Published : 21 Nov 2017 10:49 AM
Last Updated : 21 Nov 2017 10:49 AM

சேதி தெரியுமா? - இந்தியா, பிலிப்பைன்ஸ் இடையே நான்கு ஒப்பந்தங்கள்

இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே விவசாயம், பாதுகாப்பு, சிறு, குறு தொழில்நிறுவனங்கள், சர்வதேச விவகாரம் தொடர்பான நான்கு ஒப்பந்தங்கள் நவம்பர் 13 அன்று கையெழுத்தாகியிருக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுட்ர்ட் இடையே அந்நாட்டு தலைநகர் மணிலாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பயணத்தின்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் இயங்கிவரும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் மரபணு வங்கிக்கு இரண்டு இந்திய அரிசி விதை வகைகளை வழங்கியிருக்கிறார்.  

உலகின் முதல் மின்சார சரக்குக் கப்பல்

முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மின்சார சரக்குக் கப்பல் சீனாவின் குவாங்டோங் மாகாண தலைநகரான ‘குவாங்சூ’வில் அறிமுகப்பட்டிருக்கிறது. லித்தியம் அயனி பேட்டரியின் பயன்பாட்டில் இயங்கும் உலகின் முதல் இது. ‘பேர்ல்’ ஆற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு நிலக்கரி கொண்டுசெல்வதற்கு இந்தக் கப்பல் பயன்படவிருக்கிறது. 2000 மெட்ரிக் டன் கப்பல் எடையுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கப்பல் 40 கார்களின் ஆற்றலுடன் இயங்கும் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. எரிபொருள்களின் பயன்பாடு இல்லாததால், இந்த மின்சாரக் கப்பல் ஆற்றின் சூழலுக்கும் உகந்ததாகக் கருதபடுகிறது.

21CHGOW_SULPHUR_EMISSION100

சல்ஃபர் டைஆக்ஸைடை அதிகமாக உமிழும் இந்தியா

உலகில் ‘சல்ஃபர் டைஆக்ஸைடை’ அதிகமாக வெளியிடும் நாடுகளில் சீனாவுக்குப் பின்க்குத்தள்ளி இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கவிருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்தியருக்கும் இந்த ஆய்வில், 2007 முதல் இந்தியாவின் ‘சல்ஃபர் டைஆக்ஸைட்’ உமிழ்வு அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி மின் உற்பத்தி ஆலை 2012-ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இந்த உமிழ்வு அதிகரித்திருக்கிறது. உமிழ்வைக் கட்டுபடுத்த இந்தியா எந்த முயற்சியும் இன்னும் எடுக்காத நிலையில், சீனாவில் ‘சல்ஃபர் டைஆக்ஸைடை’ உமிழ்வு 75 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

117CHGOW_PANKAJ100 

17வது உலக பில்லியர்ட்ஸ் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானி

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நவம்பர் 12 அன்று நடைபெற்ற ‘ஐபிஎஸ்எஃப்’ உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதினேழாவது முறையாகப் பட்டம் வென்றிருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் அத்வானி. இங்கிலாந்தைச் சேர்ந்த மைக் ரஸ்ஸலை வீழ்த்தி இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார் அவர். ‘பில்லியர்ட்ஸ்’, ‘ஸ்னூக்கர்’ என்ற இரண்டு விளையாட்டுகளிலும் சர்வதேச பட்டங்களை வென்றிருக்கிறார் பங்கஜ் அத்வானி.  

முதல் கடலோரப் பொருளாதார மண்டலம்

இந்தியாவின் முதல் கடலோரப் பொருளாதார மண்டலம் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜவாஹர்லால் துறைமுகத்தில் அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது. மும்பை, தானே, புனே, நாஸிக், ராய்கர் போன்ற பகுதிகளைச் சுற்றி இந்தப் பொருளாதார மண்டலம் அமையவிருக்கிறது. 200 ஹெக்டர் நிலப் பரப்பில் உருவாக்கப்படும் இந்த மண்டலத்தில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 45 நிறுவனங்கள் இடம்பெறுவதற்கு விண்ணப்பித்திருக்கின்றன. 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் எழுப்பப்படவிருக்கும் இந்த மண்டலம் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

37-வது இந்தியச் சர்வதேச வர்த்தகக் காட்சி தொடங்கியது

37-வது இந்தியச் சர்வதேச வர்த்தகக் காட்சியை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லியின் பிரகதி மைதானில் நவம்பர் 14 அன்று தொடங்கிவைத்தார். இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (ITPO) ஒருங்கிணைத்த இந்தக் காட்சி, 14 நாட்கள் நடைபெறுகிறது. ‘ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்அப் இந்தியா’ என்ற கருப்பொருளில் இந்த வர்த்தகக் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காட்சியின் பங்குதாரர் நாடாக வியட்நாமும் கவனம்பெறும் நாடாக கிர்கிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சியின் பங்குதாரர் மாநிலமாக ஜார்கண்ட் இடம்பெற்றிருக்கிறது. 22 நாடுகளைச் சேர்ந்த 7000 பேர் இதில் கலந்துகொண்டனர்.  

தெலங்கானாவின் 2-வது அலுவல் மொழி: உருது

தெலங்கானா மாநில அரசு, அம்மாநிலத்தின் 31 மாவட்டங்களிலும் உருது மொழியை இரண்டாவது அலுவல் மொழியாக அறிவித்துள்ளது. நவம்பர் 16 அன்று இதற்கான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தெலங்கானா மாநிலத்தில் உருது மொழி பேசும் மக்கள் 12.69 சதவீதமாக அதிகரித்திருப்பதால், இந்த முடிவை அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அம்மாநிலத்தின் அனைத்து அலுவலகங்களிலும் இன்னும் 60 நாட்களில் உருது பேசும் அலுவலகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்திருக்கிறது. அத்துடன், அம்மாநில அரசின் போட்டித் தேர்வுகளும் உருது மொழியிலும் நடத்தப்படும் என்று தெலங்கானா அரசு தெரிவித்திருக்கிறது.  

கற்றல் விளைவு ஆய்வு: 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

மாணவர்களின் கற்றல் விளைவுகளை ஆய்வுசெய்வதற்காக நவம்பர் 13 அன்று, நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ‘தேசியச் சாதனை ஆய்வு’ (National Achievement Survey) நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 25 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். மூன்று, ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி மையத்தால் (NCERT) உருவாக்கப்பட்ட இந்த ஆய்வில், மாணவர்களின் கணிதம், மொழி, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் திறன்கள் சோதிக்கப்பட்டன. நாட்டின் 700 மாவட்டங்களைச் சேர்ந்த 1.1 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x