Published : 01 Jan 2016 10:44 AM
Last Updated : 01 Jan 2016 10:44 AM

கோலிவுட் கிச்சடி: மும்முனைத் தாக்குதல்

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் அரண்மனை 2 படத்தில் இம்முறை மூன்று கதாநாயகிகள் பேய் வேடம் போட்டிருக்கிறார்கள். ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா ஆகியோர் பேயாக மாறி மும்முனைத் தாக்குதல் நடத்த இருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதைக்கும் இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் கதைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கூறியிருக்கிறார் இயக்குநர்.

நண்பனின் பரிந்துரை

நெருக்கமான நண்பர்கள் சொன்னால் பவ்யமாகக் கேட்டுக்கொள்வதில் ஆர்யாவை மிஞ்ச கோலிவுட்டில் ஆள் இல்லை என்கிறார்கள். ஆர்யாவின் நெருங்கிய நண்பன் விஷால் நடிகர் சங்க விவகாரங்களில் பிஸியாக இருப்பதால் அவரைத் தற்போது தொந்தரவு செய்வதில்லையாம் ஆர்யா. தொடர்ந்து நான்கு படங்கள் அடிவாங்கினாலும் கலங்காத ஆர்யாவுக்கு மற்றொரு நெருங்கிய நண்பரான ஜீவா ஒரு கதையைப் பரிந்துரைத்தது மட்டுமல்ல அந்தப் படத்தைத் தயாரிக்கவும் முன்வந்துவிட்டார். ‘மஞ்சப் பை’ படத்தின் இயக்குநர் ராகவன் சொன்ன கதையில்தான் ஆர்யாவை நடிக்கக் கேட்டு, தனது குடும்ப நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் ஜீவா.

எழும் மருத‘நாயகன்’

கமல் ஹாசனின் கனவுப் படமும் அவரது ரசிகர்கள் இன்னமும் எதிர்பார்த்துவரும் படமுமான ‘மருதநாயகம்’ படத்தைப் பெரும் பொருட் செலவில் தயாரிக்க லைக்கா நிறுவனம் முன்வந்திருப்பதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை 350 கோடி செலவில் தயாரிக்கக் களமிறங்கியிருக்கும் லைக்கா, அதற்குச் சற்றும் குறையாத முதலீட்டை ‘மருதநாயகத்துக்கு’ செய்யத் தயார் என்று தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கமலுக்குக் கூறப்பட்டிருக்கிறதாம்.

வெற்றி மாறனின் சமர்ப்பணம்

ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ திரைப்படம். வெற்றி மாறனின் எல்லாப் படங்களிலும் அவரது ரத்தமும் சதையும்போல் பணியாற்றியவர் மறைந்த இளம் படத்தொகுப்பாளர் கிஷோர். விசாரணை படத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் வெற்றி மாறன். “எனது படங்களை நான் கண்டறிந்துகொள்வதில் எப்போதும் எனக்கு உதவிய என் எடிட்டர் கிஷோருக்கு” என்ற தொடக்க வாசகங்களோடு திரையில் விரிய இருக்கிறது ‘விசாரணை’.

ஜெயம் ரவி அடுத்து

கடந்த ஆண்டில் நான்கு படங்களில் நடித்து அவற்றில் மூன்றை வெற்றிப் படங்களாகக் கொடுத்த ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘மிருதன்’. “இப்படமும் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். அடுத்ததாக ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லக்ஷ்மண் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறேன். ‘தனி ஒருவன்’ படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன், ஏ.எல். விஜய், சுசீந்தரன் ஆகிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. மூவரும் என்னைச் சந்தித்துப் பேசியது உண்மை தான்! ஆனால் எதுவும் முடிவாகவில்லை” என்கிறார் ஜெயம் ரவி.

சசியின் நாயகி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'பிச்சைக்காரன்'. பூமிகா, பார்வதி போன்ற திறமையும் அழகும் மிக்க கதாநாயகிகளை அறிமுகப்படுத்திய இயக்குநர் சசி, இந்தப் படத்தில் சத்னா டைட்டஸ் என்ற மலையாளப் பெண்ணைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார். சில விளம்பர படங்களில் நடித்திருந்த நிலையில் தமிழ் சினிமா வழியே சத்னாவை மலையாள சினிமாவுக்கும் அறிமுகப்படுத்துகிறார் சசி. “ ‘பூ’ மாரி, ‘படையப்பா’ நீலாம்பரி, ‘அலை பாயுதே’ சக்தி, ‘கஜினி’ கல்பனா போல ரசிகர்களால் மறக்க முடியாத வேடங்களை மட்டுமே ஏற்று நடிப்பேன்” என்று தனது விருப்பத்தைக் கறாராகக் கூறுகிறார் சத்னா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x