Published : 18 Aug 2019 10:23 AM
Last Updated : 18 Aug 2019 10:23 AM

எல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை?

அமுதா ஹரி

குழந்தை உருவாவதில் ஆண், பெண் இருவருக்கும் சம பங்கு உண்டு. இருந்தபோதும், கருவுறுவதில் சிக்கல் என்றால் பெரும்பாலும் அது பெண்ணின் பிரச்சினையாகவே பார்க்கப் படுகிறது. உண்மையில் ஆண்களுக்கும் இதில் சரிபாதி பங்கு உண்டு.

பெண்களுக்கு அவரவர் மாதவிடாய்ச் சுழற்சிக்கு ஏற்றாற்போல் சுழற்சியின் நடுப்பகுதியில் சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளியேறும். இந்த நேரத்தில் ஆணும் பெண்ணும் உறவு கொண்டால் ஆணின் விந்துவில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுக்கள் மிக வேகமாகப் பெண்ணின் கர்ப்பப்பையை நோக்கி ஓடும். விந்து திரவம்தான் விந்தணுக்கள் பெண்ணின் சினைமுட்டையை வேகமாகச் சென்றடைய உதவுகிறது. கோடிக்கணக்கான விந்தணுக்கள் வெளிப்பட்டாலும் அவற்றில் அனைத்துமே வேகமாக ஓடும் தன்மை உடையவை அல்ல. பல அப்படியே நின்றுவிடும். நல்ல ஆரோக்கியமான, வேகமாக நகரும் தன்மை யுடைய விந்தணுக்கள் மட்டும் பெண்ணின் சினைமுட்டையைச் சென்றடையும்.

வாழ்க்கை முறையால் சிக்கல்

ஆணின் உயிரணுக்கள் சினைமுட்டை யின் வெளிப்புறத்தில் முட்டி மோதி உள்ளே செல்லப் பார்க்கும். நல்ல வீரியமுள்ள ஒரு விந்தணு மட்டுமே பெண்ணின் சினைமுட்டையின் வெளிச்சவ்வைத் துளைத்து உள்ளே போகும். இப்படி ஒரு விந்தணு உள்ளே போன உடனேயே சினைமுட்டையின் சவ்வுப் பகுதி தானே மூடிக்கொண்டுவிடும். ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினைமுட்டையும் சேர்ந்து கரு உருவாகிறது. இந்தச் செயல்பாட்டில் ஏதேனும் தடங்கல் நிகழ்ந்தால்தான் கருவுறுதலில் பிரச்சினை ஏற்படும்.

குழந்தைப் பிறப்பில் தாமதம் ஏற்பட்டால் ஆண்களின் பொதுவான உடல் ஆரோக்கியத்தைப் பார்க்க வேண்டும். சிறு வயதில் தட்டம்மை போன்றவை வந்ததா என்றும் பார்க்க வேண்டும். ஏனென்றால், இது பிற்காலத்தில் ஆணின் விந்தணுவின் எண்ணிக்கையையும் தரத்தையும் பாதிக்கக் கூடும். அதிக உடல் எடை, குறைவான உடல் எடை இரண்டையும் பார்க்க வேண்டும். தைராய்டு, நீரிழிவு போன்றவை இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். மது அருந்துதல், புகைப் பழக்கம், போதைப் பழக்கம் போன்றவை இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.

ஏனென்றால், இவை எல்லாமே விந்தணுக்களின் எண்ணிக் கையையும் வீரியத்தையும் பாதிக்கக் கூடியவை.
அடுத்து டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பிறகு அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து விதைப்பையில் இருந்து விந்து வரக்கூடிய நரம்புகள் சரியாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். இவை சில நேரம் சரியான அளவைவிடச் சற்றே தடித்து இருக்கக்கூடும். இந்த மாதிரி இருந்தால்கூட விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறையும்.

தெளிவு தரும் பரிசோதனை

அடுத்து விந்தணுவைப் பகுத்தாய்வு செய்தல். இப்படி விந்தணுவை ஆராய்ந்து பார்ப்பதை எப்போது செய்ய வேண்டும் என்று சில வரையறைகள் உண்டு. ஆண் பெண்ணுக்கு உறவு இல்லாமல் இருந்து மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் விந்தணுப் பரிசோதனைக்கு விந்தணுவைச் சேகரித்துத் தர வேண்டும். உறவு இல்லாமல் இருந்து வெறும் ஒரே நாள் கழித்தோ அல்லது 15 நாட்கள் உறவே இல்லாமல் இருந்தோ பெறப்படும் விந்தணுவைப் பரிசோதிப்பதில் இருந்து சரியான, தெளிவான முடிவு களைப் பெற முடியாது.

விந்து சேகரிக்கும் பாட்டில் சுத்திகரிக்கப்பட்ட தாக இருக்க வேண்டும். விந்து சேகரிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அது பரிசோதனைக் கூடத்துக்குச் சென்றுவிட வேண்டும். தரமான பரிசோதனைக் கூடத்துக்குச் சென்று அங்கேயே விந்தைச் சேகரித்துக் கொடுப்பது சிறந்தது. இந்த விந்தணுப் பரிசோதனையில் தொற்று ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கிறோம். ஆணின் விந்துவில் 5 முதல் 15 கோடி வரை விந்தணுக்கள் இருக்கும். விந்தணுவின் எண்ணிக்கைக்குப் பிறகு விந்தணு விரையும் தன்மையைப் பரிசோதிப்போம். அதாவது, வேகமாக நீந்திச் செல்லும் தன்மை.

இதில் மூன்று வகையான விந்தணுக்கள் இருக்கக் கூடும். வெகு வேகமாகச் செல்லக்கூடியவை; மிதமாகச் செல்லக்கூடியவை; விரையும் தன்மை அற்றவை. குறைந்தது 50 சதவீத விந்தணுக்களாவது வெகு வேகமாகச் செல்லும் தன்மை உடையவையாக இருந் தால்தான் கருத்தரித்தலுக்கு உதவ முடியும்.
அடுத்து விந்தணுவின் வடிவம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இரண்டு தலை இருப்பது, வால் இல்லாமல் இருப்பது, குண்டூசி தலைபோல் இருப்பது, சாதாரணமாக இயல்பான வடிவத்தில் இருப்பது என விந்தணுக்கள் பல வடிவங்களில் இருக்கும். இயல்பான வடிவத்தில் இல்லாமல் அசாதாரண வடிவத்தில் இருக்கும் விந்தணுக்களால் பலன் கிடையாது.

கருவுறுதலில் பெண்ணுக்கு எல்லாம் சரியாக இருந்தும், ஆணின் விந்தணுவில் விரைவாக நகரும் தன்மை இல்லை என்றால் அவர்களுக்குக் குழந்தை பிறக்க வைக்க Intra Uterine Insemination (IUI) முறையைப் பரிசீலிக்கலாம். ஆண்களுக்கு இப்படி எல்லாவிதமான பரிசோதனைகளும் முயற்சிகளும் செய்து முடித்த பிறகுதான் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

ஆணுக்கு இழுக்கல்ல

பொதுவாக, இப்படியான பரிசோதனை களைச் செய்துகொள்ள ஆண்கள் முன்வருவதில்லை. இப்படிப் பரிசோதனை கள் செய்துகொள்வதே ஆணுக்கு இழுக்கு என்று நினைக்கிறார்கள். குழந்தை பிறக்காவிட்டால் எல்லாவிதமான சோதனை களையும் பெண்கள் மட்டுமே செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆணின் விந்தணுவின் எண்ணிக்கை யிலும் விரையும் தன்மையிலும் குறைவு இருக்கிறது என்று அறிக்கை வந்துவிட்டால் உடனே மனம் தளரக் கூடாது. வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு பரிசோதனைக் கூடங்களை அணுகித் தெள்ளத் தெளிவற நிலைமையைக் கணிக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவு உண்ணுதல், சில மோசமான பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் உடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்தினாலே சில நேரம் பிரச்சினை சரியாகிவிடும். பரிசோதனை செய்வதை ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திக்கொள்வதற்கான முயற்சியாகப் பார்க்க வேண்டுமே தவிர, அதுவே ஆண்மையைத் தீர்மானிப்பதாக முடிவுக்கு வந்துவிடக் கூடாது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திய பிறகு மூன்று அல்லது ஆறு மாதம் கழித்து மீண்டும் பரிசோதனை செய்து பார்த்து, சரியாகிவிட்டது என்றால் அப்படியே விட்டுவிடலாம். அப்படி இல்லையென்றால் வேறு முறைகளில் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி யோசிக்கலாம்.

(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x