப் படைத்திருக்கிறார்!
சாதனைக்குப் பின்னால்...
“2020 கரோனா பொது முடக்கக் காலத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. அப்போது ஒரு நிமிடத்துக்கும் அதிகமான நேரத்தில் ரூபிக்ஸ் கியூப் புதிரை விடுவித்தல் சாதனையாக இருந்தது. அதை முறியடிக்க வேண்டும் என்கிற இலக்குடன் ரூபிக்ஸ் கியூப் பயிற்சி செய்தேன்.