Last Updated : 15 May, 2018 11:39 AM

 

Published : 15 May 2018 11:39 AM
Last Updated : 15 May 2018 11:39 AM

புதுத் தொழில் பழகு 05: புத்தக வடிவில் தண்ணீர்க் குடுவை

இந்தியா உலகின் மிகப் பெரிய சந்தை. ஆனால் இந்தச் சந்தையை இங்குள்ள தொழில் முனைவோர் குறைவாகவே பயன்படுத்திவருகின்றனர். பெரும்பாலும் அயல்நாட்டு நிறுவனங்கள்தான் இந்தியச் சந்தையைக் கைக்கொண்டுள்ளனர். இன்றைக்குள்ளத் தொழில்முனைவோர்கள் சிலர் நம்முடைய இந்தச் சந்தையை கைக்கொள்ள முயன்றுவருகிறார்கள். அவர்களது புதிய யோசனைகள் அதற்குக் கைகொடுத்து வருகின்றன. அவர்களுள் ஒருவர்தான் கார்த்திக் பாலாஜி. ஸ்மார்ட் தண்ணீர்க் குடுவைதான் (Smart Bottle) அவரது புதிய யோசனை. புத்தக வடிவிலான தண்ணீர்க் குடுவைதான் இந்த ஸ்மார்ட் குடுவை.

தட்டை வடிவில் புதுமை

தண்ணீர்க் குடிக்கப் பாத்திரங்கள் பயன்படுத்துவது குறைந்து அருகிவிட்டது. கிராமங்களில்கூட இப்போது ப்ளாஸ்டிக் குடுவைகளைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்திவருகின்றனர். அலுவலகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் தண்ணீர் கொண்டுபோகும் பழக்கமும் இப்போது பரவாகியிருக்கிறது. இப்படிக் கொண்டுபோகும்போது உருண்டையான குடுவையைக் கையாள்வது கடினம்.

பையில் துருத்திக்கொண்டு இருக்கும். புத்தகம் மாதிரியான தட்டையான வடிவில் இருந்தால் இதைக் கொண்டுபோவது எளிது. இதையே தன் தொழிலுக்கான யோசனையாக கார்த்திக் தீர்மானித்திருக்கிறார்.

karthick

2013-ல் இதற்கான முதல் யோசனை வந்தது. ஆனால், உடனடியாக அதை என்னால் செய்து முடிக்க இயலவில்லை. ஏனென்றால் எனக்கு அந்தத் துறை குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை” என்கிறார் கார்த்தி. இவர் மின்னணுவியலில் பட்டயம் பயின்றவர். அதனால் ப்ளாஸ்டிக் குறித்து எந்த முன்னறிவும் இல்லை. பின்னால் தொழில் மேலாண்மையில் முதுநிலைப் பட்டம் வரை படித்துள்ளார்.

ஆர்வத்தால் ப்ளாஸ்டிக் தயாரிப்பு குறித்து பல புத்தகங்களைத் தேடிப் படித்துள்ளார். “நான் கல்லூரியின் கடைசிப் பெஞ்சு மாணவன்தான். பல பாடங்களில் அரியர்ஸ் வைத்துதான் படித்து முடித்தேன். இப்போது என்னைப் பார்த்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது” என்கிறார்.

கை மேல் பலன்

படித்ததுமட்டுமல்லாமல் கிண்டியிலுள்ள மத்திய ப்ளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்லூரியான சிப்பெட்டில் சென்று யோசனைகள் கேட்டுள்ளார். ஆனால், தட்டையான ப்ளாஸ்டிக் குடுவை தயாரிப்பு அவ்வளது சாத்தியமானது அல்ல எனவும் இந்தியாவில் அதற்கான இயந்திரங்கள் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே உள்ள இயந்திரங்களில் அவரது நண்பரின் உதவியுடன் சிறு மாற்றங்களைச் செய்துள்ளார். அப்படித்தான் இந்த ஸ்மார்ட் குடுவையை வடிவமைத்துள்ளார். ஆனால், இந்த நீண்ட செயல்பாட்டில் இரண்டாண்டுகள் ஓடிவிட்டன.

குடுவைகள் தயாரித்த பிறகு அதை விற்பனை செய்யவும் தொடக்கத்தில் சில சவால்கள் இருந்திருக்கின்றன. “இங்கே பொதுவாக பெரும்பாலான தொழில்கள் மொத்த வியாபாரத்தை நம்பிதான் செய்யப்படுகின்றன. ஆனால், நான் அதைச் செய்யக் கூடாது என நினைத்தேன். ஏனெனில் பொருளின் பயனை முழுமையாக வாடிக்கையாளரும் அடைய முடியாது. தயாரிப்பாளரும் அடைய முடியாது.

அதனால் பையை மாட்டிக்கொண்டு நானே தெரு, தெருவாக அலைந்தேன். உடனடியாகப் பலன் கிடைக்கவில்லை என்றாலும் என் முயற்சிக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. வாடிக்கையாளர்களே நேரடியாக வந்து என்னிடம் கொள்முதல் செய்துசெல்கின்றனர்” என்கிறார் கார்த்திக்.

தற்போது இணையம் வழியாகவும் விற்பனைசெய்து வருகிறார் கார்த்திக். இது மட்டுமல்லாது ஆண்களுக்கான மெல்லிய பணப்பையையும் புதுமையாக வடிவமைத்துள்ளார். இப்போது சந்தையில் கிடைக்கும் பணப் பை கனத்துப் போய் இருக்கும். அதனால் அதை ஃபேண்ட் பாக்கெட்டில் வைப்பது சிரமம். இதை அவரது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்திருக்கிறார். அதனால் மெல்லிய ஒரு பணப்பையை அதன் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார். இதற்கும் இப்போது நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x