Published : 25 Sep 2018 11:35 AM
Last Updated : 25 Sep 2018 11:35 AM

நிஜ வீரர்களுக்கு வீர வணக்கம்

வெள்ளித்திரையில் தோன்றும் நிழல் கதாநாயகர்களை ஆராதிப்பதை விட்டுவிட்டுத் தேசத்தின் எல்லையில் போராடும் நிஜக் கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இளைஞர்களுக்கு அழைப்புவிடுக்கும் நிகழ்ச்சி ‘மறத்தல் தகுமோ’.

ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்துக் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் ‘மறத்தல் தகுமோ- 2018’ பேச்சுப்போட்டியைச் சென்னை ஆண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘எஸ் பவுண்டேஷன்’ மூலம் வழக்கறிஞர் சுமதி அண்மையில் நடத்தினார்.

 ஏற்கெனவே முதல் கட்டப் போட்டிகளில் தேர்வாகி இறுதிச்சுற்றுக்கு வந்திருந்த 11 மாணவர்களும் தங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த ராணுவ வீரர்களில் ஒருவரைப் பற்றி இதில் உரையாற்றினர்.

வெறும் 24 வயதில் கார்கில் போரில் துணிந்து போரிட்டுப் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர் கேப்டன் சௌரப் காலியா.

“வீரம் என்பது ஆயுதம் ஏந்துவதில் அல்ல தங்களுடைய உயிரினைப் பணயம்வைத்துத் தேசத்தின் சுதந்திரத்தைக் காப்பதில் இருக்கிறது என்பதை கேப்டன் சௌரப் காலியாவின் போர் அனுபவங்கள் எனக்கு உணர்த்தின” என்று உள்ளப்பூர்வமாக உரையாற்றினார் ‘Spirit of Marathal Thagumo’ பரிசு வென்ற பாரத் சட்டக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி யாழினி.

இவரைப்போன்றே பேசிய அத்தனை மாணவ மாணவியரும் “நம் ராணுவ வீரர்கள் செய்த தியாகங்களுக்குப் பதிலாக நாம் என்ன செய்யப்போகிறோம்?” என்ற கேள்வியை எழுப்பத் தவறவில்லை. ஆங்கிலத்தில் உரைவீச்சு நிகழ்த்தியவர்களில் JBAS என்று பெயர் மாற்றப்பட்ட எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவி சாஃபா தபஸூம், கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் சதயம் திவாரி ஆகியோருக்குப் பரிசளிக்கப்பட்டது.

தமிழ் பேச்சாளர்களில் சென்னை குருநானக் கல்லூரி மாணவர் ஞானவேல், கோயம்புத்தூர் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர் ஹரிஷ் ஆகியோருக்குப் பரிசளிக்கப்பட்டது.

ராணுவத் தாக்குதலில் கடந்த ஆண்டு உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜாவின் மனைவி செல்வி இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருதினர்களில் ஒருவர். அவருக்கு எஸ்.பவுண்டேஷன் சார்பாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. மற்றொரு சிறப்பு விருதினரான திக்ஷா த்வேதி தான் தொகுத்து வெளியிட்ட “லெட்டர்ஸ் ஃபரம் கார்கில்” என்ற புத்தகம் குறித்து உரையாற்றினார். கார்கில் போரில் ஈடுபட்டிருந்தபோது தன் தந்தை தன் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதங்கள் உட்படக் கார்கில் வீரர்கள் பலர் தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இப்புத்தகம். எதை இழந்து எதை நமக்கு ராணுவ வீரர்கள் பெற்றுத் தருகிறார்கள் என்பதற்குச் சாட்சி இப்புத்தகம்.

‘கெஸ்ட் ஆஃப் ஹானர்’-ஆகச் சிறப்பிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஐயன் கார்டோஜோ, ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்த, ‘Paramavir chakra' காமிக்ஸ் புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x