Last Updated : 04 Sep, 2017 05:14 PM

 

Published : 04 Sep 2017 05:14 PM
Last Updated : 04 Sep 2017 05:14 PM

அஞ்ஞானத்தைப் போக்கும் விஞ்ஞான ரதம்!

ரியும் மெழுகுவத்தி மூடிய கண்ணாடிக் குடுவைக்குள் வைக்கும்போது ஏன் அணைந்துவிடுகிறது? கப்பல் எப்படி மிதக்கிறது? குழந்தைகளின் இப்படிப்பட்ட அறிவியல் சந்தேகங்களை, எளிய ஆய்வுக்கூடப் பரிசோதனைகளின் மூலம் தீர்ப்பதற்கென்று கிராமம் கிராமமாகச் சென்றுகொண்டிருக்கிறது பரிக்‌ஷான் அறக்கட்டளையின் விஞ்ஞான ரதம்.

நடமாடும் அறிவியல்

“கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் செயல்முறை விளக்கத்தை அளிப்பதே எங்களுடைய முதல் நோக்கம். அடுத்து, மாணவர்கள் தானாக அறிவியல் பரிசோதனைகளைச் செய்ய வழிகாட்ட வேண்டும், அறிவியல் குறித்த மாணவர்களின் சந்தேகங்களைப் போக்க வேண்டும் என முடிவெடுத்தோம். அதற்கு, மாணவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இலவச சேவையளிக்க 2009-ம் ஆண்டில் பரிக்‌ஷான் அறக்கட்டளையின் மூலம் இந்த நடமாடும் அறிவியல் ஊர்தி சேவையைத் தொடங்கியவர் டாக்டர் பசுபதி. இந்த ஒரே பேருந்தில் 200 பரிசோதனைகளைச் செய்யும் வசதிகளோடு தொடங்கினோம். தற்போது இந்த விஞ்ஞான ஊர்தியில் 1,000 அறிவியல் பரிசோதனைகளைச் செய்யும் அளவுக்குத் திறனை மேம்படுத்தி உள்ளோம்” என்கிறார் விஞ்ஞானி அறிவரசன்.

இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் தொடர்பான பல பரிசோதனைகளையும் செயல்முறை விளக்கங்களையும் அளிக்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விஞ்ஞான ரதம் பயணிக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், பெரம்பலூர், உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இதுவரை பயணித்திருக்கிறது இந்த விஞ்ஞான ரதம்.

தற்போது கோயம்புத்தூரின் கிராமங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது விஞ்ஞான ரதம். “எங்களின் பணியைக் குறித்து அறிந்த ராமநாதபுரம் முன்னாள் ஆட்சியர், எங்களுக்கு அழைப்புவிடுத்தார். அதையடுத்து, அந்த மாவட்டத்தில் ே உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விஞ்ஞான ரதத்தைக் கொண்டு மாணவர்களுக்கு அறிவியல் பரிசோதனைகளைச் செய்து காண்பித்தோம்” என்றார் அறிவரசன்.

கழிப்பறை முதல் செயற்கைக்கோள்வரை

நடைமுறை வாழ்க்கையோடு அறிவியல் எங்கெல்லாம் பயன்படுகிறது, நெகிழி ஆபத்து, மதுவின் தீமை, இயற்கை விவசாயத்தின் நன்மை, மரம் வளர்ப்புக்கான தேவை, சுற்றுப்புறச் சுகாதாரத்தின் அவசியம், தனி நபர் கழிவறை சுகாதாரம் போன்றவற்றைப் பற்றியும் விளக்கமாக மாணவர்களிடம் பரிக்ஷான் அங்கத்தினர்கள் பேசுகிறார்கள். அதோடு உடல் பாகங்களில் மூளை, இதயம் போன்றவற்றின் செயல்பாடுகளையும் மாணவர்களுக்குப் புரியவைக்கிறார்கள்.

செயற்கைக்கோள்களின் செயல்பாட்டுக்கு அடிப்படையாக இருப்பது நியூட்டனின் முதல் விதி என்பதையும், ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்வதற்கு அடிப்படையாக அமைவது நியூட்டனின் மூன்றாம் விதி என்பதையும் எளிய பரிசோதனைகளின் மூலம் விளக்குகிறார்கள்.

“நாங்கள் செல்லும் கிராமப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் ஆர்வத்தை வளர்த்து அவர்களை சயின்ஸ் கிளப்களை உருவாக்கச் சொல்கிறோம். எளிய ஆய்வகப் பரிசோதனைகளில் மாணவர்களை ஈடுபடுத்தச் சொல்கிறோம். பள்ளி ஆசிரியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் நாங்களும் கற்றுக்கொள்கிறோம்.

அவர்களுக்கும் எங்களுக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடுக்கிறோம். இதுவரை 3 ஆயிரம் பள்ளிகளில் 10 லட்சம் மாணவர்கள் அறிவியல் ஊர்தியின் பல்வேறு அறிவியல் பரிசோதனைகளின் மூலமாகப் பலனடைந்திருக்கின்றனர். எங்களின் அறிவியல் பயணம் தொடரும்!” என்றார் அறிவரசன்.

தொடர்புக்கு: 8754409917

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x