Last Updated : 18 Oct, 2013 10:08 AM

 

Published : 18 Oct 2013 10:08 AM
Last Updated : 18 Oct 2013 10:08 AM

கொங்கு மண்டலம்: தமிழ்த்திரையின் தாய்வீடு

சின்னச்சின்ன இழை பின்னிப் பின்னிப்வரும் சித்திரக் கைத்தறிச் சேலைகளின் மையமாக மட்டும் கொங்குமண்டலம் விளங்கவில்லை. உழைப்போடு கனவையும் சேர்த்துப் பின்னிப்பின்னி மக்களை மகிழ்வித்த மண்ணும் கொங்குமண்தான்.

இந்த உலகத்திற்கு திரைப்படங்கள் அறிமுகமான பத்தாண்டுகளில் அதை கோவைக்குக் கொண்டுவந்தவர் சாமிக்கண்ணுவின்சென்ட். தொடர்வண்டித்துறையில் அலுவலகஊழியராக இருந்த அவர் திரைப்படங்கள் மீதான ஆர்வம் காரணமாக 1905 ஆம் ஆண்டு திரைப்படம் ஒளிபரப்பும் கருவியை விலைக்கு வாங்கி, அதன்மூலம் பிரெஞ்சுப்படங்களை தெருத்தெருவாக கொண்டுபோய்த் திரையிட்டார். அவற்றின் தொடர்ச்சியாக 1914 ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் நிறுவிய வெரைட்டிஹால் சினிமாதான் தமிழகத்தின் முதல்திரையரங்கம். பின்னாட்களில் டிலைட் திரையரங்கம் என்கிற பெயர் பெற்று இன்றும் நிலைத்திருக்கிறது.

தென்னிந்தியாவில் வேறெங்கும் படப்பிடிப்புத்தளங்களும் திரையரங்குகளும் இல்லாத காலத்திலேயே கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோஸ், பக்ஷிராஜா ஸ்டுடியோஸ், கோயம்புத்தூர் டாக்கிஸ், பரமேஸ்வரி டாக்கிஸ் மற்றும் ஜூபிடர்பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தன. திலிப்குமார், மீனாகுமாரி நடித்த ஆஸாத், ஜகதலபிரதாபன், மலைக்கள்ளன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இங்குதான் உருவாகின. 1930 களில் சந்திராபிரபா பிக்ச்ர்ஸ் என்கிற படநிறுவனம் தொடங்கப்பட்டு தேன்மூலம் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

கோவையைத் தொடர்ந்து 1935 ஆம் ஆண்டு சேலத்தில் மாடர்ன்தியேட்டர்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. 1960 வரை சுமார் நூறுபடங்களை இந்நிறுவனத்தின் சார்பில் எடுத்துவிட்டார்கள். முதல்வண்ணப்படமான அலிபாபாவும் நாற்பதுதிருடர்களும், முதன்முதலாக பியு.சின்னப்பா இரட்டைவேடங்களில் நடித்த உத்தமபுத்திரன், 1938 இல் உருவான முதல்மலையாளப்படம் ஆகியன உட்பட பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய நிறுவனம்தான் மாடர்ன்தியேட்டர்ஸ். இதன் உரிமையாளர் திருசங்கோடுராமலிங்கம் சுந்தரம் என்கிற டி.அர்.சுந்தரம் இலண்டனில் படித்து அங்கேயே கிளாடிஸ் என்பரை மணந்தவர். நெசவாளர்கும்பத்தில் பிறந்து துணிகள் பற்றிய உயர்படிப்புப் படித்திருந்தும் திரைத்துறையின் மூலம் கொண்டிருந்த ஆர்வத்தால் திரைப்படநிறுவனத்தைத் தொடங்கினார். அவற்றின் மூலம் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அந்நிறுவனம் மூடப்பட்ட பின்னரும் இன்றளவும் பெயர் சொன்னால் தெரிகிற அளவு புகழ் பெற்றுள்ளது.

அண்மையில் தமிழ்த்திரையுலக நூற்றாண்டுவிழாவையொட்டி கலைஞர்கருணாநிதி எழுதிய கட்டுரையில், “ஈரோடு குடியரசு அலுவகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கோவையிலிருந்து திரைப்படத்திற்கு வசனம் எழுதவேண்டும் என்று அழைப்பு வந்தது. அழைத்தவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி. அப்போது தந்தைபெரியாரின் அனுமதியோடு கோவை சென்றேன். ஜூபிடர் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்ட ராஜகுமாரி படத்துக்கு வசனம் எழுதினேன். அந்தப்படத்தில் முதன்முதலாக புரட்சிநடிகர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். அதன்மூலம் தமிழ்த்திரையுலகை மட்டுமல்ல தமிழகத்தையும் ஆண்ட இருபெரும் தலைவர்களின் திரைப்பயணம் கோவையிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது என்பதை உணரலாம்.

பக்திப்படங்களுக்குப் பெயர் பெற்ற ஏபி.நாகராஜன், கேபி.சுந்தராம்பாள் ஆகியோரும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். பக்திமணம் கமழும் பட நிறுவனமாகத் திகழ்ந்த தேவர் பிலிம்ஸின் பிறப்பிடமும் கோவைதான்.

புகழ்பெற்ற பல்வகைத் தொழில்நுட்பக்கலைஞர்கள் இங்கிருந்தாலும் இசைத்துறையில் யாரும் வரவில்லை என்கிற குறையைப் போக்கும் வண்ணமாக இருப்பவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்கள் உட்பட பலபடங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் சுப்பையாநாயுடு கோவையைச் சேர்ந்தவர்தான். டி.எம்.சௌந்தர்ராஜனை முதலில் பாடவைத்தவர் இந்த சுப்பையாநாயுடுதான்.

சென்னைக்கு திரைப்படம் இடம்பெயர்ந்த பின்னர் கோவையிலிருந்து பல வித்தகர்கள் திரைத்துறைக்கு வந்து பங்களித்து அதன் பெருமையை உயர்த்தியிருக்கிறார்கள். திரைக்கதை மன்னராக அறியப்பட்டிருக்கும் கே.பாக்யராஜ், தாம் இயக்கிய பெரும்பாலான படங்களை வெற்றிப்படங்களாகவே கொடுத்திருக்கும் இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஆர்வி.உதயகுமார், சுந்தர்சி ஆகியோர் கோவை மண்ணைச் சேர்ந்தவர்கள்தாம்.

ஈரோடுமுருகேஷ், ஈரோடுசௌந்தர் ஆகியோரின் பெயர்களிலிருந்தே அவர்களின் பூர்விகத்தை அறியலாம். இவர்கள் இருவரும் தலா இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார்கள். தலைவாழைஇலையில் பரிமாறப்படும் உணவை உண்டு முடித்தபின், அந்த இலையை, தம் பக்கம் பார்க்கிற மாதிரி மடித்துவிட்டால் அது உறவை வளர்ப்பதென்றும் எதிர்ப்பக்கமாக மடித்தால் உறவை வெறுப்பதாகவும் பொருள் என்கிற கொங்குமக்களின் கலாச்சார அடையாளத்தை உலகத்துக்குத் தன் வசனத்தின் மூலம் வெளிப்படுத்தியவர் ஈரோடுசொளந்தர்.

ஊமைவிழிகள் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு ஒரு புதுஇரத்தம் பாய்ச்சியதோடு அதுவரை கவனிப்பாரற்று இருந்த திரைப்படக்கல்லூரிமாணவர்களுக்கு திரையுலகில் மட்டுமின்றி வெகுமக்கள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றுத்தந்தவர்தான் ஆபாவாணன். இவர்தான் தமிர்த்திரையுலகில் முதன்முதலில் டிடிஎச் ஒலியையும் அறிமுகப்படுத்தினார். இத்தகைய பெருமைகளுக்குச் சொந்தக்காரரான இவர் சேலம்மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர்.

பல திறமையான நடிகர்களைத் திரையுலகுக்குக் கொடுத்ததிலும் கோவைக்கு பெரும்இடம் உண்டு. சிவகுமார், சத்யராஜ், ரகுவரன், நிழல்கள்ரவி, நந்தா போன்ற ஆல்ரவுண்டர்களும் கவுண்டமணி, கோவைசரளா அனுமோகன் போன்ற நகைச்சுவைநடிகர்களும் இங்கிருந்துதான் வந்தனர். மரியாதைக்குரிய சொல்லாடல்கள் நிறைந்தது கொங்குமண்டலம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே கொங்குமண்டலம் எவ்வளவு நக்கல் நய்யாண்டிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை கவுண்டமணி மற்றும் கோவைசரளா மூலம் தமிழகம் மட்டுமின்றி உலகம் அறிந்திருக்கிறது.

இப்போதைய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர்களாக இருக்கும் ஸ்டுடியோகிரின் ஞானவேல்ராஜா, அம்மாகிரியேஷன்ஸ் சிவா ஆகிய இருவரும் கொங்குமணடலத்துக்காரர்கள்தாம். இவர்களில் சிவா, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கோபிச்செட்டிபாளையத்தில் புகைப்படநிலையம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தவர். ஒரு காலத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்படப்பிடிப்புகள் நடக்கின்ற இடமாக கோபிச்செட்டிபாளையம் இருந்தது. அங்கு வருகிற திரைத்துறையினருடன் எற்பட்ட நட்பின் காரணமாக சென்னை வந்து படிப்படியாக முன்னேறி இன்று இந்தநிலையில் இருக்கிறார். இப்போது அந்த இடத்தை கோபி இழந்துவிட்டது. கோபிக்கு மாற்றாக இப்போது அதிகப்படப்பிடிப்புகள் நடக்கின்ற ஊரும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தததுதான். அந்த ஊர் பொள்ளாச்சி.

அறிஞர்அண்ணாவால் கோவைத்தம்பி என்றழைக்கப்பட்டவர் தமிழ்த்திரையுலகிலும் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்தார். அவர் தயாரித்த எல்லாப்படங்களுமே வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. மாதம்பட்டிசிவக்குமார், திருப்பூர் பாலு, திருப்பூர்மணி உட்பட இன்னும் பல தயாரிப்பார்கள் கொங்குமண்டலத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகம் இருக்கும் வரை மறக்க முடியாத படமாக விளங்கும் சில படங்களில் முக்கியமான ஒன்று அவள்அப்படித்தான். படிப்பறிவு விழுக்காடு மிகவும் குறைவாக இருந்த 1978 இலேயே அப்படி ஒரு படத்தை இயக்கும் துணிச்சல் கொண்டவர் அந்தப்படத்தை இயக்கிய ருத்ரய்யா. ஆறுமுகம் எனும் தன்னுடைய இயற்பெயரை திரைப்படத்துக்காக ருத்ரய்யா என்று மாற்றிக்கொண்டவர். இவரும் அந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நல்லுசாமி ஆகியோரும் சேலம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒளிப்பதிவாளர் நல்லுசாமியின் மகன் சூரஜ்நல்லுசாமி அண்மையில் வெற்றிபெற்ற இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

பொறியியல் படித்துவிட்டு இலக்கிய ஆர்வம் காரணமாக பாடலாசிரியராகவும் சமூகச்சிக்கல்களில் முன்னின்று போராடக்கூடியவராகவும் விளங்கும் தாமரையும், உதவிஇயக்குநர், பாடலாசிரியர், கதாநாயகன் என்று படிப்படியாக உயர்ந்திருக்கும் பா.விஜய் ஆகியோரும் கோவையைச் சேர்ந்தவர்கள்.

திரைக்கலைஞர்கள் மட்டுமின்றி இன்றைக்கு திரையுலக வியாபரத்திலும் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகவிலைக்குப் படங்கள் விற்கிற பகுதியாக கோவை திருப்பூர் ஈரொடு சேலம் ஆகிய ஊர்கள் திகழ்கின்றன.

தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திருமணமண்டபங்களாகவும் பொருட்களைப் பாதுகாக்கிற இடங்களாகவும் மாறிக்கொண்டிருந்தாலும் சேலம் நகரத்தில் மட்டும் திரையரங்குக்ள் எண்ணிக்கை குறையாமல் இருப்பது ஒரு நல்ல சான்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x