Published : 07 May 2019 11:31 AM
Last Updated : 07 May 2019 11:31 AM

வேலை வேண்டுமா? - உதவி கமாண்டன்ட் ஆகலாம்

சீருடைப் பணியில் (Uniformed Service) சேர வேண்டும் என்பது சிலருக்கு லட்சியமாக இருக்கலாம்.  அவர்கள் தமிழகக் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர்,

டி.எஸ்.பி. பணியிலோ அல்லது அகில இந்திய அளவில் உயர் பணியாகக் கருதப்படும் ஐ.பி.எஸ். பணியிலோ சேர ஆசைப்படக்கூடும்.

மத்திய போலீஸ் படைகளில் சப்-இன்ஸ்பெக்டர், உதவி கமாண்டன்ட் பணிகளும் அவர்களை ஈர்க்கலாம். மத்திய போலீஸ் படைகள் என்று சொல்லும்போது அதில், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய-திபெத்திய போலீஸ் படை, எஸ்.எஸ்.பி. ஆகியவற்றைக் குறிக்கும். மத்திய போலீஸ் படைகளில் நேரடி உயர் பதவியாகக் கருதப்படுவது உதவி கமாண்டன்ட் பதவி.

இது,  ஐ.பி.எஸ். பணிக்கு இணையானது.  ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் போன்று உதவி கமாண்டன்ட் பதவிகளும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யூ.பி.எஸ்.சி.) மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன.

தேர்வு முறை

அந்த வகையில், தற்போது எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.), இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, எஸ்.எஸ்.பி.

படை ஆகியவற்றில் 323 உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு யூ.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு,  உடல்திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள்  தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

உதவி கமாண்டன்ட் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது - பொதுப் பிரிவினர் எனில் 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஆண், பெண் இருபாலரும் உதவி கமாண்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வில் மொத்தம்  2 தாள்கள். முதல் தாளில் (250 மதிப்பெண்) பொது விழிப்புத் திறன், நுண்ணறிவு பகுதியில் இருந்து  அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாவது தாளுக்கு 200 மதிப்பெண். இது, விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதில் பொது அறிவு, கட்டுரை  எழுதுதல், காம்ப்ரிஹென்ஷன் ஆகிய 3 பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக உடல்திறன்  தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் 100 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் இருக்கும். உடல்திறன்  தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இறுதியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கு 150 மதிப்பெண்.

தேசிய மாணவர் படையினருக்கு முன்னுரிமை

இறுதியாக  எழுத்துத்தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், இட ஒதுக்கீடு  ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். உதவி கமாண்டன்ட் பதவிக்கு என்.சி.சி.-யில் ‘பி’ அல்லது ‘சி’ சான்றிதழ் விரும்பத்தக்க தகுதியாகக் கருதப்படும்.

இச்சான்றிதழ் வைத்திருப்போருக்கு நேர்காணலின்போது முன்னுரிமை அளிக்கப்படும். எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கு  ஆன்லைனில் (www.upsconline.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை www.upsc.gov.in -ல் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

முக்கியத் தேதிகள்

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20 மே 2019

எழுத்துத் தேர்வு: 18 ஆகஸ்டு 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x