Published : 15 Jun 2018 10:38 AM
Last Updated : 15 Jun 2018 10:38 AM

திரைப் பார்வை: புத்தர் இன்றும் சிரிக்கிறார்! - பர்மாணு (இந்தி)

 

து, பொக்ரான் அணுகுண்டு சோதனையின் 20-வது ஆண்டு! 1998-ல், மே 11, 13 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் எனும் பகுதியில் இந்தியா, அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. அதன் மூலம், அணு ஆயுதம் கொண்ட நாடாகத் தன்னைக் காட்டிக்கொண்டது. 20 ஆண்டுகள் கழித்து, அந்தச் சோதனையைக் கொண்டாட வேண்டுமா என்ற கேள்வியைக் குடிமக்களில் பலர் தங்கள் மனதுக்குள் பொத்தி வைத்திருக்கலாம். ஏன் அப்படி?

புத்தர் சிரித்தார்

1974-ல் முதல் அணு ஆயுத சோதனை பொக்ரானில் நிகழ்த்தப்படுகிறது. ‘அமைதிக்கான அணு சோதனை’ என்ற போர்வையில் நடத்தப்பட்ட அந்தச் சோதனைக்கு வன்முறையை எதிர்த்த புத்தர் பெயர் (‘சிரிக்கும் புத்தர்’) சூட்டப்பட்டது. இந்தச் சோதனையை ‘பொக்ரான் 1’ என்றும் அழைக்கிறார்கள். பிறகு 1995-ல், இரண்டாவது முறையாக அணு ஆயுதச் சோதனைகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுப் பின்னர் அவை அமெரிக்காவால் தடுக்கப்பட்டன.

பிறகு 1998-ல் ‘பொக்ரான் 2’ அல்லது ‘ஆபரேஷன் ஷக்தி’ அணு ஆயுதச் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்த வெற்றியை 20 ஆண்டுகள் கழித்து ‘பர்மாணு’ திரைப்படத்தின் மூலமாகக் கொண்டாடியிருக்கிறார்கள் அணு சக்தி ஆதரவாளர்கள்.

முடிவில் தொடங்கும் கதை

ஜான் ஆபிரகாம் நடித்து, சமீபத்தில் வெளியாகியிருக்கும் இந்த இந்திப் படம், விரைவில் ‘100 கோடி ரூபாய் வசூல்’ வட்டத்துக்குள் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தலைமையில் நடைபெற்ற இந்த அணு ஆயுதச் சோதனையைக் கதைக் களமாகக் கொண்ட இந்தப் படத்துக்கு வட மாநிலங்களில் நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது.

ஜான் ஆபிரகாம் நடித்து, இதுவரை வெளிவந்த படங்களிலேயே இதுதான் அவருக்கு பெரிய ‘ஹிட்’ என்கின்றன வசூல் வட்டாரங்கள். இத்தனைக்கும் இதில் அவர் ‘ஆக்‌ஷன்’ எல்லாம் காட்டவில்லை. நேர்மையான ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக அமைதியாக வந்து போகிறார். அவரது தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு ‘பொக்ரான் 2’ சோதனையை நடத்துகிறது. அதில் ஈகோ முதற்கொண்டு ஏகப்பட்ட சிக்கல்கள். அதையெல்லாம் தாண்டி, அந்தச் சோதனையை வெற்றிகரமாகச் செய்கிறார்கள். அது எப்படி என்பதில்தான் இயக்குநர் அபிஷேக் ஷர்மா கவனிக்க வைக்கிறார்.

ஆபிரகாம் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவரது வெயிட்டுக்கு ஏற்ப, வசனங்கள் மூலம் நம் தோள்கள் மீது தேசப்பற்றை டன் டன் ஆக ஏற்றி வைக்கிறார் இயக்குநர். அந்தக் காட்சியில் நாம் கைதட்டாமல்விட்டால், பக்கத்து சீட்காரர்கள் முறைத்துப் பார்க்கிறார்கள். ‘நம் நாட்டின் சாதனை’ என்று சொல்லப்படும் ஒன்றை, திரையில் சாகசமாக வடித்தாலும் உண்மையில், படம் முடியும் இடத்திலிருந்துதான் கதை தொடங்குகிறது. ஆனால், அது திரைப்படத்துக்கு வெளியே நடப்பது.

15chrcj_Parmanuபுத்தர் மீண்டும் சிரிக்கிறார்

உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே அணு ஆயுதம் கொண்டிருக்கும் நாடுகள் என்று தங்களைக் கருதிக் கொள்கின்றன. காரணம், இந்த நாடுகள் அனைத்தும் 1968-ம் ஆண்டுக்கு முன்பே அணு ஆயுதச் சோதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன. அதனால், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா போன்ற நாடுகள் ‘எங்களிடமும் அணு குண்டு இருக்கு’ என்று கூறும்போது அவற்றை மேற்கண்ட ஐந்து நாடுகள் ஒப்புக்கொள்வதில்லை.

ஒருவேளை நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டுமென்றால் ‘அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த’த்தில் கையெழுத்திடச் சொல்கின்றன அந்த நாடுகள். அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்… ‘நாங்கள் அணு ஆயுதங்கள் தயாரிக்க மாட்டோம். பிற நாடுகள் தயாரிக்கவும் உதவ மாட்டோம்’ என்பதுதான். இந்த விதியை அந்த ஐந்து நாடுகளும் பின்பற்றுகின்றன. ‘அதெப்படி… நீங்கள் மட்டும் எவ்வளவு அணு ஆயுதங்கள் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால் நாங்களே சொந்த முயற்சியில் அணு ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாதா?’ என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் முரண்டு பிடிப்பதால், இன்று வரை அந்த ஒப்பந்தத்தில் அவை கையெழுத்திடவில்லை.

பொக்ரான் – 2 சோதனை நடந்த மே 11-ம் தேதி ‘தேசிய தொழில்நுட்ப தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், “அணுக்கதிர் தொழில்நுட்பங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நாம் விழித்துக்கொண்டிருக்கிறோம்” என்ற விமர்சனம் சமூகவியலாளர்கள் மத்தியிலிருந்து வந்துகொண்டேதான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x