Published : 25 Dec 2022 09:43 PM
Last Updated : 25 Dec 2022 09:43 PM

அஸ்வினை விஞ்ஞானி என அழைத்த சேவாக்: வைரலான ட்வீட்

சேவாக் மற்றும் அஸ்வின் | கோப்புப்படம்

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அஸ்வின் - ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி. இந்த சூழலில் அஸ்வினை ‘விஞ்ஞானி’ என சொல்லி ட்வீட் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்.

வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விரட்டியது. தொடக்கம் முதலே இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. அப்போது அஸ்வின் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது இந்திய அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது.

இருவரும் 8-வது விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 62 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இந்தப் போட்டியில் மொத்தம் 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இந்த சூழலில்தான் சேவாக், அஸ்வின் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

“அருமையான இன்னிங்ஸ் ஆடினார் அஸ்வின். ஷ்ரேயஸ் ஐயருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார். இதை செய்தது விஞ்ஞானி. எப்படியோ இது கிடைத்துவிட்டது” என சேவாக் ட்வீட் செய்துள்ளார். இந்த தொடரை இந்திய அணி 2-0 என வெற்றி பெற்றுள்ளது. இந்த ட்வீட் சுமார் 1 மில்லியன் பார்வையை பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x