

1970களில் அமெரிக்க அதிபராக நிக்சன் பதவியில் இருந்தபோது, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ் ஒரு சம்பவத்தைத் தொடங்கி வைத்தது. கண்சிவந்த அதிபர் நிக்சன் அந்தப் பத்திரிகையின் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தினார். அவ்வளவுதான் என்று நிக்சன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது, தி நியூயார்க் டைம்ஸில் விடுபட்ட செய்தியை இன்னும் விரிவாக, இன்னொரு பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது. நிக்சனின் கோபம் அளவிட முடியாத அளவிற்கு அதிகமானது.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. அதனால் என்ன, அதிகாரம் அமைதியாக இருந்துவிடுமா? வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு வித்தியாசமான தடைபோட்டார் நிக்சன். அப்படி என்ன, அந்தப் பத்திரிகையின் மீது அதிபர் நிக்சனுக்குக் கோபம்? ஒன்றுமில்லை அந்தப் பத்திரிகை உண்மையைச் சொன்னது. அதிகாரத்தால் அதுவரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த அத்தனையும் பொய் என்று முகத்தில் அறைந்தது. அந்த உண்மை அமெரிக்காவின் மானத்தைக் கப்பலேற்றிய ஒரு போர் சம்பந்தப்பட்டது.
இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் 2017 இல் வெளிவந்த ’தி போஸ்ட்’ என்கிற இந்தத் திரைப்படம், அமெரிக்காவின் அதிகாரத்தை அசைத்துப் பார்த்த ஒரு மாபெரும் நிகழ்வைக் காட்சி மொழியில் திரையில் காட்டியது. இந்தத் திரைப்படத்தை நெருங்குவதற்கு முன்னால், அதன் பின்னணிச் செய்தி ஒன்றை அறிந்துகொள்வது அவசியமானது. அதுதான் அமெரிக்க வியட்நாம் போர். அமெரிக்கா எதற்காக வியட்நாம் மீது போர் தொடுத்தது?
அமெரிக்கா ஈராக் மீது எதற்காகப் போர் தொடுத்தது? அமெரிக்கா ஈரான் மீது எதற்காகப் போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது? இன்றைய அமெரிக்காவின் அணு ஆயுதப் பூச்சாண்டி போல, அன்று அமெரிக்காவின் அடிவயிற்றில் ஒரு பூதம் அதிர்வை உணரச் செய்துகொண்டிருந்தது. அது கம்யூனிசம் எனும் பூதம். அமெரிக்கா வியட்நாம் மீது போர் தொடுத்ததற்கான காரணம், கம்யூனிசப் பரவலைத் தடுப்பதுதான். சின்னஞ்சிறு நாடுதானே, ஊதித் தள்ளிவிடலாம் என்று தோராயமாக 14,000 கி.மீ. தொலைவிலிருந்து படைதிரட்டிப் பறந்து வந்தது அமெரிக்கா.
ஆனால், யுத்தக்களத்தில் நிலைமை வேறாக இருந்தது. அந்த நிலமும் அந்தக் காடுகளும் அமெரிக்காவிற்குப் புதிதாக இருந்தன. தலைவர் ஹோசிமின் தலைமையில் மொத்த வியட்நாமும் போருக்குத் தயாராக இருந்தது அமெரிக்காவிற்குத் தலைவலியாக இருந்தது. அவர்களின் அற்புதமான கெரில்லா யுத்தம் அமெரிக்க ராணுவத்தை நிலைகுலையச் செய்துகொண்டிருந்தது.
தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத பலவீனமான அமெரிக்கா, தன் நாட்டு மக்களிடம் வெற்றியடைந்து கொண்டிருக்கிறோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த யுத்தச் சூழலில் அமெரிக்க அரசின் ராணுவ ரகசிய நடவடிக்கைகள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் அடங்கிய ஒரு கோப்பு பெண்டகனில் இருந்து அதன் ஊழியர் ஒருவரால் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. அந்த வரலாற்றைத்தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார் ஸ்பீல்பர்க்.
1966இல் அமெரிக்க வியட்நாம் யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன், முன்னாள் ராணுவப் பகுப்பாளரான டேனியல் எல்ஸ்பெர்க்கை யுத்தத்தின் போக்கை ஆய்வுசெய்ய வியட்நாம் அனுப்புகிறது. அமெரிக்க ராணுவ வீரர்களோடு இணைந்து ஆய்வுசெய்கிறார் எல்ஸ்பெர்க். ஆய்வுப்பணியை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்புகிறார். யுத்தத்தில் அமெரிக்கா வெற்றிபெற வாய்ப்பே இல்லையென்று பாதுகாப்புச் செயலரிடம் அறிக்கையை வழங்குகிறார். வாங்கிக்கொண்ட பாதுகாப்புச் செயலர் வெளியே நிற்கும் பத்திரிகையாளர்களிடம் யுத்தத்தில் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று பொய் சொல்கிறார்.
ஆனபோதிலும், எல்ஸ்பெர்க்கின் இதயத்தை வியட்நாமின் உண்மை உறுத்திக் கொண்டே இருக்கிறது. பெண்டகனின் ரகசிய அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் 7,000 பக்கங்களிலான ஆவணங்களை நகலெடுக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வேலை செய்யும் ஒருவரிடம் அந்த ஆவணங்களில் சிலவற்றைக் கொடுக்கிறார். நியூயார்க் டைம்ஸில் அந்தச் செய்தியை வெளியிடலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.
இன்னொரு பக்கம் தந்தை மற்றும் கணவரின் மரணத்தைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை வழிநடத்தும் பொறுப்பு கேதரின் கிரஹாமின் கைகளுக்கு வருகிறது. வீட்டை நிர்வகித்துக் கொண்டிருந்த பெண்தானே என்கிற ஏளனப் பார்வைகள் சுற்றிலும் நிறைந்திருக்கின்றன என்பதை உணர்கிறார் கேதரின். பத்திரிகையை மிகச் சிறந்த இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்றும், முதலீட்டாளர்களை இன்னும் அதிகமாகக் கொண்டுவர வேண்டு என்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மிக முக்கியமாக, பென் பிராட்லியை நிர்வாக ஆசிரியராக நியமிக்கிறார்.
எல்ஸ்பெர்க் ஆவணங்களில் இருந்து கிடைத்த முதல் செய்தியை நியூயார்க் டைம்ஸ் வெளியிடுகிறது. அமெரிக்கா முழுவதும் அரசின் மீதான அதிருப்தி அலை பெருகத் தொடங்குகிறது. தாங்க முடியவில்லை அதிகாரத்தால், நீதிமன்றத்தின் வழியாகத் தடைவிதிக்கிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு.
இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் அலுவலகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எல்ஸ்பர்க்கின் ஆவணங்களில் சிலவற்றை கொடுத்துவிட்டுச் செல்கிறார். நிர்வாக ஆசிரியர் பென் பிராட்லி வெளியிடலாம் என்கிற முடிவிற்கு வருகிறார். ஆனால், ஏற்கெனவே நியூயார்க் டைம்ஸின் பிரச்சினையைக் காரணம் காட்டி, சமூக நிலைமைகளைக் காரணம் காட்டி அப்போதைக்கு வேண்டாமென்கிறார் கேதரின்.
வாஷிங்டன் போஸ்ட்டின் உதவி ஆசிரியர் ஒருவர் எல்ஸ்பெர்க்கைத் தேடிக் கண்டறிகிறார். அவரிடம் எல்ஸ்பெர்க் 4,000 பக்கங்களில் இருக்கும் பென்டகன் ரகசியத்தைக் கொடுக்கச் சம்மதிக்கிறார். விமானத்தில் அள்ளிவருகிறார் அந்த உதவி ஆசிரியர். வரிசை மாறி இருக்கும் ஆவணங்களை ஆய்வு செய்து வரிசைப்படுத்துகிறார்கள் பத்திரிகைக் குழுவினர்.
வழக்கறிஞர் குழுவினர் விரைந்து வருகிறார்கள். ஆவணங்களைப் பார்த்துவிட்டு மலைத்துப் போகிறார்கள். வெளியிட்டால் அதிபர் நிக்சனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். அரசாங்கம் கண்டிப்பாகப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும், இருக்கும் முதலீட்டாளர்கள் ஒருவேளை விலக நேரிடலாம், நம்மைத் தனிமைப்படுத்தும் வேலைகள் நடக்கலாம் என்று குழம்புகிறார் கேதரின்.
ஆனால், ”அரசாங்கத்தை விடவும் மக்களின் உரிமைகள் முக்கியமானதில்லையா! மேலும் நாம் இதை வெளியிட்டால் வாஷிங்டன் போஸ்ட் மீது எல்லாருக்கும் மதிப்பு உயரும்” என்று உறுதியாகப் பேசுகிறார் பென் பிராட்லி. கேதரின் வெளியிடச் சம்மதிக்கிறார்.
அமெரிக்காவை உலுக்கப்போகும் அந்த ரகசிய ஆவணங்கள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளிவருகிறது. அமெரிக்க மக்கள் தங்களிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிராகக் கோபம் கொண்டு வீதிக்கு வந்து போராடுகிறார்கள். போர் வேண்டாம், ராணுவத்தினரை வியட்நாமிலிருந்து திரும்ப அழைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் பெருகின்றன. நிக்சன் அரசாங்கம் வாஷிங்டன் போஸ்டின் மீது பாய்வதற்கு முன்னால், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீதிமன்றம் செல்கிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் சேர்ந்துகொள்கிறது.
அதிபர்களின், அரசாங்கத்தின், அதிகாரத்தின் பொய்யைக் கண்டறிந்த நீதிமன்றம் பத்திரிகைகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறது. உண்மை வெளிப்பட்டு விட்டதே என்று அதிபர் நிக்சன் திருந்தி விட்டாரென்று நீங்கள் மட்டுமல்ல, யாருமே நினைக்க மாட்டார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு அதிபர் நிக்சன் ஒரு தீர்ப்பு சொன்னார், “இனிமேல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளர்கள் யாரும் வெள்ளை மாளிகைக்குள் நுழையக் கூடாது” என்று.
அப்படியே கடந்தது ஒரு வருடம். மீண்டும் அதே வாஷிங்டன் போஸ்ட்டில் நிக்சன் சம்பந்தப்பட்ட ஓர் ஊழல் வெளியிடப்பட்டது. அதுதான் வாட்டர்கேட் ஊழல். அதிபர் மீதான ஊழல் புகார் அமெரிக்கா முழுவதும் அலையடிக்கத் தொடங்கியது. இம்முறை நிக்சன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் வெள்ளை மாளிகைக்குள் வரக் கூடாது என்று சொன்ன அதிபர் நிக்சன், அமெரிக்க அதிபர் வரலாற்றில் முதன்முறையாகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறினார்.
ஆம், ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையால் இதையெல்லாம் செய்ய முடிந்தது. மக்களுக்காக, உண்மைக்காக ஓர் அதிபரையும் எதிர்க்கலாம் என்கிற முடிவிற்கு வந்தார்கள் அவர்கள்.
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com