Published : 13 Apr 2014 02:11 PM
Last Updated : 13 Apr 2014 02:11 PM

முகம் நூறு: பானைக்குள் யானையை அடைப்பது சாத்தியமா?

பெண்கள் ஓரளவு தனித்துச் செயல்படவும் தங்கள் கருத்தைச் சொல்லவும் வாய்ப்பு இருக்கும் இந்நாட்களில், அவர்கள் சமூக அக்கறையுடன் இயங்குவதற்குச் சாத்தியமுண்டு. ஆனால் பெண்ணியம் என்பதே புதிரானதாகவும் புதிதானதாகவும் பார்க்கப்பட்ட நாட்களில் ஒரு பெண்ணின் சமூகம் சார்ந்த செயல்பாடுகள் அத்தனை சுலபமாக இருந்திருக்க முடியாது. எண்பதுகளில் பெண்கள் சார்ந்தும், குழந்தைகள் சார்ந்தும் தன் பயணத்தைத் தொடங்கியவர் சாலை செல்வம். மதுரையில் வசிக்கும் இவர் மாற்றத்துக்கான களப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகும் சமூகம் தன்னைக் கேள்விக்குறியுடன்தான் பார்க்கிறது என்கிறார்.

பொதுவாகப் பலருக்கும் மாற்றம் என்பது வாழ்வின் ஏதோவொரு புள்ளியில் தொடங்கியிருக்கும். ஆனால் தான் பிறந்த சூழலே தன் மாற்றுச் சிந்தனைக்கான களமாக இருந்தது என்கிறார் சாலை செல்வம்.

வழி காட்டிய சாலை

“புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மெய்வழிச்சாலை கிராமத்தில்தான் நான் பிறந்து, வளர்ந்தேன். கிராமத்தின் பெயரே அதன் ஆன்மிக அடையாளத்தை உணர்த்தப் போதுமானது. அங்கே ஜாதி, மத, இன பேதமில்லை. அதனால் நான் எந்த மதத்தைச் சார்ந்தும் பிறக்கவில்லை. பெண்ணாக மட்டுமே பிறந்தேன், வேறெந்த அடையாளமும் எனக்கு இல்லை. மின்சார வசதியில்லாத, குடிசைக்குள் வாழும் அந்த வாழ்க்கை பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும். நாகரிகத்தின் எந்த வசதிகளும் தேவைப்படாத எளிமையான வாழ்க்கையை முன்வைக்கிற ஒரு வாழ்க்கையாகத்தான் அது இருந்தது. எங்கள் கிராமத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பள்ளிக்கு நடந்தேதான் செல்வோம். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே அங்கிருந்தது” என்று சொல்லும் செல்வம், அதற்கு அடுத்து விடுதியில் தங்கிப் படித்தார். தான் வெளியூரில் தங்கிப் படிக்கக் காரணம்’ தன் அம்மாதான் என்கிறார்.

“என் அம்மா தனியாளாக இருந்து எங்களை வளர்த்தார்கள். படிப்பின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தேன். ஸ்டெல்லா மேரி கல்லூரியில் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் அண்ட் சைல்ட் வெல்ஃபேர் என்கிற டிப்ளமோ பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். அந்தப் படிப்பு சமூகம் சார்ந்த என் பார்வையை விரிவுபடுத்தியது. நான் சந்தித்த மனிதர்களும் அதற்கு உறுதுணையாக இருந்தார்கள். திருச்சியில் ‘சுட்டும் விழிச்சுடர்’ பத்திரிகை நடத்திவந்த சுபத்ராவின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து அந்தப் பத்திரிகைப் பணியில் பங்கேற்றேன். எண்பதுகளில் முழுக்க முழுக்கப் பெண்களால் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட பத்திரிகைகளில் ‘சுட்டும் விழிச்சுடர்’ முக்கிய இடம் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 60 இதழ்களை வெற்றிகரமாகக் கொண்டுவந்தோம்” என்கிறார்.

“என் அம்மா தனியாளாக இருந்து எங்களை வளர்த்தார்கள். படிப்பின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தேன். ஸ்டெல்லா மேரி கல்லூரியில் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் அண்ட் சைல்ட் வெல்ஃபேர் என்கிற டிப்ளமோ பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். அந்தப் படிப்பு சமூகம் சார்ந்த என் பார்வையை விரிவுபடுத்தியது. நான் சந்தித்த மனிதர்களும் அதற்கு உறுதுணையாக இருந்தார்கள். திருச்சியில் ‘சுட்டும் விழிச்சுடர்’ பத்திரிகை நடத்திவந்த சுபத்ராவின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து அந்தப் பத்திரிகைப் பணியில் பங்கேற்றேன். எண்பதுகளில் முழுக்க முழுக்கப் பெண்களால் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட பத்திரிகைகளில் ‘சுட்டும் விழிச்சுடர்’ முக்கிய இடம் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 60 இதழ்களை வெற்றிகரமாகக் கொண்டுவந்தோம்” என்கிறார்.

சாத்தியப்படுத்திய சந்திப்பு

1990-ம் ஆண்டு கோழிக்கோட்டில் நடந்த அனைத்திந்தியப் பெண்கள் மாநாடு இவர்களின் களத்தை விஸ்தரிக்க ஒரு வாய்ப்பாக இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 100 பெண்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார்கள். மாநாடு ஒருபுறம் நடக்க, அந்த 100 பேரும் இரவு நேரங்களில் அங்கேயே ஒரு தனி சந்திப்பு நடத்தி விவாதித்திருக்கிறார்கள். அனைவரும் இணைந்து எப்படிப் பணியாற்றலாம் என்று ஆக்கபூர்வமாக முடிவெடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்றும் அவர்களுடைய சந்திப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

“நான் எந்த அமைப்பைச் சார்ந்தும் இல்லை. எந்த அமைப்பையும் நடத்தவில்லை. எல்லாமே குழு வேலைதான். பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து விவாதிப்போம். விவாதங்களும், முடிவுகளும் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தாது என்று எங்களுக்குத் தெரியும். அதனால் போராட்டங்கள் வாயிலாகவும் எங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறோம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெண்ணியக்கச் செயல்பாட்டாளர்களின் சந்திப்பை நடத்துவோம். எண்பதுகளில் அப்படிப் பட்டவர்களைச் சந்திப்பதே அபூர்வமாகத்தான் இருக்கும். காரணம் அப்போதுதான் ஒவ்வொருவராகத் தங்கள் கருத்தைத் துணிச்சலுடன் சொல்லத் தொடங்கியிருந்தார்கள். எங்களின் அந்தச் சந்திப்புகள் எங்கள் செயல்பாடுகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்தன. இடையிடையே என் சொந்த வேலைகளுக்கும் நேரம் ஒதுக்குவேன். காரணம் நான் பயணப் பிரியை. பயணங்கள்தான் என் வாழ்வின் பல மாற்றங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன” என்கிற செல்வம், மதுரைக்குக் குடிபெயர்ந்த பிறகு ‘கூடு’ என்கிற பெண்களுக்கான அமைப்பைத் தொடங்கினார்.

பெண்களின் கூடு

‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கம் பெண்களுக்கான அமைப்பாக இருந்தாலும், இதன் முக்கிய நோக்கம் வாசிப்பு சார்ந்ததுதான். சர்வதேசப் பெண் இயக்குநர்கள் திரைத் திருவிழாவை நடத்தி, அதில் 30க்கும் மேற்பட்ட பெண் இயக்குநர்களின் திரைப்படங்களைத் திரையிட்டது இவர்களுடைய செயல்பாடுகளில் முக்கியமானது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை சார்ந்து தொடர்ந்து கருத்தரங்கமும் விவாதமும் நடத்துகிறார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதைப் பெண்ணைச் சார்ந்து மட்டுமே சுருக்கிவிடாமல், சமூகம் சார்ந்த விரிந்த பார்வையோடு அணுகுகிறார்கள். விவாதங்களின் வெளிப்பாடாகக் கையேடுகளும் வெளியிட்டிருக்கிறார்கள். மாதவிடாய் குறித்த இவர்களின் ‘உடல் வலி(ழி) பயணம்’ என்கிற கையேடும், குழந்தைகள் மீதான அத்துமீறல் குறித்த ‘யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்’ என்கிற கையேடும் குறிப்பிடத்தகுந்தவை.

கல்விக்கு மொழி முக்கியம்

கல்வி சார்ந்தும் தன் தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறார் செல்வம். செயல்பாட்டாளர் வ. கீதாவுடன் இணைந்து பாடப் புத்தகங்களை மதிப்பீடு செய்திருக்கிறார். பாடப் புத்தகங்களைப் பெண்ணிய நோக்குடன் அணுகும் இவர்களின் பார்வை புதிது. எஸ்.எஸ்.ஏ. சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தமிழ், சமூக அறிவியலுக்கான 150 வாசிப்புப் புத்தகங்களின் உருவாக்கத்தில் இவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 50 புத்தகங்களின் மாதிரியைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதில் குழந்தைகளுக்கான புத்தக உருவாக்கத்தில் மொழிக்கும் காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.

“குழந்தைகளுக்கென்று ஒரு மொழி உண்டு. அதைச் சிதைக்காத வகையில் புத்தகங்கள் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பேச்சு மொழியையும், வட்டார மொழியையும் பள்ளிகளில் பயன்படுத்த வேண்டும். தங்கள் மொழியில் சொல்லப்படும்போதுதான் பாடங்களைக் குழந்தைகளால் உள்வாங்கிக்கொள்ள முடியும்” என்று சொல்லும் செல்வம், ‘கூழாங்கல்’ என்கிற குழந்தைகளுக்கான பத்திரிகை மற்றும் வாசிப்பு மையத்தை நடத்திவருகிறார்.

குழந்தைகளின் ‘கூழாங்கல்’

“நகரத்தில் குழந்தைகளுக்கான நூலகம் என்னைப் பொருத்த அளவில் அத்தனை வெற்றிகரமானதாக இல்லை. கிராமத்தில் நான் இருந்தபோது உற்சாகமாகப் புத்தங்களைத் தேடி வந்த குழந்தைகள், நகரங்களில் இல்லை. இங்கே குழந்தைகளுக்குப் படிக்கும் ஆர்வம் இல்லையா, பெற்றோர்கள் அவர்களுக்குப் புத்தகங்கள் வாங்கித் தருகிறார்களா, குழந்தைகள் புத்தகங்களைவிட நவீன கருவிகளில் ஆர்வமுடன் இருக்கிறார்களா என்று பலவிதமான கேள்விகள் எழுகின்றன. ஆனால் நாங்கள் நடத்துகிற பயிலரங்குக்குக் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு. அவர்களை வரையவும், எழுதவும், மலையேறவும் அழைத்துப் போகிறோம். இந்த அனுபவங்களை அவர்கள் மிகவும் ரசிக்கிறார்கள். கோடை விடுமுறையில் நாங்கள் பயிலரங்கம் நடத்தும்போது, அதையே வணிக ரீதியாக மற்றவர்கள் அணுகினால் எங்கள் முயற்சியைக் கைவிட்டுவிட்டு வேறென்ன செய்யலாம் என்று யோசிப்போம்” என்கிறார்.

குழந்தைகளுக்கான கல்வி உரிமை குறித்து நிறைய எழுதியிருக்கிறார் செல்வம். ஒவ்வொரு நாளும் சூழலுக்கு ஏற்ப எண்ணங்களும் மாறிவருவதையும் பதிவுசெய்திருக்கிறார். காலம்தோறும் பெண்கள் மீதான வன்முறையின், அடக்குமுறையின் வடிவங்கள் மாறுகின்றனவே தவிர, குறைந்ததாகத் தெரியவில்லை என்கிறார்.

“கடந்த ஆண்டு நான் இமயமலைக்குச் சென்றேன். அப்போது என் வீட்டில் உதவி பார்க்கும் அம்மா என் மகளிடம், “உன்னைத் தனியா விட்டுட்டுப் போகக் கூடாதுன்னு உங்க அம்மாகிட்டே நீ கேட்க வேண்டியதுதானே” என்று சொல்லியிருக்கிறார். அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என் மகள், “நான் வளர்ந்த பிறகு என்னை அந்த இடத்துக்குக் கூட்டிட்டு போறதுக்காகத்தான் எங்க அம்மா இப்போ அங்கே போயிருக்காங்க” என்று சொல்லியிருக்கிறாள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் அம்மா, என் உறவினர்கள், சுற்றியிருக்கிற அம்மாக்கள், ஆண்கள்... எல்லாருமே ஏதோ ஒரு கட்டத்துக்குள் மட்டுமே பெண்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ? எது பெண்ணின் வெற்றி? நல்ல பதவியும் பணமுமா? மனமொத்த நண்பர்களா? தன்னிறைவான வாழ்வா? இந்தத் தெளிவும் தேடலும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இல்லாதவரை பானைக்குள் யானையை அடைக்கிற மாதிரி, உள்ளுக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான்” என்று சொல்லும் சாலை செல்வம் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. “மாற்றுச் சிந்தனைகள்தான் நமக்கான சுதந்திர வெளியைக் கொடுக்கும். அந்த வகையில் நான் எனக்கான உலகத்தில் சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும், தன்னிறைவுடனும் வாழ முடிகிறது” என்று நிறைவுடன் சொல்கிறார்.

“கடந்த ஆண்டு நான் இமயமலைக்குச் சென்றேன். அப்போது என் வீட்டில் உதவி பார்க்கும் அம்மா என் மகளிடம், “உன்னைத் தனியா விட்டுட்டுப் போகக் கூடாதுன்னு உங்க அம்மாகிட்டே நீ கேட்க வேண்டியதுதானே” என்று சொல்லியிருக்கிறார். அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என் மகள், “நான் வளர்ந்த பிறகு என்னை அந்த இடத்துக்குக் கூட்டிட்டு போறதுக்காகத்தான் எங்க அம்மா இப்போ அங்கே போயிருக்காங்க” என்று சொல்லியிருக்கிறாள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் அம்மா, என் உறவினர்கள், சுற்றியிருக்கிற அம்மாக்கள், ஆண்கள்... எல்லாருமே ஏதோ ஒரு கட்டத்துக்குள் மட்டுமே பெண்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ? எது பெண்ணின் வெற்றி? நல்ல பதவியும் பணமுமா? மனமொத்த நண்பர்களா? தன்னிறைவான வாழ்வா? இந்தத் தெளிவும் தேடலும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இல்லாதவரை பானைக்குள் யானையை அடைக்கிற மாதிரி, உள்ளுக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான்” என்று சொல்லும் சாலை செல்வம் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. “மாற்றுச் சிந்தனைகள்தான் நமக்கான சுதந்திர வெளியைக் கொடுக்கும். அந்த வகையில் நான் எனக்கான உலகத்தில் சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும், தன்னிறைவுடனும் வாழ முடிகிறது” என்று நிறைவுடன் சொல்கிறார்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x