ஜார்ஜ் மரியான்: உயரம் ஒரு பொருட்டல்ல! | ஜெயித்த கதை

ஜார்ஜ் மரியான்: உயரம் ஒரு பொருட்டல்ல! | ஜெயித்த கதை
Updated on
4 min read

சுரேஷ் சங்கையாவின் அறிமுகப் படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ (2017). அதில் குலதெய்வத்துக்குக் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தக் கிராமவாசிகள் கூட்டமாக லாரியில் புறப் படுவார்கள். கோயிலை நெருங்கும் நேரத் தில், எதிரே பைக்கில் வந்த ஒருவரை மோதிக் கொன்றுவிட்டதாக நினைத்துக்கொண்டு பதற்றம் அடைவார்கள்.

விளைவாக, தண்டனைக்குப் பயந்து அதை மறைக்க முயலு வார்கள். அப்போது அங்கே அழைத்துவரப்படுவார் அவர்களின் உறவினரும் வழக்கறிஞருமான வாசுதேவன். உறவினர்கள் என்றும் பாராமல், அவர்களுடைய அறியாமையைத் தனக்குச் சாதகமாக அந்த வழக்கறிஞர் கதாபாத்திரம் பயன் படுத்திக் கொள்ளும்.

எரியும் வீட்டில் பிடுங்கலாம் என்கிற தந்திரம் கலந்த சுரண்டல் மனப்பான்மையை வெகு இயல்பாக நடிப்பில் கொண்டு வந்து காட்டியிருப்பார் ஜார்ஜ் மரியான். இந்தப் படத்தில் மட்டுமல்ல, கடந்து 20 ஆண்டுகளில் ‘சண்டக்கோழி’ (2005), ’ஆண்டவன் கட்டளை’ (2016) உள்படப் பல படங்களில் வழக்கறிஞர் வேடத்தை ஏற்று அவர் நடித்திருக்கிறார்.

ஆனால், ஒவ்வொன்றையும் அந்தந்தக் கதைக் களத்துக்கான கதாபாத்திரமாக உணர வைக்கும் மாயத்தை இயல்பாகத் தன் மிகையற்ற நடிப்பின் வழியாகச் சாதித்துவிடுவார்.

தெரிவுக்கு உயிரூட்டல்

குணச்சித்திரம், நகைச்சுவை குணச்சித்திரம், ‘டார்க் ஹ்யூமர்’ குணச் சித்திரம், கதையின் நாயகன் என எவ்வாறான கதாபாத்திரத்தையும் அவருக்குக் கொடுக்கலாம். அது எவ்வளவு சிறிய அல்லது பெரிய கதாபாத்திரமாகவும் இருக்கலாம்.

ஆனால், ஏற்ற கதாபாத்திரத்தைப் பார்வையாளர்கள் கூர்ந்தும் ஆழ்ந்தும் ரசிக்கும்படி நடிகருக்கும் - பார்வையாளருக்குமான பிணைப் பைச் சாத்தியப்படுத்தும் ரசவாதம் கைவசமான கலைஞர்.

தங்கர்பச்சான், பிரபு சாலமன், சுந்தர்.சி எனப் பல மூத்த இயக்குநர்கள் ஜார்ஜ் மரியானின் திறமையை அறிந்து தங்கள் படங்களில் தவறாமல் அவரை இடம்பெற வைத்தனர். என்றாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்தான் இவரின் அசலான திறமையைக் கண்டறிந்து கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் அவருக்கு அடையாளம் கொடுத்து ஒளிரவைத்தார்.

<div class="paragraphs"><p>தேசிய விருது பெற்ற ‘கர்ணமோட்ச’த்தில் கூத்துக் கலைஞனாக..</p></div>

தேசிய விருது பெற்ற ‘கர்ணமோட்ச’த்தில் கூத்துக் கலைஞனாக..

ஃபார்முலாவுக்குள் சிக்கிக்கொண்ட வணிக சினிமா இயக்குநர்களின் தெரிவாக மட்டுமல்ல; சாந்தகுமார், எம்.மணிகண்டன், சுரேஷ் சங்கையா போன்ற மிடில் சினிமா இயக்குநர்களின் தவிர்க்க முடியாத தெரிவாகவும் ஜார்ஜ் மரியான் விளங்குகிறார்.

அதற்குக் காரணம், இயக்குநர் களின் நடிகராக மட்டுமன்றி, அவர்கள் படைத்த கதாபாத்திரங்களின் நோக்கத் தைத் தன் நடிப்பில் கச்சிதமாகவும் அளவு கூடாமலும் உயிரூட்டித் தருவதுதான். மற்ற நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களைப் போல், அவர் எங்கும் 'காமெடி' செய்வதாகத் தெரியாது.

ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு மனிதன் எப்படி இருப்பானோ அப்படி இருப்பார். அந்த இயல்பான தன்மையே ஒரு கட்டத்தில் நகைச்சுவையாக மாறும். இதுதான் நடிப்பில் அவரது ‘இயல்பின் உச்சம்’ வெளிப்படும் தருணம் எனலாம்.

வீதியிலிருந்து வெள்ளித்திரை

ஜார்ஜ் மரியானின் சொந்த ஊர் விளாத்திகுளம். பெற்றோர் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். மனைவி, மகன், மகள் என்று ஜார்ஜின் குடும்பம் மிகச் சிறியது. 1985இல், சென்னை லயோலா கல்லூரிப் பேராசிரியர் அருள்தந்தை அகஸ்டின் நடத்திவந்த வீதி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அப்போது நாடகாசிரியர் ந.முத்துசாமி தன்னு டைய புதிய நாடகம் ஒன்றுக்காக வீதி நாடக அனுபவம் கொண்ட கலைஞர்களைத் தேடியிருக்கிறார். அப்படித்தான் கூத்துப்பட்டறைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் ஜார்ஜ்.

<div class="paragraphs"><p>‘டிராக’னில் அப்பாவி அப்பாவாக..</p></div>

‘டிராக’னில் அப்பாவி அப்பாவாக..

அதன்பிறகு ஜார்ஜ் இல்லாமல் கூத்துப்பட்டறையின் எந்தப் பெரிய மேடைத் தயாரிப்பும் இல்லை என்றானது. 1989இல் தொடங்கி 2002 வரையில் கூத்துப்பட்டறையின் 120 நாடகங்களில் நடிகராக, அரங்க நெறியாள்கையில் ஆளுமை செலுத்துபவராக ஜார்ஜ் மரியானின் பாரிய பங்களிப்பு இருந்திருக்கிறது. நவீன நாடக மேடைகளில் ஜார்ஜின் திறமையைக் கண்ணுற்ற நடிகர் நாசர், தன்னுடைய `மாயன்’ (2002) படத்தில் ஜார்ஜ், பசுபதி உள்ளிட்ட பலரையும் துணைவேடங்களில் அறிமுகப்படுத்தினார்.

உயரத்தை மீறிய நடிப்பு

போலீஸ் கான்ஸ்டபி ளாக ஒரு துணை வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால் நல்ல உயரத் துடன் இருக்க வேண்டும், ஆனால் நாயகனைவிட உயரம் சற்றுக் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் கோலிவுட்டின் எதிர் பார்ப்பு.

ஆனால், ஜார்ஜின் நடிப்புத் திறமையைப் பார்த்து ‘காஞ்சீவரம்’ (2009) படத்தில், பிரகாஷ்ராஜைச் சிறையிலிருந்து பரோலில் அழைத்துச் செல்லும் கான்ஸ்டபிள் வேடத்தில் ஜார்ஜை நடிக்க வைத்தார் இயக்குநர் விஜய். அப்போது ‘காஞ்சீவரம்’ படத்தில் இயக்குநர் பிரியதர்ஷனிடம் விஜய் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.

அவர் வம்படியாக ஜார்ஜை போலீஸாக நடிக்க வைத்ததில் இன்னொரு காரணமும் இருந்தது. சுரேஷ் எழுதி, இயக்கி, சரத்குமார் காவல் அதிகாரியாக நடித்து 2004இல் வெளியான படம் ‘கம்பீரம்’. அந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்த சரத்குமாருக்கு ‘ஊமைத்துரை’ என்கிற கான்ஸ்டபிள் உதவியாளராக இருப்பார்.

அந்த வேடத்துக்கு, அப்படத்தின் இணை இயக்குநர் ஜார்ஜ் மரியானைத் தேர்வு செய்துவிட்டார். ஆனால், படப்பிடிப்புக்கு முதல்நாள் தேர்வாகியிருந்த துணை நடிகர்களைப் பார்த்த இயக்குநர், ஜார்ஜை நிராகரித்தார். “இவரது உயரம் மிகக் குறைவாக இருக்கிறது.

<div class="paragraphs"><p>‘மதராசப்பட்டினம்’ இங்கிலீஷ் வாத்தியாராக..</p></div>

‘மதராசப்பட்டினம்’ இங்கிலீஷ் வாத்தியாராக..

சரத்குமார் சார் பக்கத்தில் இவர் நின்றால் ரொம்பவும் குள்ளமாக இருப்பார்” என்று ‘ரிஜக்ட்’ செய்து விட்டார். இதை ஜார்ஜ் வழியாகக் கேள்விப்பட்ட விஜய், ‘நடிப்புதான் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டுமே தவிர உயரமல்ல’ என்று சொன்னார். அத்துடன் நின்றுவிடவில்லை; வேறொரு கதாபாத்திரத்துக்கு ஜார்ஜைத் தேர்வு செய்திருந்தவர், அப்படத்தில் உணர்வுபூர்வமான போலீஸ் வேடத்தை அவருக்குக் கொடுத்தார்.

படம் வெற்றிபெறாவிட்டாலும் ஜார்ஜுக்குப் படவிழாக்களில் கிடைத்த பாராட்டுகள் ஏராளம். ஜார்ஜை விஜய் அத்துடன் விட்டு விடாமல் ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘சைவம்’ என்று தன்னுடைய படங்களில் அட்டகாசமான ரோல் களை அவருக்குக் கொடுத்தார்.

<div class="paragraphs"><p>விஜய்சேதுபதியின் அங்கீகார முத்தம்..</p></div>

விஜய்சேதுபதியின் அங்கீகார முத்தம்..

‘உயரமில்லை’ என்று எந்த ரோல் ஜார்ஜ் மரியானுக்கு மறுக்கப்பட்டதோ, அதற்கு மாறாக அதிக போலீஸ் கதாபாத்திரங்களைக் காலம் அவரது கைகளில் பூமாரங்போல் மீண்டும் மீண்டும் கொண்டுவந்து கொடுத்தது.

நகைச்சுவை கலந்த குணச்சித்திர போலீஸாகப் பல படங்களில் கலக்கியவருக்கு ‘கலகலப்பு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், தலையில் அடிபட்ட தாக்கத்தில், ‘தங்கப் பதக்கம்’ சிவாஜி தொடங்கி ‘சிங்கம்’ சூர்யா வரை மாஸ் ஹீரோ போலீஸ் வேடங்களின் மாடுலேஷன்களில் பேசித் தெறிக்கவிட்டுச் சிரிக்க வைத்திருப்பார்.

நகைச்சுவைக்கு இலக்கணம்

பிரதீப் ரங்கநாதனின் அப்பாவி - ஏமாளி அப்பா வாக ‘டிராகன்’ படத்தில் வரும் ஜார்ஜ் மரியானின் திரை வாழ்க்கையில் ‘கைதி’ திரைப்படம் ஒரு மைல்கல். திருச்சி காவல் ஆணையாளர் அலுவலகத்துக்குப் பணியிட மாற்றல் கடிதத்துடன் வந்து காத்திருப்பார் ஜார்ஜ். எல்லாக் காவலர்களும் உயிரைக் காத்துக்கொள்ள ஓடிவிடுவார்கள்.

அங்குத் தனியொருவராக இருக்கும் ஜார்ஜ் மரியானிடம், “இந்த நிமிசத்திலிருந்து நீங்க ட்யூட்டில ஜாய்ன் பண்ணியாச்சு. கமிஷனர் ஆபீசையும் அங்க இருக்கிற ரெக்கார்டுகளையும் நீங்கதான் காப்பாத்தணும்.

முதல்ல ஆபீஸை இழுத்து மூடுங்க” என்று உயரதிகாரி நரேன் சொன்னதும், காக்கிச் சீருடையை அவசர அவசரமாகப் போட்டுக்கொண்டு ஓடிப்போய் அலுவலகத்தின் காம்பவுண்ட் கேட்டை மூடும்போதே, அப்பாவித் தனமான உடல்மொழியில் ஆச்சரியப் படுத்துவார்.

<div class="paragraphs"><p>‘கைதி’யில் கடமை உணர்வுமிக்க காவலராக...</p></div>

‘கைதி’யில் கடமை உணர்வுமிக்க காவலராக...

அலுவலகத்தின் உள்ளே, போக்குவரத்து மீறல் வழக்குக்காக வந்திருந்த 4 கல்லூரி மாணவர்கள், ஒரு மாணவி உதவியுடன் கதவு, ஜன்னல்களை மூடித் தடுப்புகளை வைத்து நிமிரும்போது முகத்தில் எந்த உணர்ச்சியையும் மிகையாகக் காட்டாமல், மிகத் தீவிரமான முகபாவனையுடன் எதிரிகளின் வரவுக்காகவும், மேலதிகாரியின் போனுக்காகவும் காத்திருக்கும்போது அவர் உருவாக்கும் சூழல், பதற்றம் கலந்த சிரிப்பை வரவழைக்கும். முகபாவனையற்ற இந்த ‘உலர் நகைச்சுவை’ ஜார்ஜ் மரியானின் தனிப்பட்ட சொத்தாகிவிட்டது.

<div class="paragraphs"><p>கூத்துப்பட்டறை நாள்களில்…</p></div>

கூத்துப்பட்டறை நாள்களில்…

அதே ‘கைதி’ படத்தின் கிளை மாக்ஸில், கனரக மோட்டார் மெஷின் கன் துப்பாக்கி ஒரு டிரெங்குப் பெட்டியில் இருப்பதை, கார்த்தியும் ஜார்ஜும் பார்ப்பார்கள். அந்தத் தருணத்தில் ஒரு சிறுவனைப் போன்ற ஆச்சரியத்தை முகத்தில் காட்டும்போது, அவருடைய ‘வெள்ளந்தி நகைச்சுவை’ பாணியை உணர்ந்து திரையரங்குகள் சிரிப்பலையில் அதிர்ந்தன.

அந்த மெஷின் கன்னை கார்த்தியிடம் எடுத்துக்கொடுத்துவிட்டு, அதன்விசையை முடுக்கிவிட்டு, தோட்டாக் கள் வரிசைகட்டும் பெட்டியைத் தூக்கிச் சுமந்து, அந்த முரட்டுக் கைதியின் அதிரடி ஆக்‌ஷனில் பங்கேற்கும்போது மாஸ் நாயக னுக்கு இணையான ஆக்‌ஷன் கதாபாத்திரமாக ஜார்ஜ் மரியன் திரைவெளியில் உயர்ந்து நின்றார்.

சக கதாபாத்திரங்களைத் துன்புறுத்தாமல், கதையின் போக்கு, காட்சியின் சூழலைக் கொண்டு அவர் நிகழ்த்தும் இந்த நயமான நகைச்சுவை மேஜிக், ‘கையறு நிலையின் நகைச்சுவையாகவும் ஆர்ப்பாட்டமில்லாத அங்கதமாகவும்’ மாறிவிடுகிறது. அவருடைய இந்தப் பாணியின் தேவை தமிழ் சினிமாவின் மாஸ் மசாலா படங்களுக்கும் மிடில் சினிமாக்களுக்கும் உளவியல் கலந்த உணர்வூக்கியாக மாறிவிட்டது.

- jesudoss.c@hindutamil.co.in

ஜார்ஜ் மரியான்: உயரம் ஒரு பொருட்டல்ல! | ஜெயித்த கதை
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in