Published : 09 May 2023 05:33 PM
Last Updated : 09 May 2023 05:33 PM

மீண்டும் சர்பராஸ் கானுக்கு துரோகம்: இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிப்பு

சர்பராஸ் கான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஓவலில் நடைபெறவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியதால் அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் மும்பையின் நட்சத்திர பேட்டர், ரன் மெஷின் சர்பராஸ் கான்.

ஆஸ்திரேலியா அணி இங்கு வந்திருந்த போதும் 360 டிகிரியில் அவுட் ஆகும் சூரிய குமார் யாதவுக்குத்தான் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டதே தவிர சர்பராஸ் கான் அப்போதும் ஒதுக்கப்பட்டார். சர்பராஸ் கான் 37 முதல் தரப் போட்டியில், அதாவது சிகப்புப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் 3,505 ரன்களை 79.65 என்ற வேறு எந்த நடப்பு இந்திய வீரரும் வைத்திராத சராசரியில் எடுத்துள்ளார். இதில் 13 சதங்கள் 9 அரைசதங்கள் அடங்கும். இந்த வடிவத்திலேயே 393 பவுண்டரிகளையும் 66 சிக்சர்களையும் விளாசியுள்ளார் சர்பராஸ் கான். சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட்டும் சாதாரணமல்ல 79.65 வைத்திருக்கிறார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 301 நாட் அவுட். கடைசி 6 முதல் தரப் போட்டிகளில் மூன்று சதங்கள் ஒரு அரைசதம். இன்னும் என்னதான் வேண்டுமாம் இங்கு செலக்ட் ஆக? அணித்தேர்வுக்குழுவுக்கும் பிசிசிஐக்கும் ஜெய் ஷாவுக்குமே வெளிச்சம்.

இஷான் கிஷனின் சமீபத்திய ஆட்டங்கள் என்ன? வெறும் ஐபிஎல் தொடர் தான். இதில் 10 ஆட்டங்களில் 293 ரன்களை எடுத்துள்ளார். ஒன்றும் பெரிதாக எழும்பவில்லை. ஆனால் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதுவும் இறுதிப் போட்டியில், அதுவும் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதில் ஏதாவது லாஜிக் இருக்கின்றதா என்பதே அனைவரது கேள்வியுமாக இருக்கின்றது.

இப்போதும் கூட ருதுராஜ் கெய்க்வாட், சூரியகுமார் யாதவ் பேக்-அப் வீரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் சர்பராஸ் கான் புறமொதுக்கப்பட்டுள்ளார். முகேஷ் குமார் என்ற பவுலரை ரிசர்வ் பவுலராக சேர்த்துள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே வீரர் என்பதைத் தாண்டியும் ஐபிஎல் தொடரின் தரமற்ற பந்து வீச்சு விட்டுக்கொடுப்பு மேட்ச்களில் அவர் சாத்துவதை தவிர வேறு ஏதாவது சாதித்துள்ளாரா என்பது தெரியவில்லை. அபிமன்யூ ஈஸ்வரனைத்தான் உண்மையில் இவருக்குப் பதிலாக தேர்வு செய்திருக்க வேண்டும். சர்பராஸ் கானை அணியிலேயே எடுத்திருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

சர்பராஸ் கான் 2022-23 ரஞ்சி சீசனில் 556 ரன்களை 92.66 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஆனால் இவரை ஒதுக்குவது அநியாயமாகவே அனைவருக்கும் படுகின்றது. இன்னும் எத்தனைக்காலம்தான் சர்பராஸ் கான் காத்திருக்க வேண்டும்? ஏன் ரவி சாஸ்திரி பேசுவதில்லை, கவாஸ்கர் பேசுவதில்லை, கம்பீர் பேசுவதில்லை, கோலி, ரோஹித் சர்மா, டிராவிட் யாரும் சர்பராஸ் ஒதுக்கப்படுவது பற்றி ஏன் பேசுவதில்லை?

இப்படியேதான் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங்கை காலி செய்தார்கள். உள்நாட்டு கிரிக்கெட் ஆடுவது எதற்காக பிராந்திய நலன்களுக்காகவா? நாட்டுக்காக ஆட வேண்டும் என்ற பிரயத்தனத்தினால்தானே? அப்படி இங்கு பயங்கரமாக ஆடியும் வாய்ப்புக் கிடைக்கவில்லை எனில் சர்பராஸ் போன்றோர் கடைசியாக ஒருமுறை பிசிசிஐ அணித்தேர்வுக்குழுவுடன் கேட்டு விட்டு ரிட்டையர் ஆகி மற்ற அயல்நாட்டு டி20 லீகுகளில் ஆடுவது சிறந்தது.

இல்லையெனில் பங்கஜ் சிங்குக்கு நடந்த கதிதான் நடக்கும் அல்லது கருண் நாயரை ஒழித்தாற்போல், மணீஷ் பாண்டேயை ஒழித்தாற்போல் சர்பராஸ் கான் என்னும் மகா திறமைசாலியின் திறமையும் இருட்டுக்குள் தள்ளப்பட்டு விடும். பிசிசிஐ-யின் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மைக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் சர்பராஸ் கான் ஏன் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவதில்லை என்பது மக்களுக்குத் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x