Last Updated : 12 May, 2015 12:33 PM

 

Published : 12 May 2015 12:33 PM
Last Updated : 12 May 2015 12:33 PM

பிளஸ் 2-க்குப் பிறகு: எந்த பட்டப்படிப்பு? கலந்து பேசி கலக்கலாம்

கையில் மதிப்பெண் பட்டியலோடும், மேற்கல்வி கனவுகளோடும் பெற்றோர் சாரிசாரியாய் அலைந்துகொண்டிருக் கிறார்கள். அவர்களுடைய கவலையில் அர்த்தமிருக்கிறது. இதுவரையிலான பள்ளிப் படிப்பைவிட இனிமேலான உயர்கல்வியே குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

ஆனால் உகந்த கல்லூரி, படிப்பு, பாடப் பிரிவு உள்ளிட்ட முடிவுகளை எட்டுவதில் இந்த நேரத்தில்தான் ஏராளமான குழப்பங்கள் உருவாகும். கல்லூரிகளின் விளம்பரங்கள், படிப்பின் பிரகாசம், வேலைவாய்ப்பு, குடும்பப் பொருளாதாரம், குடும்பத்தின் விருப்பங்கள்... இப்படி எத்தனையோ அம்சங்களை அலசி ஆராய்ந்து பேசித் தீர்த்துத் திட்டவட்டமான முடிவை எட்ட வேண்டிய முக்கியமான நேரம் இது.

பிளஸ் 2-க்குப் பிறகு கல்லூரியில் சேர்வதற்கு முன் எதையெல்லாம் பரிசீலித்தாக வேண்டும்? உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்- குழந்தைகள் மத்தியில் உருப்படியான முடிவை எடுப்பது எப்படி? இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு விடை காண உதவுகிறார் திருச்சியைச் சேர்ந்த மாணவர் மனநல ஆலோசகர் பி. பிரதீபா.

விருப்பமும் திறமையும்

பெரும்பாலான குடும்பங்களில் இதில்தான் பிரச்சினைகள் முளைவிடும். ஒருவரின் திறமை எது, விருப்பம் எது என்று பகுத்தறிந்து பார்ப்பதில், அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் இடையே குழப்பமிருக்கும். உதாரணமாக, சேகருக்குப் பாடுவதில் நல்ல திறமை உண்டு. பள்ளிப் பருவம் நெடுக நிறைய பாராட்டுகளும் பரிசுகளும் குவித்திருக்கிறார். அதனாலேயே தான் ஒரு சிறந்த பாடகனாக வரவேண்டுமென்பதை லட்சியமாக வைத்திருப்பார். அவரளவில் கல்லூரி படிப்பு இரண்டாம்பட்சமாக வாய்ப்புண்டு. அல்லது தான் மிகச்சிறந்த பாடகனாக வருவதற்கு வாய்ப்பளிக்கும் கல்லூரியில் சேர்ந்தால் போதும் என்றிருப்பார்.

ஆனால், அவருடைய எதிர்காலம் குறித்துப் பெற்றோருக்கு அதிகக் கவலை இருக்கும். இப்படியான மாணவர்கள் முதலில் தன்னளவில் தெளிவைப் பெறுவதற்குப் பெற்றோர் வாய்ப்பளிக்க வேண்டும். பள்ளியைப் போலவே கல்லூரியிலும் பாடும் திறமையைப் பறைசாற்ற மேடைகள் கிடைக்கும் என்பதால், ஆர்வமுள்ள பாடப் பிரிவில் அவர் கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யலாம். பிற்காலத்தில் அவரே தனது ஆர்வத்தையும் திறமையையும் ஒரு புள்ளியில் சேர்த்துப் பிரகாசிக்க வாய்ப்புண்டு. எனவே, மாணவரின் கனவுகளைச் சிதைக்காமல் அவருடைய எதிர்காலத்தை அமைக்க உதவ வேண்டும்.

கலந்துரையாடுங்கள்

முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது, 'உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்' என இளம்வயதினரை எளிதில் ஒதுக்க முடியாது. முடிவுகள் தொடர்பாக அவர்கள் பரவலாக அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால் உணர்வுபூர்வமான அணுகுமுறையும், அனுபவம் இல்லாததும் அவர்களுடைய பாதக அம்சங்கள். எனவே, உகந்த கல்லூரி, படிப்பு குறித்துக் கலந்தாலோசிக்கையில் பெரியவர்கள்தான் இளைஞர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதற்கு முதலில் பெரியவர்கள் திறந்த மனதுடன் தயாராக வேண்டியது அவசியம்.

முன்தீர்மானம் வேண்டாம்

பெரும்பாலான வீடுகளில், மருத்துவர் ஆக முடியாத அப்பா தனது விருப்பத்தைத் தனது குழந்தைகளிடம் திணிப்பதையோ, அல்லது தான் ஒரு மருத்துவர் என்பதாலேயே தனது மகனையோ, மகளையோ தொழில்முறை வாரிசாக்க முனைவதையோ பார்க்கலாம். அதில் அவர்கள் அளவில் நியாயமிருக்கலாம். ஆனால், அதற்காகக் குழந்தைகளின் விருப்பங்களை உதாசீனம் செய்வது மொத்த நோக்கத்தையே பாழாக்கிவிடும். எனவே, முன்முடிவுகளை ஒதுக்கிவிட்டுக் குடும்பத்தினர் உட்கார்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

இதற்கு முதலில் பெற்றோர் தனியாகவும் குழந்தைகள் தனியாகவும் இந்தச் செயல்பாட்டை மேற்கொள்ளலாம். சேர வேண்டிய கல்லூரி, பாடப் பிரிவு, சேருபவரின் ஆர்வம், திறமை குறித்து சாதக, பாதக அம்சங்களைப் பட்டியலிட்டு எழுத வேண்டும். பின்னர், அதை மையமாகக் கொண்டு உருப்படியான ஒரு பொது முடிவுக்கு வரலாம். மாறாக, இருதரப்பும் ஒருவரையொருவர் தன்விருப்பத்துக்கு மாற்ற வேண்டும் என்று முன்தீர்மானத்துடன் அமர்ந்தால் குழப்பம்தான் மிஞ்சும்.

ஒருமித்த முடிவு சாத்தியமா?

மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோர் மத்தியிலும் சரியான கல்லூரி மற்றும் படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் போதிய தரவுகள் இருந்தும், தெளிவில்லாமல் தடுமாறு வார்கள். இரு தரப்பினருமே தமது தனிப்பட்ட விருப்பங்கள், தங்களுடைய நண்பர்களின் திணிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது போதாதென்று கல்லூரிகளின் கவர்ச்சிகரமான விளம்பர வலையில் சிக்குபவர்கள் அதிகம்.

இந்த நிலையில் முடிவுகளை எட்டுவதில் இழுபறி நீடித்தால் துறைசார்ந்த வல்லுநரின் ஆலோசனையை நாடலாம். அதேபோலக் குறிப்பிட்ட பாடப் பிரிவில் மாணவரின் ஈடுபாடு, படிப்பை முடிக்கும்போது அதன் எதிர்காலம் ஆகியவற்றை அந்தத்துறையில் இருப்பவர் மூலமாக அறியலாம். கூடவே குடும்பப் பொருளாதார நிலை, மாற்று ஏற்பாடுகள் போன்ற நடைமுறை பிரச்சினைகள் குறித்தும் பெற்றோர் தெளிவடைய வேண்டியது அவசியம்.

இதன்பிறகு எடுக்கப்படும் முடிவு மாணவரின் மேற்கல்விக்குச் சிறப்பான அடித்தளமாக அமையும். கூடவே, இந்த முடிவை எடுக்க மேற்கொண்ட முனைப்பில் பெற்றோர், குழந்தைகள் மத்தியில் புதியதொரு முதிர்ச்சியான பிணைப்பு பூக்கும். மாறாக, பெற்றோர் வீம்பு பிடித்தால் விளைவுகள் மாறிப்போகும். கூடவே பரஸ்பர இணக்கமும் குலைந்துபோகும். ஆகவே, ஒருமித்த முடிவுக்கு வாய்ப்பில்லாமல் போனாலும், அதை அடுத்தவருக்குப் புரிய வைக்க முயல்வதும் அதற்குப் போதிய அவகாசம் அளிப்பதும் நல்லது.

தீர்மானிக்கும் மதிப்பீடுகள்

குழந்தைகளின் எதிர்காலத்தைக் கணக்கிட்டு அவர்களுடைய நன்மைக்காக என்று பெற்றோர் எடுக்கும் முடிவுகளைக் குறைசொல்வதற்கில்லை. ஆனால் விருப்பமில்லாத படிப்பை மேற்கொள்பவரின் மன அழுத்தங்கள், பின்னாளில் கல்லூரிச் சூழலில் மேலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். பள்ளியில் பிரகாசித்தவர்கள் கல்லூரியில் சோபிக்காததற்கும் இன்ன பிற பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக்கொள்வதற்கும் பின்னணி இதுதான்.

எனவே, எதிர்காலத்துக்கு வலுச் சேர்க்கும் கல்லூரி படிப்புடன், மாணவர்களின் திறமையைப் பளிச்சிட வைக்கவும், இணையான கூடுதல் வாய்ப்புகளைத் தரலாம். உதாரணத்துக்குப் பொறியியல் மாணவன் தனது கனவான ஒளிப்படக் கலை குறித்துப் பகுதி நேரமாகப் படிக்கவோ, வாரத்தில் சில மணி நேரம் கேமராவோடு சுற்றவோ அனுமதிப்பதில் தவறில்லை. இந்த வகையில் ஒரு பொது முடிவுக்காகத் தனது குழந்தைகளுடன் சமரசம் செய்துகொள்வதும், அவற்றுக்கு இப்போதே உத்தரவாதம் அளிப்பதும் சிறப்பான பலனைத் தரும்.

இன்னும் சில பெற்றோர் குழந்தைகளின் புதுமையான படிப்பு ஆசைக்கு உடன்பட்டாலும், ஊரையும் உறவையும் நினைத்துத் தயங்குவார்கள். அவர்களுக்குச் சுய பரிசோதனை அவசியம். ஏனெனில் மேற்படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்பதெல்லாம் அர்த்தமுள்ளதாகவும் மனமகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையின் மீதும் எழுப்பினால் மட்டுமே நீடித்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x