Last Updated : 09 Aug, 2016 12:29 PM

 

Published : 09 Aug 2016 12:29 PM
Last Updated : 09 Aug 2016 12:29 PM

ஆளுமைகள் அறிவோம்: வரிவிதிப்புக்குப் புதிய தலைவர்

இந்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் தலைவராக இருந்த அதுலேஷ் ஜிண்டால் 2016 ஜூலை 30 அன்று ஓய்வுபெற்றார். இதையடுத்து இந்தப் பதவிக்கு வருவாய்த் துறையின் மூத்த அதிகாரியான ராணி சிங் நாயர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னர் நேரடி வரிவிதிப்பு வாரியத்தில் உறுப்பினராக இருந்துவந்தார். 1979-ல் இந்திய வருவாய்த் துறை அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்டவர் இவர். நேரடி வரிவிதிப்பு வாரியம் ஆறு உறுப்பினர்களையும் ஒரு தலைவரையும் கொண்ட அமைப்பு. இது மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வருமான வரித் துறையின் கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாகச் செயல்படுகிறது.

புதிய பிரதமர்

பிரசண்டா’ என அறியப்படுபவர் நேபாள்-மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் (Pushpa Kamal Dahal, 61). இவர் நேபாளத்தின் 39-வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஜூலை மாதம் அரசியல் குழப்பம் காரணமாக முந்தைய பிரதமர் கே.பி.ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்தது. புஷ்ப கமல் தாஹலுக்கு ஆதரவாக 363 வாக்குகளும் எதிராக 210 வாக்குகளும் கிடைத்திருந்தன. இவர் ஏற்கெனவே 2008 முதல் 2009 வரை நேபாளத்தின் பிரதமராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். இப்போது இரண்டாம் முறையாகப் பிரதமராகியிருக்கிறார்.



வான் சாகச சாதனையாளர்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் லூக் ஐகைன்ஸ் (Luke Aikins). வான் சாகசக் கலைஞரும் (Skydiver) விமான ஓட்டியுமான இவர் சமீபத்தில், தெற்கு கலிஃபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்குப் பகுதியில் வான் வெளியில் 25 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாராசூட் உதவியின்றிக் குதித்து ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவ்வளவு உயரத்திலிருந்து பாராசூட் உதவியின்றிக் குதித்த முதல் நபர் இவர். நூறுக்கு நூறு சதுர அடி கொண்ட ஒரு வலையைக் கட்டி அந்த வலையில் மிகச் சரியாகப் பாதுகாப்பாகக் குதித்திருக்கிறார் லூக் ஐகைன்ஸ். ஸ்கைடைவிங் என்னும் சாகசக் கலையைத் தனது 12- வது வயதிலேயே தொடங்கியிருக்கிறார் இவர்.

ரோஜர்ஸ் கோப்பை சாம்பியன்

கனடாவின் டொராண்டோவில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிக் (Novak Djokovic) சாம்பியன் பட்டம் வென்றார். இவர், உலகத் தர வரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த வீரர் நிஷிகோரியை எதிர்கொண்டார். 90 நிமிடம் நடந்த இந்தப் போட்டியில் ஜோகோவிக் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் நிஷிகோரியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். ரோஜர்ஸ் கோப்பை சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் 4-ம் முறையாக வென்றிருக்கிறார். இவர் வென்ற 66-ம் சர்வதேசப் பட்டம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x