Published : 15 Feb 2023 09:59 PM
Last Updated : 15 Feb 2023 09:59 PM

WT20 WC | கேப்டன் ஹர்மன்பிரீத், ரிச்சா கோஷ் பொறுப்பான ஆட்டம்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி

மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய ரிச்சா கோஷ்

கேப் டவுன்: நடப்பு டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் என இருவரும் பொறுப்புடன் ஆடி வெற்றியை வசம் செய்தனர்.

தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 26-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. குரூப் மற்றும் நாக்-அவுட் என 23 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது அந்த அணி. இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பூஜா மற்றும் ரேணுகா என இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர். ஹென்றி, ரன் அவுட் செய்யப்பட்டார்.

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. ஷெபாலி மற்றும் ஸ்மிருதி என இருவரும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஸ்மிருதி, 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ், 1 ரன் எடுத்து அவுட்டானார். ஷெபாலி, 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணி 7.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை எடுத்திருந்தது.

பின்னர் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் ரிச்சா கோஷ், 72 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் நிதானமாக இன்னிங்ஸை அணுகினர். 42 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஹர்மன்பிரீத் அவுட் ஆனார். தொடர்ந்து தேவிகா வைத்தியா வந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட வெற்றிக்கான அந்த நான்கு ரன்களை ரிச்சா பவுண்டரியாக விளாசி இருந்தார்.

18.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை வெற்றிகரமாக எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x