Last Updated : 16 Feb, 2016 12:04 PM

 

Published : 16 Feb 2016 12:04 PM
Last Updated : 16 Feb 2016 12:04 PM

தேர்வைத் தைரியமாக எதிர்கொள்ளலாம்

ஆண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைக் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் பாடங்களைச் சுறுசுறுப்பாகப் படித்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் படிப்பது மட்டும் போதாது தேர்வை எதிர்கொள்ள. வேறு சில வழிமுறைகளும் தேவை, அவை என்ன?

தேர்வுக்கு முந்தைய தயாரிப்புகள்

# தேர்வுக்குக் குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக அனைத்துப் பாடங்களையும் படித்துவிடுவது நல்லது.

# எந்தப் பாடம் பிடிக்குமோ, அந்தப் பாடத்தை முதலில் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும்.

# தேர்வு நேரங்களில் கிரிக்கெட், டி.வி. போன்றவற்றை ஒதுக்கிவைத்து, பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

# தேர்வு நேரத்தில் உடல் நிலையை நன்றாக வைத்திருக்க வேண்டும். தேர்வு நாட்களில் ஜுரம், தலைவலி ஆகியவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

# தொடர்ந்து படிக்கும் நேரங்களில் அவ்வப்போது தேநீர், பிஸ்கெட், வெள்ளரிக்காய், பேரீச்சம் பழம் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும்

# கோடை காலம் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

தேர்வுக்குத் தயார் செய்யும் முறை

# மொத்தமாகப் பாடங்களைப் படிப்பது நல்லதல்ல. பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் படித்தால் மனதில் எளிதாகப் பாடங்கள் தங்கிவிடும்.

# தினசரி குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்.

# ஒரு மணி நேரம் படித்தால் 15 நிமிடங்கள் இடைவெளி விட வேண்டும்.

# படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். ஒருமுறை எழுதினால் 16 முறை படித்ததற்குச் சமம்.

# பாடங்களைப் படிக்க அட்டவணை தயார் செய்ய வேண்டும். அதைத் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தயார் செய்வது நல்லது.

# ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். நன்றாகப் படித்த பாடங்களுக்கு குறைந்த நேரம், அதிகம் படிக்காத பாடங்களுக்கு அதிக நேரம் என்று ஒதுக்க வேண்டும்.

# கணக்கு, வரைபடங்கள் ஆகியவற்றுக்குத் தினசரி நேரம் ஒதுக்குவது நல்லது.

# மதிப்பெண் வாரியாக, பாடத்தைப் பிரித்துப் படிக்க வேண்டும். முதலில் அதிக மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள், கடைசியாக ஒரு வார்த்தை மதிப்பெண்கள் என்று படிக்க வேண்டும்

# தொடர்ந்து படிப்பது அலுப்பூட்டும். எனவே படிப்புக்கு மத்தியில் மனதுக்குப் பிடித்த காரியங்களைச் செய்வது பரீட்சை தொடர்பான பதற்றத்தைத் தணிக்கும். தியானம் செய்யலாம் அல்லது பிடித்த விளையாட்டுகளைச் சிறிது நேரம் விளையாடலாம்.

தேர்வு சமயத்தில்

# தேர்வுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு முன்னதாகவே படிக்க வேண்டியவற்றைப் படித்து முடித்துவிட வேண்டும்.

# தேர்வுக்கு முந்தைய அரை மணி நேரத்தில் அவசர அவசரமாக எதையும் படிக்க முயல வேண்டாம்.

# தேர்வுக்குத் தேவையான அனைத்தும் இருக்கிறதா என்பதை ஒருமுறை சோதித்துப் பார்த்துவிட்டு தேர்வு அறைக்குள் நுழைய வேண்டும்.

# ஒரு மதிப்பெண்களுக்கான பதில்களை முதலில் எழுதி விட வேண்டும்.

# பிறகு தெரிந்த பதில்களை எழுத வேண்டும். தெரிந்த பதில்கள் எழுதுவதைத் தள்ளிப் போட வேண்டாம்

# கடைசி நேரத்தில் தெரியாத பதில்களை எழுதலாம். ஆனால் மனதில் பதற்றம் வேண்டாம்.

# தேர்வு முடிவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக எழுதுவதை நிறுத்திவிட்டு, கேள்வி எண்ணை போன்றவற்றை முறையாக எழுதியிருக்கிறோமா என்பதைச் சோதித்துக்கொள்ள வேண்டும்.

இப்படி முறையான பயிற்சியுடன் தேர்வைத் தைரியமாக எதிர்கொள்ளும்போது நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைப்பது உறுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x