Published : 24 Jul 2020 08:46 AM
Last Updated : 24 Jul 2020 08:46 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: ஸ்ருதிஹாசனின் புதிய முயற்சி

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், சமூக ஊடகங்களில் தன் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருபவர். ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல்கலை, ஒப்பனைக் குறிப்புகள் பற்றியும், தனது இசைச் சுற்றுப் பயணத்திலிருந்து தாம் கைப்பட ஒளிப்பதிவு செய்த காட்சிகளையும் தனது பெயரில் பிரத்யேகமாகத் தொடங்கியிருக்கும் யூடியூப் சேனலில் பதிவிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மிக மிக முக்கியமாகத் தனது முதல் ஆல்பத்துக்கான வேலைகளில் தற்போது ஓய்வின்றி ஈடுபட்டு வருகிறார் என்றும் தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களைத் தனது வலையொளியில் காணலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் அமீர்!

‘இருட்டு’ படத்துக்குப் பிறகு வி.இசட். துரை இயக்கத்தில் உருவாகும் படம் ‘நாற்காலி’. வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்தில் கலக்கிய இயக்குநர் அமீர், ‘நாற்காலி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாந்தினியும் முக்கிய வேடங்களில் சுப்ரமணிய சிவா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ‘அமைதிப்படை’ படத்துக்குப் பிறகு முழுக்க முழுக்க அரசியல் நையாண்டிப் படமாக ‘நாற்காலி’ இருக்குமாம். படத்துக்கு இசை வித்யாசாகர்.

எடக்கு மடக்கு ‘தர்பார்’

‘நானும் ரவுடிதான்’ படத்தைத் தொடர்ந்து விஜய்சேதுபதி - பார்த்திபன் மீண்டும் இணைந்து நடித்துவரும் படம் ‘துக்ளக் தர்பார்'. ‘இந்தக் கூட்டணியால் ‘துக்ளக் தர்பார்’ எடக்கு மடக்கான நக்கல், நையாண்டி தர்பாராக மாறிவிட்டது’ என்கிறார் படத்தைத் தயாரித்துவரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார். விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் இணைத் தயாரிப்பாளரான இவர் ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருபவர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை எனப் பிரம்மாண்டமாகக் களமிறங்கியிருக்கும் இந்தக் கூட்டணியின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

பாடல்களால் தாக்குதல்

சிம்பு - த்ரிஷா நடித்த குறும்படம் ஒன்றை இயக்கி மில்லியன்களில் ‘ஹிட்’டடித்தார் இயக்குநர் கெளதம் வாசுதேவன். தற்போது தனது ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தின் பாடல்களை வரிசையாக வெளியிட்டுக் கவனம் ஈர்த்து வருகிறார். இப்படத்தில் நாயகி பாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ள முதல் பாடலான ‘ஹை ஜோஷ்வா...’ என்ற பாடல் வரிகளுக்காகவும் புதுமையான தாள லயத்துக்காகவும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வந்தது. தற்போது இரண்டாம் பாடலுக்கான ட்யூனை இயக்குநர் கெளதம் வாசுதேவன் தானே முணுமுணுத்தவாறு அறிமுகப்படுத்திய வலையொளிக் காட்சி தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் நாயகியின் பாடலுக்கு நாயகன் பதிலளிப்பதுபோல் ‘நான் உன் ஜோஷ்வா...’ என்று அமைந்திருப்பது இளைஞர்களை ஈர்த்துள்ளதால் இரண்டாம் பாடலையும் கொண்டாடி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x