Published : 28 Jun 2022 01:32 PM
Last Updated : 28 Jun 2022 01:32 PM

ரியோ என்றோர் ஆட்டுக்குட்டி - கதை - கி. அமுதா செல்வி

கிட்டுவுக்கு எப்போது நான்கு மணி ஆகும் என்று இருந்தது. மூன்று மணிக்கு மேல் அவனால் வகுப்பறையில் உட்கார முடியவில்லை. எல்லாவற்றையும் எடுத்துப் பைக்குள் வைத்தான்.

‘பாவம் ரியோ. சாப்பிட்டிருப்பானா? தண்ணீர் குடிச்சிருப்பானா?’

கிட்டுவுக்கு நினைப்பு எல்லாம் ரியோ ஆடு மேல்தான் இருந்தது. கிட்டுவின் மாமா கொடுத்த, இரட்டைக் கிடாய்களில் ஒன்றுதான் ரியோ.
கிட்டுவின் அப்பத்தா தான் ஆட்டைப் பராமரித்து வந்தார். ஓர் அவசர வேலையாக ஊருக்குச் சென்ற அப்பத்தா ஒரு வாரம் ஆகியும் வந்துசேரவில்லை.

‘இந்த அப்பத்தா ஏன் தான் ஊருக்கு போனாங்களோ? ரியோவைப் பார்த்துக்க வீட்டில் ஆள் இல்லை. அதனால ஆட்டுக்கார மாமா ஒருவர் வீட்டில் ரியோவை விட்டு வைத்திருக்கிறோம். செல்வி அத்தை ரியோவை நல்லாதான் கவனிச்சுக்கிறாங்க. ஆனாலும் நான் கவனிக்கிற மாதிரி இருக்குமா?’ என்று நினைத்துக்கொண்டிருந்த கிட்டு, மணிச்சத்தம் கேட்டவுடன் பையைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினான்.
அடுத்த பத்தாவது நிமிடம் ஆட்டுக்கொட்டகைக்கு வந்து சேர்ந்தான்.

கதவைத் திறந்ததுமே, ரியோவைப் பார்த்துவிட்டான்.

ம்மே… ம்மே… என்று ரியோ கத்தியது. மகிழ்ச்சியில் அப்படி இப்படி ஓடியது.

ரியோவின் கழுத்தில் அப்பத்தா தடிமனான கயிற்றைக் கட்டியிருந்தார். லேசான கயிறாக இருந்திருந்தால், அறுத்துக்கொண்டு ஓடிவந்து இருக்கும்.

கிட்டு பக்கம் வந்ததும், ரியோ தலை குனிந்து, அவனை லேசாக முட்டியது.

அவன் அதன் கொம்பைப் பிடித்து ஆட்டினான். ரியோவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

அப்படியே அதன் முதுகில் தன் உடம்பைச் சாய்த்து, "என் செல்லக்குட்டி" என்று கொஞ்சினான். அதன் தலையைத் தடவினான்.
காதுகளை லேசாகச் சொரிந்துவிட்டான்.

ரியோ முன்னங்கால்களை ஊன்றி, இரண்டு பின்னங்கால்களையும் தூக்கி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் குதித்தது. ரியோ 8 மாதக் குட்டி. ஆனால், பார்க்கும் யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கிட்டுவின் மார்புவரை வளர்ந்திருந்தது. காது நீளமாகத் தொங்கும்.

வேகமாகச் சாப்பாட்டுப் பையை எடுத்தான். தண்ணீர் பாட்டிலைத் திறந்தான். குவளையில் ஊற்றினான்.

"குடிடா... குடிடா... குட்டிப்பயலே..."

ரியோவின் முன்பாக வைத்தான். ரியோ வேகவேகமாகக் குடித்தது.

டிபன் பாக்சைத் திறந்து, மீதி வைத்திருந்த சோற்றை குவளையில் கொட்டினான். அது வேகமாகத் தின்றது.
கிட்டு ரியோவின் முதுகைத் தடவிக்கொண்டே நின்றான்.

"ஏப்பா கிட்டு, நாங்க உன் ஆட்டுக்குச் சாப்பாடு கொடுக்க மாட்டோமா?" என்றார் செல்வி அத்தை.

"அது ஒன்னும் இல்ல அத்தை" என்று நெளிந்தான் கிட்டு.

நேரம் கடந்தது.

அவன் கொண்டுவந்த பைகளைத் தூக்கிக்கொண்டான்.

"நாளைக்குக் காலையில வர்றேன்."

அதன் தலையைத் தடவி, முதுகில் முத்தமிட்டான். திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே ஆட்டுக்கொட்டகையை விட்டுச் சென்றான்.

வீட்டுக்கு வந்ததும் அக்காவிடம் சென்றான்.

"அக்கா, ரியோவ நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரலாமா?" என்று கேட்டான் கிட்டு.

"அதை யாருடா கவனிச்சிக்குவாங்க? ஆடு கட்டும் இடத்தை யார் கழுவி, சுத்தம் செய்வாங்க? அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போயிடுவாங்க. நீயும் நானும் பள்ளிக்கூடம் போயிடுவோம். ரியோவுக்கு மதியம் யாரு சாப்பாடு கொடுப்பாங்க?"

அக்காவின் கேள்விகளுக்கு கிட்டுவிடம் பதில் இல்லை.

இரவெல்லாம் அப்பாவிடம் ரியோ பற்றியே பேசினான்.

விடிந்தது.

விருப்பமில்லாமல் எழுந்தான்.

"ம்மே… ம்மே..."

சத்தம் கேட்டு வெளியே ஓடினான்.

ரியோவுக்கு அகத்திக்கீரையைக் கொடுத்துக்கொண்டிருந்தார் கிட்டுவின் அப்பா!


எழுதியவர், அரசு பள்ளி ஆசிரியர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x