Published : 15 Feb 2023 06:51 AM
Last Updated : 15 Feb 2023 06:51 AM

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 2வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.

40 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தின் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துள்ளன. இதற்கு காரணம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதுதான். கடைசியாக அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதன் பின்னர் தற்போதுதான் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ராஜன் மஞ்சந்தா கூறும்போது, “2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி வழிவார்கள் என எதிர்பார்க்கிறோம். நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்லியில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

24 ஆயிரம் டிக்கெட்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 8 ஆயிரம் டிக்கெட்கள் டெல்லி கிரிக்கெட் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள டிக்கெட்கள் போட்டியை காண வரும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதி கிரிக்கெட் போட்டிக்கான பாதுகாப்பை வழங்கும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x