

”போராடுகிறவர்கள் தோற்கலாம்; போராடாதவர்கள் ஏற்கெனவே தோற்றுவிட்டார்கள்” என்கிற ஜெர்மனியின் நாடக ஆசிரியரும், கவிஞருமான பெர்தோல் பிரெக்ட்டின் வார்த்தைகளோடு இந்தப் படம் தொடங்குவது, அதன் உள்ளடக்கத்தோடு அவ்வளவு பொருந்திப் போவதைச் சொல்லாமல் இருக்க முடியாது.
இன்று நேற்றல்ல, இந்தப் போர் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் போர். வர்க்க வேறுபாடுகள் தோன்றிய காலத்திருந்தே, உடமை வர்க்கமும், உழைக்கும் வர்க்கமும் தோன்றிய காலத்திலிருந்தே நடந்து கொண்டிருக்கும் போர். ராணுவங்கள் சம்பந்தப்படாத போர். ஒருவகையில் இந்தப் போர் வாழ்க்கைக்கான போர். இன்னொரு பக்கம் இந்தப் போர் அடிப்படைத் தேவைகளுக்கான, அத்தியாவசியமான போர்.
உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் இப்படிப்பட்ட போர் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டேதானிருக்கிறது. சந்தை எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இந்த உலகத்தில், இரக்கமற்ற சந்தைக்கு எதிரான தொழிலாளர்களின் இந்தப் போர்தான் உலகத்தை இயங்கச் செய்து கொண்டிருக்கிறது.
சமீப காலங்களில் பிரான்ஸில் நடந்த பல தொழிலாளர்களின் போராட்டங்களை அடிப்படையாக வைத்து அற்புதமான இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டீபன் பிரைஸ். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்கும், கச்சிதமாக அதை இயக்கியதற்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நீண்ட நாள்கள் உழைத்து, 23 நாள்களில் படமாக்கியிருக்கிறார்கள் குழுவினர். சந்தை தொழிலாளர்களை எப்படியெல்லாம் சக்கையாகப் பிழிகிறது என்பதைக் காட்சி மொழியில் கடத்தியிருக்கிறார். “சந்தை கண்ணுக்குத் தெரியாத சக்திதான், ஆனால் அதை மனிதர்கள்தானே இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ஸ்டீபன். அதேபோல மிகத் தெளிவாக “நான் நடுநிலையானவன் அல்ல; உறுதியாகத் தொழிலாளர்கள் பக்கமே இருக்கிறேன் என்று உரக்கச் சொல்கிறார்.
இந்தத் திரைப்படம் மூலதனம் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையேயான மோதலை விரிவாக விளக்கிச் சொல்கிறது. மூலதனத்தை வைத்திருக்கிற முதலாளி தொழிலாளர்களின் உழைப்பை எப்படிச் சுரண்டுகிறான் என்பதையும், எல்லாவற்றையும் அறிந்துகொண்ட தொழிலாளர்கள் எப்படி எதிர்த்து நிற்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
தொழிற்சாலைத் தொழிலாளியாகவும், சங்கத் தலைவராகவும் லாரன் அமெதேயோ என்கிற கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வின்செண்ட் லிண்டன். இருவரும் இணைந்து செய்த முந்தைய திரைப்படம், கான் திரைப்பட விழாவில் லிண்டனுக்குச் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுத் தந்தது.
நீங்கள் படங்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள், கதாபாத்திரமா, திரைக்கதையா, இயக்குநரா, எது முக்கியம் என்கிற கேள்விக்கு, முதன்மையாகக் கதை, கதை, கதைதான் என்று சொல்கிறார் நடிகர் வின்செண்ட் லிண்டன். தான் தேர்ந்தெடுக்கிற கதைகள் எப்படி அற்புதமோ, அதற்கு ஒருபடி மேல் சென்று தன்னுடைய நடிப்பால் ஒவ்வொரு கதையையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறார் லிண்டன். மிகமுக்கியமாக தொழிற்சங்கத் தலைவராக இந்தப் படத்திற்கு அவர் வழங்கியிருக்கும் யதார்த்தமான, ஆக்ரோஷமான பங்களிப்பு என்றும் நினைவில் நிற்கக்கூடியதே!
ஜெர்மனியைச் சேர்ந்த டிம்கே குழுமம், பிரான்ஸின் அஜைன் நகரில் பெர்ரின் என்கிற பெயரில் கார்களுக்கான உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருக்கிறது. மொத்தம் 1100 தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலையில் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று நிர்வாகத்திடமிருந்து, தொழிற்சாலையை மூடப்போகிறோம் என்கிற அதிர்ச்சி செய்தி அத்தனை தொழிலாளர்களையும் நிலைகுலையச் செய்துவிடுகிறது. மூடுவதற்கான காரணங்களாக, சந்தை நெருக்கடி, போட்டித்திறன் இல்லாமை, குறைந்த லாபம் என்று சொல்கிறார்கள்.
ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள் நிர்வாகத்தினர். லாபம் குறைவாக இருக்கிறதென்று சொல்லி இரண்டு வருடங்களாக ஊதிய உயர்வு கொடுக்காமல் வேலை வாங்கியிருக்கிறார்கள். வேலை நேரத்தை அதிகப்படுத்தி கடுமையான உழைப்புச் சுரண்டலை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் கடந்த ஆண்டு மட்டும் 17 மில்லியன் டாலர் யூரோ லாபமீட்டியிருக்கிறது நிறுவனம் என்கிற புள்ளிவிவரம் தொழிலாளர்களிடையே கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் வழிநடத்த, எங்களுக்கு வேலை வேண்டும், தொழிற்சாலையை மூடக்கூடாது என்கிற கோரிக்கைகளோடு நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள்.
நிர்வாகத்தினர் ஏற்கெனவே ஐந்து ஆண்டுகள் வேலைக்கான உத்திரவாதத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவோ, பரிசீலனை செய்யவோ அவர்கள் தயாராக இல்லை.
தொழிலாளர்களும் போராட்டத்தைக் கைவிடவோ, அவர்கள் கொடுக்கும் சொற்ப அளவிலான பணிநீக்க இழப்பீட்டை வாங்கிக்கொண்டு விலகிச்செல்லவோ தயாராக இல்லை. தொழிற்சங்கத் தலைவர் என்கிற முறையில் லாரன் ஒவ்வொரு தொழிலாளரையும் போராட்டக்களத்தில் சந்தித்துப் பேசுகிறார். அவர்களுக்கு நிர்வாகத்தின் மறைமுக திட்டங்களையும் விளக்கிச் சொல்கிறார். போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் நிர்வாகத்தின் பக்கமிருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கவே அதிபரைச் சந்திக்கப் புறப்படுகிறார்கள்.
அதிபர் அலுவலகத்தின் முன்னால் நீண்டநேரம் காத்திருந்தும் அனுமதி கிடைக்காமல் இருக்கவே, அங்கும் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். நீண்டநேரம் கழித்து அதிபரின் சார்பாக சிலர் வருகிறார்கள். ”சந்தை கருணையற்றது, நாங்கள் உங்களைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி தொழில் தொடங்க, நடத்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அப்படித் தொடங்கப்பட்ட தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்தவும் இல்லையென்றால் மூடவும் தொழிலதிபருக்கு உரிமை இருக்கிறது” என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட தொழிலாளர்கள் அரசுத்தரப்பைப் பார்த்து, “நீங்கள் யாருக்காக வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்கிற நெருப்புக் கேள்வியைக் கேட்கிறார்கள். அதிபரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள் தொழிலாளர்கள்.
குழுமத்தின் ஜெர்மானியத் தலைவரைச் சந்திக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது வேலை நிறுத்தப் போராட்டம். சில தொழிலாளர்கள் லாரனுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். நிர்வாகத்தின் இழப்பீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்கிற முடிவைத் தெரிவிக்கிறார்கள். வேலை நிறுத்தத்தைத் தொடர்கிறவர்கள் மற்றும் கைவிடுகிறவர்கள் என இரண்டாகப் பிரிகிறார்கள் தொழிலாளர்கள். லாரன் அவர்களிடம் எவ்வளவோ பேசிப் பார்க்கிறார், எந்தப் பயனும் இல்லை. அவர்கள் தொழிற்சாலைக்குள் திரும்பச் செல்கிறார்கள். அவர்களுக்குப் பின்னே சென்று, இயங்கிக் கொண்டிருக்கும் அத்தனை இயந்திரங்களையும் அணைக்கிறார்கள். எல்லாரும் கைகோத்து தொழிற்சாலையின் வாயிலை அடைத்து நிற்கிறார்கள். அதிகாரத்தால் ஏவிவிடப்பட்ட காவல்துறை அவர்களைக் கலைத்துப் போடுகிறது.
போராடுவது என்று முடிவு செய்த பிறகு, வேறு எந்த எண்ணமும் இருக்கக் கூடாது. இலக்கை அடையும் வரையிலும் போராடுவதுதான் முக்கியம் என்கிற கொள்கையில் லாரனும் அவரோடு இருப்பவர்களும் உறுதியாக இருக்கிறார்கள். ஊடகங்கள் வழியாகப் போராட்டத்தின் செய்திகள் எல்லாருக்கும் போய்ச் சேர்கிறது. அரசுத்தரப்பு நடுநிலை வகிக்க நிர்வாகம் தொழிற்சங்கத் தலைவர்களோடு பேச்சுவார்த்தைக்கு உடன்படுகிறது. பாரிஸில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு லாரன் உள்ளிட்ட தலைவர்கள் செல்கிறார்கள்.
நீட்டி முழக்கி நிர்வாகம் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் பங்குதாரர்களுக்கு 25% லாபம் கிடைத்திருக்கிறது. குழுமத்தலைவர் 13% சம்பள உயர்வு பெற்றிருக்கிறார். லாபம் இல்லையென்று எப்படிச் சொல்வீர்கள் என்று உண்மையை முகத்திற்கு நேராக வெளிப்படுத்துகிறார்கள் தொழிலாளர்கள்.
உண்மையை எதிர்கொள்ள அவசியமில்லாத நிர்வாகம், சந்தையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க, கோபமடைகிறார்கள் தொழிலாளர்கள். நேரடியாக வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேட்கிறார்கள். தொழிலாளர்களுக்குச் சாதகமாக எதுவும் செய்ய அவர்கள் தயாராக இல்லையென்று தெரிந்த பிறகு பேச்சுவார்த்தையால் பயனில்லை என்கிற முடிவிற்கு வருகிறார்கள் தொழிலாளர்கள்.
அரசுத்தரப்பும் முதலாளிக்கு ஆதரவாக அப்பட்டமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து வெளியேறுகிறார்கள். தங்களுடைய குரலை யாரும் கேட்கவில்லையே என்கிற கோபம் தொழிலாளர்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிர்வாகத்தினர் அந்நேரம் வெளியே வர, அவர்களுக்கு எதிராகக் கோஷமிடுகிறார்கள்.
சிலர் அவர்களைத் தாக்கவும் செய்கிறார்கள். காரில் ஏறிய குழுமத்தலைவரை காரோடு கவிழ்த்து விடுகிறார்கள். அது போதாதா! வன்முறையாளர்கள் என்று வழக்கம்போல அழைக்கப்படுகிறார்கள் அந்தத் தொழிலாளர்கள். இத்தனை நாள் அமைதியாகப் போராடியதை விட்டுவிட்டு நல்வாய்ப்பாகக் கிடைத்த அந்தத் தாக்குதல் சம்பவத்தை எடுத்துக்கொள்கிறது நிர்வாகம்.
இனி எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், மொத்தத் தொழிலாளர்களும் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் அறிவிக்கிறது. மீண்டும் தொழிலாளர்கள் இருபிரிவாக வாக்குவாதம் செய்கிறார்கள். சிலர் லிண்டனின் அணுகுமுறையை விமர்சித்து சண்டையிடுகிறார்கள். லிண்டனின் மகளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்கிற செய்தி அவரைக் கொஞ்சம் ஆற்றுப்படுத்துகிறது. மருத்துவமனைக்குச் சென்று குழந்தையைப் பார்க்கிறார். பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
கிட்டத்தட்ட தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிரான போரில் தோல்வியடைந்திருக்கும் அவருடைய கண்களும், முதலாளி, தொழிலாளி, சந்தை, லாபம், போராட்டம் என்கிற எதுவும் தெரியாத புதிதாகப் பிறந்திருக்கும் அந்தக் குழந்தையின் கண்களும் சில விஷயங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. ”போராடுகிறவர்கள் தோற்கலாம்; போராடாதவர்கள் ஏற்கெனவே தோற்றுவிட்டார்கள்” என்பதாகத்தான் இருக்குமென்று நம்புகிறேன்.
கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com