Published : 16 Feb 2023 06:11 AM
Last Updated : 16 Feb 2023 06:11 AM

சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் - கால் இறுதி சுற்றில் ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி

சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

100 புள்ளிகள் கொண்ட சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடியானது போர்ச்சுகலின் ஃபிரடெரிகோ ஃபெரீரா சில்வா, அமெரிக்காவின் நிக்கோலஸ் மோரேனோ டி அல்போரன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், முகுந்த் சசிகுமார் இணை சீனதைபேவின் யு சியு சு, இந்தோனேஷியாவின் கிறிஸ்டோபர் ருங்கட் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சுமித் நாகல், முகுந்த் சசிகுமார் ஜோடி 7-6, 2-1 என முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக யு சியு சு,கிறிஸ்டோபர் ருங்கட் ஜோடி விலகியது. இதனால் சுமித் நாகல், முகுந்த் சசிகுமார் ஜோடி கால் இறுதி சுற்றில் நுழைந்தது.

இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், விஷ்ணுவர்தன் ஜோடி 6-1, 6-7, 5-10 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் ஜி சங்நாம், மின்க்யு சாங் ஜோடியிடம் போராடி தோல்வி அடைந்தது.

ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீன தைபேவின் சுன்-சின் செங் 2-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் நிக்கோலஸ் மோரேனோ டி அல்போரனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மற்ற ஆட்டங்களில் ஜப்பானின் யசுதக உச்சியமா, பிரான்ஸின் ஆர்தர் காசாக்ஸ், ஆஸ்திரேலியாவின் டேன் ஸ்வீனி ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், சீன தைபேவின் ஜேசன் ஜங்குடன் மோதுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x