Published : 15 Mar 2017 10:07 AM
Last Updated : 15 Mar 2017 10:07 AM

குழந்தைப் பாடல்: ஆடு மேயுது

வீட்டில் ஒரு வெள்ளாடு

ஆசையுடன் வளர்த்தோமே

வகைவகையாய் கீரைகளை

தீனியாகப் போட்டோமே

தினம் தினம் அதை தின்னுமே

துள்ளி துள்ளி ஆடுமே

வயிறு பசிக்கும் வேளையில்

கத்தி கூச்சல் போடுமே

அசந்திருந்த வேளையில்

கட்டும் அவிழ்ந்து போனதே

வேலி தாண்டி ஆடுதான்

வீட்டை விட்டு சென்றதே

பக்கத்து வீட்டு கொல்லையில்

பூந்தோட்டம் இருந்தது

கொத்து கொத்தாய் பூக்கள்தான்

பரந்து மலர்ந்து சிரித்ததே

அதனை கண்ட ஆடுதான்

உள்ளே செல்ல பார்த்ததே

பூக்களையும் செடிகளையும்

வளைத்து வளைத்து மேய்ந்ததே

வீட்டுக்காரி பார்த்ததால்

வினையும் வந்து சேர்ந்ததே

வீசி கம்பை போட்டதால்

காலில் காயமானதே

மற்றவர்கள் பொருளினை

அபகரித்தல் தவறென

பாடம் கற்றுக்கொண்டதே

அதுவும் நமக்குப் பாடமே!

- ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x