Published : 19 May 2023 07:16 AM
Last Updated : 19 May 2023 07:16 AM

பஞ்சாப் - ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை: தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்

கோப்புப்படம்

தரம்சாலா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாகும்.

ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி,7 தோல்விகளை பதிவு செய்து 12 புள்ளிகளை பெற்றுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி நிகர ரன் ரேட் ( 0.140) அடிப்படையில் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி -0.308 ரன் ரேட்டுடன் 8-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். மாறாக வெற்றி பெறும் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் முடிவை பொறுத்து அமையும்.

பஞ்சாப் வெற்றி பெற்றாலும் அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமான பணியாகவே இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்க ஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான காகிசோ ரபாடா, சாம் கரண், அர்ஷ்தீப் சிங், நேதன் எலிஸ் ஆகியோர் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் தாரை வார்ப்பது ஒட்டுமொத்த அணிக்கும் அழுத்தத்தை உருவாக்குகிறது.

ரபாடா இந்த சீசன் முழுவதுமே தனது திறமைக்கு ஏற்ற அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. அதேவேளையில் அர்ஷ்தீப் சிங்கை கடந்த சில ஆட்டங்களாக பவர்பிளேவிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் பயன்படுத்தாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏனெனில் தொடக்க ஓவர்களில் தனது ஸ்விங்காலும் இறுதிக்கட்ட ஓவர்களில் யார்க்கர்களாலும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கும் திறன் கொண்டவர் அர்ஷ்தீப் சிங்.

இந்த சீசனில் முதல் பாதியில் தொடர்ச்சியாக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங், பிற்பாதியில் உத்வேகத்துடன் செயல்படுவதில் தேக்கம் அடைந்தார். இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி உள்ளதால்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதில் அர்ஷ்தீப் சிங் தீவிரம் காட்டக்கூடும்.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவண் கடைசி ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார்ரை வீசச் செய்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த ஓவரில் டெல்லி அணி 23 ரன்களை வேட்டையாடி இருந்தது. இந்த ஆட்டத்தில் 214 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசமாக ஹர்பிரீத் பிரார் வீசிய கடைசி ஓவர் அமைந்திருந்தது. பேட்டிங்கில் ஷிகர் தவண் கடைசி இரு ஆட்டங்களிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. இன்றைய ஆட்டம்முக்கியத்துவம் என்பதால் பேட்டிங்வரிசையை அவர், முன்னின்று வழிநடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணியானது இந்த சீசனை சிறப்பான வகையில் தொடங்கியது. தனது முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அடுத்து விளையாடிய 7 ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியால் 2 வெற்றிகளை மட்டுமே பெற முடிந்தது. கடைசியாக சொந்த மண்ணில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 172 ரன்களை துரத்தியபோது 59 ரன்களுக்கு சுருண்டு மோசமான தோல்வியை பதிவு செய்தது.

இதில் இருந்து மீண்டு வந்து வலுவான செயல்திறனை வெளிப்படுத்துவதில் ராஜஸ்தான் அணி கவனம் செலுத்தக்கூடும். ஜாஸ் பட்லர் சில பரபரப்பான இன்னிங்ஸ்களை விளையாடினார். ஆனால் அவரிடம் இருந்து தொடர்ச்சியான செயல்பாடு இல்லை. கடந்த இரு ஆட்டங்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய அவர், மீண்டும் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். இதேபோன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால், யுவேந்திர சாஹல் ஆகியோரும் பார்முக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x